இனிமே டுபு...டுபு... டுபு... ன்னுலாம் சத்தம் வராது... ராயல் என்ஃபீல்டு பைக்கும் அமைதியா போகும்... எப்படி?
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இது குறித்த முழுமையான தெளிவான தகவல்களைக் காணலாம்.

ஆட்டோமொபைல் துறை மெல்ல மெல்லத் தனது முகத்தை மாற்றிக்கொண்டே வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகன செக்மெண்டில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் பெரும் புரட்சியே நடந்துவருகிறது. மக்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.பெட்ரோல் வாகனத்திற்கும் எலெக்ட்ரிக் வாகனத்திற்கும் விலை மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்பதால் பலர் எலெக்ட்ரிக்வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

மக்கள் எலெக்டரிக் வாகனங்கள் பக்கம் மெல்ல மெல்லத் திரும்புவதை உணர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது தங்கள் தயாரிப்பில் எலெக்டரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தற்போது ஹீரோ நிறுவனம் ஹீரோ எலெக்ட்ரிக் என்ற ஒரு தனி நிறுவனத்தையே உருவாக்கி எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்கிறது.

இந்நிலையில் இன்று இளைஞர்கள் அதிகம் விரும்பும் பைக்குகளை தயாரிக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் இதற்கு விதி விலக்கு அல்ல. அந்நிறுவனமும் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் மார்கெட் என்பதை உணர்ந்து தங்கள் பிராண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் இதைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக அந்நிறுவனம் இந்தியா மற்றும் இங்கிலாந்தில் நடத்தி வரும் டெக்னாலஜி சென்டர் என்ற ஆய்வு மையத்திற்கு எலெக்ட்ரிக் வாகன பிரிவில் பணியாற்ற புதிய இளம் பொறியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. அவர்கள் ராயல் என்ஃபீல்டு பிராண்டில் எப்படிப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கலாம் எனமுடிவு செய்வார்கள்.

ஏற்கனவே இருக்கும் பைக்குகளை எலெக்ட்ரிக் பைக்குளாக மாற்றலாமா? அல்லது முழுவதுமாக ஸ்கிராட்ச்சிலிருந்து எலெக்ட்ரிக் பைக்குகளை உருவாக்கலாமா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருக்கின்றனர். மார்கெட்டில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் பைக் கிட்களை வாங்கி எலெக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்காமல் முற்றிலுமாக அவர்களது சொந்த தொழினுட்பத்தை
உருவாக்க முடிவு செய்துள்ளனர்.

தற்போது வரை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது எலெக்ட்ரிக் பைக்கிற்கான தயாரிப்பு மற்றும் ஆய்வை வேகப்படுத்தவில்லை. பணிகள் மெதுவாகத் தான் நடக்கிறது. இந்நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை வரும் 2025ம் ஆண்டு தான் விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கின்றனர். தற்போது இதன்புரோட்டோடைப்பை டெஸ்ட் செய்து வருகின்றனர்.

மார்கெட்டில் தற்போது ஸ்கூட்டர் செக்மெண்டில் தான் எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகமாக இருக்கிறது. ஆனால் பைக் செக்மெண்டில் சில வாகனங்கள் இருந்தாலும் மக்கள் கவனம் இன்னும் அதன் மீது திரும்பவில்லை. எலெக்ட்ரிக் பைக்குகள் எல்லாம் பெட்ரோல் பைக்கின் இடத்தை நிரப்பிவிட முடியுமா என்ற சந்தேகம் மக்களுக்கு இருக்கிறது.

வருங்காலத்தில் இந்தியா மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகன நுகர்வோர்களை கொண்டிருக்கும் எனப் பல கணிப்புகள் சொல்லப்படுகிறது. தற்போது பெட்ரோல் இன்ஜின் இருசக்கர வாகனங்களை விட எலெக்ட்ரிக் பைக்கின் பயண செலவு மிகவும் குறைவு அதனால் மக்கள் இந்த வாகனத்தை வாங்க விரும்புகின்றனர்.

பொதுவாக ராயல் என்ஃபீல்டின் பைக்குகள் என்றால் அதிலிருந்து வரும் சத்தம் தான் பிரபலம், தற்போது பிஎஸ்6 கட்டுப்பாடு வந்த பிறகு இந்த பைக்கிலிருந்து வெளியாகும் சத்தம் பழைய பைக்கில் உள்ளது போல இல்லை எனப் பலர் பேசி வருகின்றனர். எலெக்ட்ரிக் வாகனம் என்றால் இன்ஜின் சத்தமே இல்லாமல் இயங்கும் திறன் கொண்டது. ராயல் என்ஃபீல்டில் சத்தமே இல்லாமல் ஒரு பைக் அறிமுகமானால் எப்படி இருக்கும்? மக்கள் அதை ரசிப்பார்களா? உங்களுக்கு அப்படி ஒரு பைக் வந்தால் அது பிடிக்குமா? கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








