ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமல்ல, சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டருக்கும் புக்கிங் குவியுது!! டெலிவிரி எப்போது?
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பலத்த வரவேற்பை பெற்றுவரும் நிலையில், சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் நாளுக்கு நாள் முன்பதிவுகள் குவிந்து வருவதாக சிம்பிள் எனர்ஜி நிறுவனர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்கள் உள்ளிட்ட கமர்ஷியல் வாகனங்களினால் அதிகரித்து வருகிறது. அதேநேரம் சாலைகளில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களையும் தற்போது பரவலாக பார்க்க முடிகிறது. குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க பலர் விரும்ப ஆரம்பித்துள்ளனர்.

இத்தகைய தேவையை சரியாக பயன்படுத்தி கொள்ளும் முயற்சியாக பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இ-ஸ்கூட்டர்களை தயாரித்து கடந்த சில வருடங்களாக விற்பனைக்கு கொண்டுவந்த வண்ணம் உள்ளன. இந்த வகையில், கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசிய சுதந்திர தினத்தின் போது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக எஸ்1 -ஐ அறிமுகம் செய்தது.

மேலும் இதே தினத்தில் தான் பெங்களூரை சேர்ந்த சிம்பிள் எனர்ஜி நிறுவனமும் அதன் சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இதில் ஓலா எஸ்1 இ-ஸ்கூட்டர்கள் ஏற்கனவே விற்பனைக்கு வந்தவிட்ட நிலையில், இன்னமும் சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் கைக்கு சென்றடையவில்லை. முன்பதிவுகள் மட்டுமே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது, கடந்த 2 மாதங்களில் மட்டும் சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஒவ்வொரு நாளும் சுமார் 55% அதிகரித்து வருவதாக சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனர் சுஹாஸ் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான இவரது டுவிட்டர் பதிவில், "சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களினால் எங்கள் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மாறி இருக்கும் என நினைத்தேன்.

ஆனால் நடப்பவை வேறு மாதிரியாக உள்ளது. கடந்த 2 மாதங்களில், எங்களது தினசரி முன்பதிவுகள் 55% வரையில் அதிகரித்துள்ளன" என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றப்படி சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் எப்போது ஆரம்பிக்கும் என்பதை பற்றிய அறிவிப்பு எதையும் சுஹாஸ் ராஜ்குமார் வெளியிடவில்லை. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த இ-ஸ்கூட்டர் வருகிற 2022 ஜூன் மாதத்தில் இருந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்படலாம்.

இதற்கிடையில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சீமென்ஸ் என்ற மென்பொருள் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது. நமது சென்னையிலும் கிண்டியில் கிளை அலுவகத்தினை கொண்டுள்ள சீமென்ஸின் டீம் செண்டர் எக்ஸ் என்ற ஆயுட் முழுவதற்குமான நிர்வாக (PLM) மென்பொருளை இந்த கூட்டணியின்படி சிம்பிள் எனர்ஜி பயன்படுத்தி கொள்ளவுள்ளது. இதன் மூலமாக டிஜிட்டல் தளத்தில் தன்னை மேம்படுத்தி கொள்ள இந்த பெங்களூர் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பி.எல்.எம் தொழிற்நுட்பம் தங்களது வாகனங்களை பற்றிய விபரங்களும், வாகனத்தை டெலிவிரி பெறுவது வரையிலான வழிக்காட்டுதல்களும் இணைய பக்கத்தில் தடையில்லாமலும், உயர் தரத்திலும் கிடைக்கும் என சிம்பிள் எனர்ஜி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்நுட்பங்களை பகிர்வதற்காக PROLIM என்ற சிமென்ஸின் தொழிற்நுட்ப கூட்டணி நிறுவனத்துடனும் சிம்பிள் எனர்ஜி இணைந்துள்ளது.

இதுகுறித்து சிம்பிள் எனர்ஜியின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான சுஹாஸ் ராஜ்குமார் கருத்து தெரிவிக்கையில், "இவி உற்பத்தியை திறமையாகவும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் மாற்ற டிஜிட்டல் மயமாக்கல் இன்றியமையாதது. மாசு இல்லா எரிசக்தி தீர்வுகளில் கவனம் செலுத்தும் ஸ்டார்ட்அப்-ஆக இருப்பதால், சீமென்ஸ் & ப்ரோலிம் என்ற தயாரிப்பு மேம்பாடு மற்றும் கண்டுப்பிடிப்புகளில் மிகவும் புகழ்பெற்ற இரு டிஜிட்டல் தொழிற்நுட்ப பிராண்ட்களை எங்கள் மையத்தில் வைத்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

சிம்பிள் எனர்ஜி தங்களது புரவலர்களுக்கு உயர்தர, நிலையான தயாரிப்புகளை வழங்க உறுதி பூண்டுள்ளது. மேலும் இ-மொபைலிட்டி பிரிவில் புதுமைகளை ஊக்குவிக்கும்" என்றார். இத்தகைய கூட்டணிகளினால் பயன்பெறும் வாடிக்கையாளர்களினால் சிம்பிள் எனர்ஜி ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகள் மேலும் குவியவும் வாய்ப்புள்ளது.

சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.8 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை தேவைக்கு ஏற்ப ஸ்கூட்டரில் இருந்து நீக்கி கொள்ளலாம். இதன் மூலம் செயல்படும் எலக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 9.38 எச்பி & 72 என்எம் டார்க் திறனை இயக்க ஆற்றலாக ஸ்கூட்டருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது.


Click it and Unblock the Notifications








