சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 24 மணி நேரத்தில் கிடைத்த 20,000 புக்கிங்... வாங்குவதற்கு அல்ல!
சிம்பிள் ஒன் (Simple ONE) எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 24 மணி நேரத்தில் 20 ஆயிரம் புக்கிங் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முன்பதிவுகள் எதற்கானவை என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் சிம்பிள் எனெர்ஜி (Simple Energy). இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு பெரிதும் எதிர்பார்ப்பு இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கின்றது. 'ஒன்' (ONE) எனும் பெயர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே நிறுவனம் வெகு விரைவில் இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

இந்த வாகனத்திற்கே சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் தொடங்கும் தேதியை நிறுவனம் அறிவித்தது. வரும் ஜூலை 20ம் தேதியில் இருந்து அது தொடங்க இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, மின்சார ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்ய விரும்புவர்கள் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் புக் செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பலர் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு முண்டியடித்துக் கொண்டு புக் செய்திருக்கின்றனர்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் டெஸ்ட் டிரைவிற்கான புக்கிங் பணிகள் தொடங்கிய 24 மணி நேரத்திலேயே 20 ஆயிரம் புக்கிங்குகள் கிடைத்துள்ளன. இந்தியாவின் 13 நகரங்களில் மட்டுமே கிடைத்த டெஸ்ட் டிரைவிற்கான புக்கிங் எண்ணிக்கை நிலவரம் இதுவாகும். முதல் கட்டமாக டெஸ்ட் டிரைவ் பணிகள் ஜூலை 20ம் தேதி முதல் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புனே, பனாஜி உள்ளிட்ட நகரங்களில் தொடங்கப்பட உள்ளன.

நீங்கள் மேற்கூறிய ஏதேனும் நகரத்தில் வசிப்பவர் எனில் உங்களுக்கான ஸ்லாட்டை சிம்பிள் எனெர்ஜி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் புக் செய்து கொள்ளலாம். விரைவில் நிறுவனம் மேலும் சில நகரங்களையும் இந்த பட்டியலில் சேர்க்க இருக்கின்றது. இதுகுறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது கிடைத்திருக்கும் அளவு கடந்த டெஸ்ட் டிரைவிற்கான புக்கிங் பற்றி சிம்பிள் நிறுவனத்தின் ஃபுவண்டர் மற்றும் சிஇஓ சுஹாஸ் ராஜ்குமார் கூறியிருப்பதாவது, "டெஸ்ட் டிரைவிற்கு இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பதிவுகள் கிடைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் உண்மையிலேயே சிம்பிள் ஒன்னை அனுபவிப்பதில் #BeThe First ஆக இருப்பார்கள். நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் டெஸ்ட் டிரைவிற்கான அழைப்புகள் கிடைக்கப் பெற்று வருகின்றது. அந்த பகுதியில் டெஸ்ட் டிரைவிற்கான வசதியை விரைவில் ஏற்படுத்திக் கொடுக்க இருக்கின்றோம்" என்றார்.

சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகளைத் தொடங்கி கிட்டதட்ட ஒரு வருடங்கள் ஆக போகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி அன்று விற்பனைக்கான புக்கிங் பணிகள் தொடங்கின. இருப்பினும், இதுவரை ஒரு யூனிட்கூட டெலிவரி வழங்கப்படாத சூழலே உள்ளது. இதனால், ஒரு சில வாடிக்கையாளர்கள் தங்களின் டெலிவரியை கேன்சல் செய்ய தொடங்கியிருக்கின்றனர்.

அதிலும், அண்மையில் நிறுவனம் போட்ட ட்வீட்டிற்கு பின்னர் பலர் தங்களது புக்கிங்கை கேன்சல் செய்ய தொடங்கிவிட்டனர். டெலிவரிக்கு இன்னும் சில மாதங்கள் கால தாமதம் ஆகும் என நிறுவனம் தெரிவித்திருந்தநிலையில், பலர் தொடர்ச்சியாக புக்கிங்கை ரத்து செய்ய ஆரம்பித்தனர். மேலும், தங்களின் அதிருப்தியை சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அவர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மவுசு சற்றும் குறையவில்லை என்பதை வெளிக்காட்டும் வகையில் மிகப் பிரமாண்டமான புக்கிங்கை டெஸ்ட் டிரைவிற்கு சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றிருக்கின்றது. சிம்பிள் நிறுவனம் தற்போது தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அதிக பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.

இதன் விளைவாகவே சிம்பிள் ஒன் விற்பனைக்குக் கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டிருக்கின்றது. ஆம், சிம்பிள் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தீ விபத்தில் இருந்து தள்ளி நிற்கும் ஓர் வாகனமாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. கடந்த சில நாட்களாக மின்சார ஸ்கூட்டர்கள் தீயிற்கு இரையாகும் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

பெரும்பாலான தீ விபத்துகளுக்கு மின்சார ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பேட்டரி செல்களே காரணம் என கூறப்படுகின்றது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டே நிறுவனம் அதன் இருசக்கர வாகனத்தையும், இதில் பயன்படுத்தப்பட இருக்கும் பேட்டரியையும் அதிக பாதுகாப்பானதாக தயாரிக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








