எவ்ளோ மழை பெய்தாலும் கவலையே இல்லாம பைக்குல பயணிக்க வேண்டுமா?.. இதோ உங்களுக்கான மிக சிறந்த டிப்ஸ்கள்!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக சென்னை போன்ற மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ளது. குறிப்பிட்ட சில மேம்பாலங்களில்கூட தண்ணீர் நிறைந்திருப்பதாக வாகன ஓட்டிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் சிலர் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இருசக்கர வாகனங்களில் தற்போதும் பயணித்த வண்ணம் இருக்கின்றனர். இந்த மாதிரியான இருசக்கர வாகன பயன்பாட்டாளர்களுக்கு உதவும் விதமாக பத்துக்கும் மேற்பட்ட டிப்ஸ்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம்.

"என்ன மழைக் காலத்துல வண்டி ஓட்டுறதுக்கு டிப்ஸா!.. நாங்க எல்லாம் மழ டைம்லதான் லாங் ரைடு போகவே பிளான் போடுவோம். எங்களுக்கு போயி டிப்ஸா..!" இந்த மாதிரி யோசிக்கக் கூடிய நபரா நீங்க?.. கண்டிப்பா உங்களுக்கு இந்த டிப்ஸ் உதவக் கூடும். ஏன்னா, மழை காலங்களில் இருசக்கர வாகனம் ஓட்டுவது என்பது மிகுந்த ஆபத்தான ஒன்று.

எங்கு பள்ளம் இருக்கும், எங்கு மேடு இருக்கும் என்பதே தெரியாது. குறிப்பாக, சாலைகள் ஈரமாக இருக்கும் என்பதால் போதுமான இழுவை திறன் கிடைக்காது. இதுமட்டுமில்லைங்க மழையின்போது தெளிவாக பார்க்கக் கூட முடியாது. இதனாலதான் மழை நேரங்கள்ல இருசக்கர வாகனத்தில் பயணிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது.

இருப்பினும், பைக்கையே நம்பி இருப்போர்கள் தங்களின் பயணங்களை தவிர்க்க முடியாமல் அவற்றை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாதிரியான சூழலில் உங்களுடைய ரைடை பாதுகாப்பானதாகவும், சுவாரஷ்யமானதாகவும் மாற்றவே இந்த தொகுப்பை வெளியிட்டுள்ளோம்.

முதல் மழை மிகவும் ஆபத்தானது:
முதல் முறையாக பெய்யும் மழை மிகுந்த ஆபத்தானது. கோடை காலத்தில் சாலையில் குவியும் சகதி, குப்பை, எண்ணெய் உள்ளிட்டவற்றை கிளப்பக் கூடியதாக முதல் மழை மாறிவிடுகின்றன. எனவேதான் முதல் மழையின்போது அதிகக் கவனம் தேவைக் கூறப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலில் முதல் இரண்டு நாட்களுக்கு மிகவும் மெதுவாகவும், கவனமாகவும் செல்வது நல்லது. பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள இது உதவும்.

நீர் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் கவனம் தேவை:
நீர் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் பயணிக்கும்போது அதிக கவனம் தேவை. ஹைட்ரோபிளானிங் சிக்கலில் நாம் கூடும் என்பதனாலயே நீர் நிறைந்த சாலையில் பயணிக்கும்போது கவனம் தேவை என கூறப்படுகின்றது. ஹைட்ரோபிளானிங்கா அப்படினா என்ன?, டயருக்கும், சாலைக்கும் உள்ள தொடர்பை தடுக்கக் கூடிய ஓர் செயலையே ஹைட்ரோபிளானிங் என அழைக்கின்றோம். இது டயருக்கும், சாலைக்கும் இடையே இருக்கும் தொடர்பை துண்டிப்பதனால் வாகனங்கள் சரிந்துவிழும் சூழல் ஏற்படுகின்றது. எனவேதான் நீர் நிறைந்த பகுதிகளில் அதி வேக பயணம் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது.

பிரேக்கை செக் செய்யுங்க:
மழைக் காலத்துல பயணத்தைத் தொடங்க போறீங்கனா முதல்ல பிரேக்கைச் சரி பாருங்க. பிரேக்கை செக் செய்ய காலியான மற்றும் சீரான பாதையைத் தேர்வு செய்வது நல்லது. மழைக் காலத்தில் சில நேரங்களில் டிரம் பிரேக்குகள் சரியாக வேலை செய்யாது. குறிப்பாக, சடாரென வண்டியை அது நிறுத்த செய்துவிடும். இதனால் சாலையில் வாகனம் சரிந்துவிழ நேரிடலாம். அதேவேலையில் பிரேக்குகளை மெதுவாக பயன்படுத்தவும் மறவாதீர்கள்.

தவிர்க்க வேண்டிய பாதைகள் மற்றும் வழிகள்:
மழை நீர் ஓடும் பகுதியில் தெளிவாக இருக்கும். ஆனால், குறிப்பிட்ட சில பகுதிகளில் அழுக்கும், சகதியும் சேர்ந்துவிடும். இதுமாதிரியான பகுதிகளில் வண்டியை ஓட்டவே கூடாது. அப்படி செய்தால் அது உங்களது வாகனத்தை நிற்கச் செய்துவிடும். இதுமட்டுமின்றி, சில நேரங்களில் நம்மை வழுக்கி விழ செய்யும்.

சாலை ஓரத்தில் இருக்கும் டிவைடர்களுக்கு அருகில் பயணிப்பதை தவிர்க்கவும். இந்த பகுதியிலேயே அதிகம் சகதி சேர்ந்திருக்கும். சற்று அதிக வேகமாக செல்லும்போது சகதியில் வாகனம் சிக்க நேர்ந்தால், வாகனம் திடீரென தடுக்கக் கூடும். இதனால், பேராபத்தே ஏற்படும்.
இதேபோல், சாலையில் வரையப்பட்டிருக்கும் கோடுகள் மீது பயணிப்பதையும் தவிர்க்க வேண்டும். இவை அதிக வழுவழுப்பான ஒன்றாக மாறிவிடும் என்பதால், அதன் மீதான பயணமும் மிகவும் ஆபத்தானதே.

தெளிவான பார்வை தெரிவதில் சிக்கல்:
மழைக் காலத்தில் தெளிவான பார்வைக் கிடைப்பது மிகுந்த சிக்கலான ஒன்று. ஆகையால், மழைக்கால பயணத்தின்போது உங்களின் வாகனத்தில் லைட்டுகள், மற்றும் மட்குவார்டுகள் சிறந்த நிலையில் உள்ளனவா என்பதை பரிசோதித்துக் கொள்ளவும். குறிப்பாக ஹெல்மெட் விசர்களை சுத்தம் செய்ய சுத்தமான நேப்கின்களை பயன்படுத்தவும்.

இதுமட்டுமின்றி, மழைக் கால பயணம் என்றால் பகல்நேர பயணமாக இருந்தாலும் மின் விளக்குகளை ஒளிர விட்டவாறு பயணிக்கவும். இது எதிரில் வருபவர் உங்களை அடையாளம்காண உதவியாக இருக்கும். ஆனால், ஹெட்லைட்டை ஹைபீமில் வைக்க வேண்டாம். இது எதிரில் வருபவரின் பார்வைக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.
இவற்றுடன், முன்னால் செல்லும் வாகனத்திற்கும் உங்களுடைய வாகனத்திற்கும் இடையில் அதிக இடைவெளி இருக்குமாறு பயணிப்பது கூடுதல் நல்லது. இது நமக்கு பிரேக்கை பிடிக்க கூடுதல் நேரத்தை வழங்கும்.

கட்டாயம் உங்களுக்கு முன்னால் சென்ற வாகனத்தின் டயர் அச்சங்களைப் பயன்படுத்தியோ அல்லது நன்றாக தெரியும் பாதையைப் பயன்படுத்தியோ பயணியுங்கள். எங்கு கால்வாய் திறந்துவிடப்பட்டுள்ளது, எங்கு கால்வாய் பள்ளம் இருக்கின்றது என்பது தெரியாது என்பதால் இதைக் கடைப்பிடிப்பது கட்டாயம்.

மேலே பார்த்த அனைத்து வழிக்காட்டுதல்களும் இரண்டாம் கட்டம்தான், நீங்கள் மழைக் காலத்தில் பயணிக்கின்றீர்கள் என்றால் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய முதல் ரூல் மெதுவாக செல்வது மட்டுமே. மெதுவாக செல்வதனால் எந்த மாதிரியான ஆபத்தாக இருந்தாலும் அதனை தவிர்த்துவிட முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








