எதிர்பார்ப்பு அதிகமா இருக்கும்போது ஏன் இப்படி பண்றாங்க தெரியல! நீண்ட இழுபறிக்கு பின்னர் அறிமுக தேதி அறிவிப்பு!
பல எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும் அல்ட்ராவைலட் எஃப்77 (Ultraviolette F77) எலெக்ட்ரிக் பைக்கின் அதிகாரப்பூர்வ வருகைகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சர்வதேச நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்திய நிறுவனங்கள் மின் வாகனங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனமான அல்ட்ராவைலட் (Ultraviolette) உருவாக்கியதே எஃப்77 (F77) எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஆகும்.

இதன் தோற்றம் ஒன்றே இந்த இந்திய தயாரிப்பு சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கு போதுமான சான்றாக இருக்கின்றது. அதேவேலையில், எக்கசக்க பிரீமியம் அம்சங்களை வழங்கி இந்த வாகனம் உலக தர வாகனம்தான் என்பதை அல்ட்ராவைலட் மேலும் நிரூபித்துள்ளது.

அல்ட்ராவைலட்டின் எஃப்77 எலெக்ட்ரிக் பைக் இந்தியர்களின் நீண்ட நாள் கனவாக இருக்கின்றது. நிறுவனம் இந்த பைக்கை முதன் முதலில் இந்தியாவில் 13 நவம்பர் 2019-லேயே அறிமுகம் செய்தது. அப்போதே இந்தியர்கள் பலருடைய மனதை கவர்ந்த வாகனமாக அது மாறியது. ஆகையால், எஃப்77 எலெக்ட்ரிக் பைக்கின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது.

ஆனால், அல்ட்ராவைலட் நிறுவனமோ பல்வேறு காரணங்களால் எலெக்ட்ரிக் பைக்கை இப்போது வரை விற்பனைக்குக் கொண்டு வராமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றது. நிறுவனத்தின் இந்த செயல் மின்வாகன பிரியர்களை லேசாக கலக்கத்தில் ஆழ்த்தியது. இந்த மாதிரியான சூழலிலேயே ஒரு வழியாக எஃப்77 எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வரும் நாளை நிறுவனம் அறிவித்துள்ளது.

வரும் நவம்பர் 24ம் தேதி அன்றே மின்சார இருசக்கர வாகனத்தை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது. நிறுவனம் இன்னும் இந்த இ-பைக்கின் விலையை அறிவிக்கவில்லை. இதுகுறித்த தகவலையும் அறிமுக நாளின்போது அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது பிரீமியம் வசதிகள் அதிகம் கொண்ட வாகனம் என்பதால் சற்று அதிக விலையில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

அல்ட்ராவைலட் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைச் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எஃப்77 எலெக்ட்ரிக் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட இருக்கின்றது. அதேவேலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரத்திலேயே இந்த மின்சார பைக் முதன் முதலில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இதற்கு பின்னரே இந்தியாவின் பிற முக்கிய நகரங்களை நோக்கி அல்ட்ராவைலட் எஃப்77 எலெக்ட்ரிக் பைக் படையெடுக்கும். இதைத்தொடர்ந்தே மேலே பார்த்த உலக நாடுகளை நோக்கி அது பயணிக்க இருக்கின்றது. கடந்த ஐந்துக்கும் அதிகமான ஆண்டுகளாக இந்த பைக்கை உருவாக்கும் பணியில் அல்ட்ராவைலட் ஈடுபட்டு வருகின்றது. இந்த பைக்கிற்கு இதுவரை 190 நாடுகளில் இருந்து வரவேற்புக் கிடைத்துள்ளன.

இதுமட்டுமின்றி ஏற்கனவே 70 ஆயிரம் புக்கிங்குகளை இருசக்கர வாகனம் குவித்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அடுத்த மாதம் 24 ஆம் தேதி அல்ட்ராவைலட் எஃப்77 இ-பைக் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வர இருக்கின்றது. எலெக்ட்ரிக் பைக்கின் இந்த நீண்ட இழுபறிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, குறிப்பாக கொரோனா வைரஸ் பரவல் மின்சார பைக்கின் காலதாமதத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது.

அல்ட்ராவைலட் எஃப்77 எலெக்ட்ரிக் பைக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ முதல் 150 கிமீ துரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக மூன்று விதமான பேட்டரி பேக்குகள் பைக்கில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதனை வழக்கமான சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் 5 மணி நேரங்களிலும், ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் 1.5 மணி நேரங்களிலும் ஃபுல் செய்துவிட முடியும்.

மின்சார பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 147 கிமீ ஆகும். இந்த சூப்பர் ஃபாஸ்ட் திறனுக்காக 33.5 எச்பியையும், 90 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் மின் மோட்டார் எஃப்77இல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் வெறும் 2.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தையும், 7.5 செகண்டுகளில் மணிக்கு 100 கிமீ எனும் டாப் ஸ்பீடை எட்டும் திறன் கொண்டது என்பது கூடுதல் பிளஸ்ஸாக இருக்கின்றது.

இதுமாதிரியான பன்முக அம்சங்களைக் கொண்டதாகவே அல்ட்ராவைலட் எஃப்77 எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த வாகனத்தை மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க அல்ட்ராவைலட் திட்டமிட்டுள்ளது. ஏர்ஸ்ட்ரைக், ஷேடோ மற்றும் லேசர் ஆகிய நிற தேர்வுகளிலேயே மின்சார பைக் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








