கொளுத்தும் 40 டிகிரி வெயிலில் அல்ட்ராவொய்லெட் எஃப்77 பைக் சோதனை!! இந்தியாவின் முதல் அதிவேக எலக்ட்ரிக் பைக்!
அதிவேகமான எலக்ட்ரிக் பைக்காக உருவாக்கப்பட்டுவரும் அல்ட்ராவொய்லெட் எஃப்77 நமது தமிழகத்தில் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன பயன்பாடு என்பது வேகமாக முன்னேற்றம் கண்டுவரும் ஒன்றாக உள்ளது. இருப்பினும் தற்போதைக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையே விற்பனையில் அதிகமாக உள்ளது. எலக்ட்ரிக் பைக் என்று பார்த்தால், மிகவும் குறைவே.

ஏனெனில் ரிவோல்ட் என மிகவும் சில பிராண்ட்களில் இருந்து மட்டுமே எலக்ட்ரிக் பைக்குகள் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் எலக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்க யோசித்து வருகிறீர்கள் என்றால், நிச்சயம் உங்களுக்கு அல்ட்ராவொய்லெட் எஃப்77 மோட்டார்சைக்கிளை பற்றி தெரிந்திருக்கும். முதன்முதலாக 2019இல் இந்த அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் தற்போதுவரையில் இதன் எந்தவொரு யூனிட்டும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்படவில்லை. ஏனெனில் எஃப்77 பைக்கை இன்னமும் அல்ட்ராவொய்லெட் நிறுவனம் சோதனைகளிலேயே உட்படுத்தி வருகிறது. இந்த வகையில் தற்போது நமது தமிழகத்தில் இந்த செயல்திறன்மிக்க பைக் பொது சாலையில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை தான் கீழே காண்கிறீர்கள்.
சமீப நாட்களாக கோடை வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாமல் இயக்கத்தின்போதே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்கும் சம்பவங்களை பார்த்து வருகிறோம். இதனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் மிகவும் சூடான நகரம் ஒன்றில், மதியம் நேரத்தில் அல்ட்ராவொய்லெட் எஃப்77 பைக்கின் இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனையில் பைக்கை இயக்கி பார்ப்பவர், அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தின் சிஇஓ நாராயணன் சுப்பிரமணியன் ஆவார்.

கிட்டத்தட்ட 40 டிகிரி வெயிலில் நகரத்தின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, சில கரடு முரடான பாதைகளிலும் எஃப்77 எலக்ட்ரிக் பைக் இயக்கி பார்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சோதனை ஒட்டத்தில் இடையிடையே பைக்கின் நிலைமையும் ஆராயப்பட்டது. மதியம் 12 மணியளவில் துவங்கிய இந்த சோதனை ஓட்டம் 1 மணிநேரம் 15 நிமிடங்களில் 20கிமீ-ஐ நிறைவு செய்தது.

அப்போது பேட்டரி தொகுப்பின் மின்னழுத்தம் ஆனது 56.1 வோல்ட்ஸ் ஆகவும், பேட்டரி மூலம் கிடைக்கும் மின்னோட்டம் ஆனது 352 ஆம்பியர்களாகவும் இருந்தது. அந்த சமயத்தில் பேட்டரியின் வெப்பநிலை 41 டிகிரி - 39 டிகிரிகளுக்கு இடையே மாறிக்கொண்டு இருந்தது. அதன்பின் ரைடர் எஃப்77 பைக்கை கிராமங்களுக்குள்ளும், ஏலகிரி மலை பாதைகளுக்கும் எடுத்து செல்கிறார்.

அந்த சமயத்தில் பேட்டரி தொகுப்பின் மின்னழுத்தம் 54.3 வோல்ட்ஸ், பேட்டரி தொகுப்பின் மின்னோட்டம் 358 ஆம்பியர்களாகும். கிராம சாலைகளில் 1 மணிநேர பயணத்திற்கு பிறகு ஏலகிரி மலை சாலைகளில் எஃப்77 பைக் ஏற்றி சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த பயணம் நீண்ட நேரம் செல்ல, நேரம் மாலை 6 மணியை எட்டிவிட்டது. தொடர் 6 மணிநேர பயணத்திற்கு பிறகும் பேட்டரி தனது அதிகப்பட்ச வெப்பநிலையை எட்டவில்லை.

2019இல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட போது எஃப்77-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.3.25 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டன. லைட்னிங், ஷேடோ & லேசர் என 3 விதமான வேரியண்ட்களில் இந்த செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவின் அதிவேகமான எலக்ட்ரிக் பைக்காக விளங்கும் இதன் டாப்-ஸ்பீடு மணிக்கு 147கிமீ ஆகும். இந்த பைக்கில் 0-வில் இருந்து 60kmph வேகத்தை 2.92 வினாடிகளிலும், 100kmph வேகத்தை 7. 5 வினாடிகளிலும் எட்டி விடலாமாம்.

எஃப்77-இல் மாடுலர் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகப்பட்சமாக 33.5 பிஎச்பி மற்றும் 90 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கும். இந்த அதிவேக எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் ரேஞ்ச் ஆனது 130கிமீ-இல் இருந்து 150கிமீ வரையில் கிடைக்கும் என்கிறது தயாரிப்பு நிறுவனம். வழக்கமான சார்ஜரை உபயோகப்படுத்தி இதன் பேட்டரியை 0-வில் இருந்து 80% சார்ஜ் நிரப்ப கிட்டத்தட்ட 3 மணிநேரங்கள் வரையில் தேவைப்படும்.


Click it and Unblock the Notifications








