இந்தியாவில் அடுத்ததாக விற்பனைக்குவர உள்ள பிரீமியம் தர பைக்குகள்!! ஸ்க்ராம் 411 முதல் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வரையில்!
கொரோனா ஊரடங்குகளினால் பல வாகனங்களின் அறிமுகங்கள் தாமதமாகின. இதில் இரு-சக்கர வாகனங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா! ஆனால் தற்போது ஊரடங்குகளில் பெரிய அளவில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளதால், மீண்டும் அறிமுகங்கள் விறுவிறுப்படைய துவங்கியுள்ளன.

இந்தியாவில் விற்பனைக்குவரும் பிரீமியம் தர மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதில் இருந்து வாடிக்கையாளர்களின் தேவை மெல்ல மெல்ல மாறிவருவதை அறிய முடிகிறது. இந்த வகையில் நடப்பு 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் சில பிரீமியம் மோட்டார்சைக்கிள்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411
சமீப மாதங்களாக தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டுவந்த ஸ்க்ராம் 411 சமீபத்தில் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றின் உள்ளேயே அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது. இதில் இருந்து இந்த மோட்டார்சைக்கிளின் அறிமுகம் மிக விரைவில் இருக்கும் என்பதை அறிய முடிகிறது. ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக்கில் இருந்து கொண்டுவரப்படுவதால், இதன் சேசிஸ் மற்றும் இயக்குத்தளத்தையே புதிய ஸ்க்ராம் 411 பைக்கும் பயன்படுத்தி கொள்ளவுள்ளது.

இருப்பினும் ஹிமாலயனை காட்டிலும் அதிக விலையினை கொண்டதாக ஸ்க்ராம் 411 விளங்கவுள்ளது. ஹிமாலயனில் இருந்து வேறுப்படும் விதமாக தாழ்வான சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் சிறிய அளவிலான முன்பக்க சக்கரம் இந்த புதிய பைக்கில் வழங்கப்பட உள்ளது. இதன் அறிமுகத்தை வரும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்திலும், எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.1.70- ரூ.1.90 லட்சம் வரையிலும் எதிர்பார்க்கிறோம்.

2022 கேடிஎம் 390 அட்வென்ச்சர்
ஸ்க்ராம் 411 பைக்கை போல் கேடிஎம் நிறுவனத்தின் புதிய 390 அட்வென்ச்சர் பைக்கும் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது. இதனால் இதன் அறிமுகமும் வரும் வாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய வெர்சனில் இருந்து புதிய 390 அட்வென்ச்சர் பைக் தோற்றத்தில் முக்கியமான காஸ்மெட்டிக் மாற்றங்களை பெற்றுவரவுள்ளது.

இதன்படி, இந்த புதிய தலைமுறை அட்வென்ச்சர் பைக்கினை புதிய இரட்டை-நிற பெயிண்ட்டில் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் ட்யூல்-டோன் நிறத்தில் சமீபத்தில் 390 அட்வென்ச்சர் பைக்கின் சோதனை மாதிரி ஒன்று அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது. அமெரிக்க சந்தைகளில் விற்பனையில் உள்ள 390 அட்வென்ச்சர் பைக் தான் அப்படியே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2
இந்திய சந்தையை பொறுத்தவரையில் மிகவும் பிரீமியம் தரத்திலான மோட்டார்சைக்கிளான டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 -இன் அப்டேட் வெர்சன் கடந்த 2021 நவம்பரில் வெளியீடு செய்யப்பட்டது. இதனை இந்தியாவில் டுகாட்டி நிறுவனம் இந்த 2022ஆம் வருட இறுதியில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஸ்போர்ட்ஸ் வெர்சனான பனிகளே வி2 பைக்கில் பொருத்தப்படும் அதே 955சிசி, சூப்பர்குவாட்ரோ, இரட்டை-சிலிண்டர் என்ஜின் தான் புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இவை இரண்டும் ஒரே இயக்குத்தளத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350
ஸ்க்ராம் 411 பைக்கை தொடர்ந்து ராயல் என்பீல்டு அடுத்ததாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள மோட்டார்சைக்கிள் ஹண்டர் 350 ஆகும். ராயல் என்பீல்டின் மீட்டியோர் 350 பைக்கை அடிப்படையாக கொண்டதாக ஹண்டர் 350 இருக்கும் என கூறப்படுகிறது. இதுவரையில் நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படங்களும் இதைதான் வெளிக்காட்டுவதாக உள்ளன.

மேலும் இந்த ஸ்பை படங்களின் மூலம் ஹண்டர் 350, மீட்டியோர் மாடலை காட்டிலும் கூடுதல் ஆஃப்-ரோடு பண்புகளை கொண்ட ஸ்க்ராம்ப்ளர் பிரிவு பைக்காக இருக்கும் என்பதையும் அறிய முடிகிறது. ஆனால் மீட்டியோர் 350-இல் பொருத்தப்படும் அதே 349சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு SOHC என்ஜின் தான் ஹண்டர் 350-யிலும் பொருத்தப்படும்.

புதிய கேடிஎம் ஆர்சி390
முற்றிலும் புதிய ஆர்சி200 பைக்கை தொடர்ந்து, அதனை காட்டிலும் அளவில் பெரிய ஆர்சி390 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த கேடிஎம் நிறுவனம் தயாராகி வருகிறது. புதிய தலைமுறை அப்கிரேட்களின்படி, புத்துணர்ச்சியான தோற்றத்தினை ஆர்சி390 பைக் பெற்றுவரவுள்ளது.

அத்துடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்பட சில தொழிற்நுட்ப அம்சங்களையும் புதிய ஆர்சி390 பைக்கில் எதிர்ப்பார்க்கிறோம். இதனால் இத்தகைய அப்டேட்களுக்கு ஏற்ப பைக்கின் விலையும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்சமயம் கேடிஎம் ஆர்சி390 பைக்கின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.08 லட்சமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








