பொறுத்தது போதும்... பொங்கி எழுகிறது யமஹா... சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது!
இந்தியாவிற்கான யமஹாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் ஏப்ரல் 11ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹீரோ எலெக்ட்ரிக், ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர், ஒகினவா மற்றும் ஆம்பியர் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்து வருகின்றன. ஆனால் முன்னணி நிறுவனங்களாக கருதப்படும் யமஹா, ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மற்றும் சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் இன்னும் தங்களது முதல் எலெக்ட்ரிக் டூவீலரை அறிமுகம் செய்யவில்லை.

எனினும் இந்த நிலைமை வெகு விரைவில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் டூவீலர்களின் விற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், முன்னணி நிறுவனங்களும் இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஆயத்தமாகி வருகின்றன.

முன்பெல்லாம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை பார்ப்பது என்பது அரிதான விஷயமாக இருக்கும். ஆனால் தற்போது சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை ஓரளவிற்கு அதிகரித்துள்ளது. மேலும் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதாலும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசாங்கம் மானியங்களை வழங்குவதாலும், அவற்றின் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது.

எனவே முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர்களை அறிமுகம் செய்வதற்கு இது சரியான நேரமாக இருக்கும். நடப்பு ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் பல்வேறு எலெக்ட்ரிக் டூவீலர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு எலெக்ட்ரிக் டூவீலர், யமஹா (Yamaha) நிறுவனத்திடம் இருந்து வெளிவரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக யமஹா நிறுவனம் வரும் ஏப்ரல் 11ம் தேதி, இந்த எலெக்ட்ரிக் டூவீலரை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யமஹா இந்தியா நிறுவனம் தற்போது 'Block Your Date' அழைப்பை தனது டீலர்களுக்கு அனுப்பியுள்ளது. இதன் காரணமாகதான் புதிய எலெக்ட்ரிக் டூவீலர் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த அழைப்பிதழில் பெரிய அளவில் விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும் இந்த புதிய தயாரிப்பு 'ஸ்டைலிஷ்' ஆகவும், 'ஸ்போர்ட்டி' ஆகவும் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 'யமஹா உடன் உற்சாகமான புதிய எதிர்காலம்' எனவும் இந்த அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனத்தைதான் புதிய எதிர்காலம் என யமஹா குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அனேகமாக இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. E01 என்ற பெயரை யமஹா நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் பதிவு செய்து வைத்துள்ளது. அத்துடன் EC-05 என்ற பெயரும் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்கனவே தைவானில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்திய சந்தைக்கான யமஹா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் தயாரிப்பு, மேக்ஸி ரக ஸ்கூட்டராக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பிரீமியம் தயாரிப்பாக இருக்கும். ஏத்தர்450எக்ஸ், பஜாஜ் சேத்தக் போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக, யமஹாவின் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிலைநிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

முழு டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ப்ளூடூத் சார்ந்த கனெக்டிவிட்டி வசதிகள் ஆகியவை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தைக்கான யமஹாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி தற்போதைக்கு பெரிய அளவில் எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இருப்பினும் இதன் ரேஞ்ச் 70-80 கிலோ மீட்டர்களாக இருக்கலாம் என தெரிகிறது.

அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர்களாக இருக்க கூடும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு ரைடிங் மோடுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரைடிங் மோடுகள்தான், ரேஞ்ச் மற்றும் டாப் ஸ்பீடை தீர்மானிக்கும். அதாவது ரைடிங் மோடை பொறுத்து, ரேஞ்ச் மற்றும் டாப் ஸ்பீடு மாறுபடலாம்.

அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சௌகரியமான ரைடிங் பொஷிஷனை பெற்றிருக்கும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து, வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை யமஹா நிறுவனம் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








