ஒரு சில ஊர்ல கன்னாபின்னானு ஓட்றாங்க... எந்த நகரில் நல்ல கார் டிரைவர்கள் அதிகம் இருக்கறாங்க தெரியுமா?
ஜூம் கார் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் எந்தெந்த நகரங்களில் எவ்வளவு நல்ல டிரைவர்கள் இருக்கிறார்கள் எனப் பட்டியலிட்டுள்ளது. இது குறித்த விபரங்களை கீழே காணுங்கள்.

உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் போக்குவரத்தை முறைப்படுத்தப் போக்குவரத்திற்கான விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர். இந்த விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டுநர்கள் மீது அரசு அபராதம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்படியாக உலகில் பல நாடுகளில் இப்படிசாலை விதிமுறைகளை மீறுபவர்கள் இருந்தாலும் இந்தியாவில்தான் அதிகம் சாலை விதிமுறைகள் மீறப்படுவதாக ஒரு ஆய்வு சொல்கிறது.

இதே போல இந்தியாவில்தான் உலகிலேயே அதிகமான சாலை விபத்துக்கள் நடப்பதாகவும் ஒரு ஆய்வு சொல்கிறது. இந்நிலையில் சாலை விபத்துக்களுக்கும் போக்குவரத்து விதிமீறலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது நமக்குத் தெரிகிறது. போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்தால் சாலை விபத்துக்களும் குறையும்.

இந்நிலையில் இந்தியாவில் பெரு நகரங்களில் கார்களைவாடகைக்கு விடும் நிறுவனங்களில் பிரபலமான நிறுவனம் ஜூம் கார்ஸ் நிறுவனம். உங்களுக்கு வாகனம் ஓட்ட தெரிந்தால் நீங்கள் அந்த நிறுவனத்தின் காரை புக் செய்து வாங்கி நீங்களே ஓட்டி பயன்படுத்தலாம். இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் 22 நகரங்களில் செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனம் அந்நிறுவனத்தின் கார்களை பயன்படுத்தியவர்களின் தகவல்களை வைத்து ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியது.

கடந்த நவம்பர் 2020ம் ஆண்டு முதல் நவம்பர் 2021ம் ஆண்டுவரை பதிவாகத் தகவல்களை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் வாகனம் பயன்படுத்தும் போது எவ்வளவு வேகமாக ஓட்டப்பட்டது. இன்ஜின் எவ்வளவு வேகமாகச் செயல்பட்டது, பிரேக் பிடிக்கப்பட்டது, பேட்டரி மற்றும் டயரின் ஆயுட்காலம் குறைவு என ஒவ்வொரு தகவல்களும் பெறப்பட்டு சுமார் 20 கோடி தரவுகளுடன் இந்த ஆய்வு நடத்திப்பட்டது.

இதில் ஒரு டிரைவர் காரை எப்படிப் பயன்படுத்தியுள்ளார். என்பதை வைத்து அவருக்கு மதிப்பெண்கள் தரப்பட்டது. அதில் 65 மதிப்பெண்களுக்கு மேல் உள்ள டிரைவர்கள் நல்ல டிரைவர்கள் என்றும், 50 மதிப்பெண்களுக்கும் குறைவாகப் பெற்றவர்கள் மோசமான டிரைவர்கள் என்றும் பிரிக்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு நகரங்களில் உள்ள டிரைவர்கள்பட்டியலிடப்பட்டனர்.

இதில் ஒவ்வொரு நகரங்களில் எத்தனை சதவீதம் நல்ல டிரைவர்கள் இருக்கிறார்கள். எத்தனை சதவீதம் மோசமான டிரைவர்கள் இருக்கிறார்கள் என ஆய்வு நடத்திப்பட்டது. இந்த ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் எல்லாம் வெளியாகியுள்ளன.

இந்த பட்டியலில் மத்திய பிரேதச மாநிலம் இந்தூரில் மொத்தம் 35.4 சதவீதம் நல்ல டிரைவர்கள் இருப்பதாகவும் இரண்டாம் இடத்தில் லக்னோ நகரில் 33.2 சதவீதம் நல்ல டிரைவர்கள் இருப்பதாகவும் அடுத்ததாக ஐதராபாத்தில் 33.1 சதவீதம் நல்ல டிரைவர்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல மிகக் குறைந்த அளவில் இருப்பதில் மைசூரு நகரில் வெறும் 18.5 சதவீதம் நல்ல டிரைவர்கள் இருப்பதாகவும் ஆமதாபாத் நகரில் 14.8 சதவீதம் நல்ல டிரைவர்கள் இருப்பதாகவும், பெங்களூருவில் இந்தியாவிலேயே மிகக் குறைவாக வெறும் 14 சதவீதம் மட்டுமே நல்ல டிரைவர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் மிக நெருக்கடியான நகரில் பெங்களூருவும் ஒன்று. இங்கு ஏராளமான சாலைவிதி மீறல்கள் நடப்பதாகவும் தரவுகள் உள்ளது. சாலை விதிமீறலைத் தடுக்க இந்தியா முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதில் பதிவாகும் காட்சிகளை வைத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இருந்தாலும் விதிமுறை மீறல்கள் சாலைகளில் குறைந்த பாடில்லை.

நீங்கள் சாலையில் வாகனங்களை ஓட்டும் போது கட்டாயம் சாலை விதிகளைத் தவறாமல் கடைப்பிடியுங்கள். சாலை விதிகளை எல்லோரும் முறையாக கடைப்பிடித்தாலே பெரும்பாலான விபத்துக்களைத் தவிர்த்துவிட முடியும். சாலைவிதிகளைமீறுவதால் தான் பெரும்பாலான விபத்துக்கள் நடக்கிறது.


Click it and Unblock the Notifications








