இதுகளோட வருகைக்குதான் ரொம்ப நாளா வெயிட் பண்றோம்! டூவீலர் லவ்வர்ஸ்க்கு இந்த மாசம் செம்ம தீனி காத்திட்டு இருக்கு
பைக் லவ்வர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் இருசக்கர வாகன மாடல்கள் சில இன்று தொடங்கி இருக்கும் இந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகமாக இருக்கின்றன. சென்ற ஜனவரி மாதத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் இந்திய இருசக்கர வாகன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இதைப் போலவே இன்னும் பல இருசக்கர வாகனங்கள், டூ-வீலர் பிரியர்களின் மனம் கவர்ந்த வாகனமாக இருக்கின்றன.
ஏற்கனவே இந்தியாவில் வெளியீட்டைப் பெற்றுவிட்டாலும், அவை விற்பனைக்கு வராமல் நீண்ட இழுபறியை மேற்கொண்டு வருகின்றன. இன்னமும்கூட விற்பனைக்குக் கிடைக்காத சூழலே நிலவுகின்றது. இத்தகைய இருசக்கர வாகனங்கள் சிலதே இம்மாதத்தில் (பிப்ரவரியில்) அறிமுகமாக இருக்கின்றன. அந்தவகையில், மேட்டர் எலெக்ட்ரிக் பைக், யமஹாவின் எம்டி-15 வி2 (வெர்ஷன் 2) மற்றும் ரிவர் நிறுவனத்தின் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளிட்டவை இந்த மாதத்தில் அறிமுகமாக உள்ளன.

அதாவது, ஒரு பெட்ரோல் டூ-வீலர் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் என ஒட்டுமொத்தமாக மூன்று புத்தம் புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வர இருக்கின்றன. இவை பற்றிய இன்னும் பல சுவாரஷ்யமான மற்றும் முக்கியமான தகவல்களை இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
மேட்டர் எலெக்ட்ரிக் பைக்
புதுமுக மின்வாகன உற்பத்தி நிறுவனம் மேட்டர். இந்த நிறுவனம் சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் தன்னுடைய முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலை இந்தியாவில் வெளியீடு செய்தது. பெயர் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனத்தையே சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவிலும் மேட்டர் நிறுவனம் காட்சிப்படுத்தியது. இதுமட்டுமின்றி, யுடி மற்றும் இஎக்ஸ்இ எனும் இரு கான்செப்ட் மாடல்களையும் அது காட்சிப்படுத்தியது.

இந்த நிலையிலேயே மேட்டர் நிறுவனம் அதன் சமீபத்திய வெளியீடான, அதாவது, நவம்பரில் வெளியீடு செய்யப்பட்ட முதல் எலெக்ட்ரிக் பைக்கை அதிகாரப்பூர்வமாக இந்த மாதம் விற்பனைக்குக் கொண்டு வரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பல்வேறு விஷயங்களில் தனித்துவமானதாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக லிக்யூடு கூல்டு பேட்டரி பேக் மற்றும் மோட்டாரைப் பெறும் முதல் மின்சார இருசக்கர வாகனமாக இதுவே தயார் செய்யப்பட்டு உள்ளது.
இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 125 கிமீ தொடங்கி 150 கிமீ வரையில் பயணிக்க முடியும். இதன் மின் மோட்டார் பெட்ரோல் எஞ்ஜினுக்கு இணையான திறனை வெளியேற்றும். இது ஓர் 150 சிசி மின் மோட்டார் ஆகும். சுமார் 1.75 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் இது விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இன்னும் ஒரு சில தினங்களில் அதுபற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யமஹா எம்டி-15 வி2 (Yamaha MT-15 V2)
நாட்டில் வெகு விரைவில் பிஎஸ்6 இரண்டாம் கட்ட விதிகள் அமல்படுத்தப்பட உள்ளன. தற்போது நடைமுறையில் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதியில் கணிசமான மாற்றத்தை அரசு செய்திருக்கின்றது. இதுவே பிஎஸ்6 பேஸ் 2 பெயரில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய விதிகளுக்கு ஏற்பவே யமஹா நிறுவனம் அதன் பிரபல எம்டி 15 வி2 பைக்கை உருவாக்கி இருக்கின்றது. இதையே இன்னும் ஒரு சில தினங்களில் யமஹா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
யமஹா எம்டி 15 வி2 ஓர் ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரக டூ வீலர் ஆகும். இதற்கு இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மிகவும் கவர்ச்சியான தோற்றம், ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையான திறனை வெளியேற்றும் வசதி உள்ளிட்டவற்றைக் கொண்டிருப்பதால் மிக சூப்பரான டிமாண்ட் இந்த பைக்கிற்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே இந்த பைக் மாடலை நிறுவனம் வெர்ஷன் 2வாக தற்போது அப்கிரேட் செய்திருக்கின்றது. இதுவே இன்னும் சில நாட்களில் விற்பனைக்கும் வர இருக்கின்றது.
யமஹா நிறுவனம் இந்த பைக்கை மட்டுமில்லைங்க இன்னும் சில தனது பிரபல மாடல்களை புதிய மாசு உமிழ்வு விதிக்கு ஏற்ப அடுத்தடுத்து விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அந்தவகையில், எஃப்இசட்-எக்ஸ், ஃபஸ்ஸினோ மற்றும் ரே உள்ளிட் வாகனங்களை அது அப்டேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இவற்றில் எஃப்இசட்-எக்ஸ் மாடலே எம்டி 15 வி2-க்கு அடுத்தபடியாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அப்டேட்டின் அடிப்படையில் புதிய நிற தேர்வு மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் சிறப்பம்சம் சேர்க்கப்பட்ட நிலையில் விற்பனைக்கு வழங்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ரிவர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (River Electric Scooter)
கர்நாடகா மாநிலம் பெங்களுரூவை மையமாகக் கொண்டு ரிவர் நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனம் ஓலா, ஏத்தர், பஜாஜ் மற்றும் டிவிஎஸ் என அனைத்து நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டி அளிக்கும் வகையில் ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை தயார் செய்திருக்கின்றது. இதனை வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரவும் நிறுவனம் திட்டம் போட்டு இருக்கின்றது. இதனை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் நிறுவனம் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் தற்போது சாலையில் தீவிர சோதனை ஓட்டத்திற்கு ரிவரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீட்டு நிகழ்வு இந்த மாதத்தில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மின்சார ஸ்கூட்டரில் டிஜிட்டல் டிஸ்பிளே போன்ற பன்முக சிறப்பு வசதிகள் இடம் பெற்றிருக்கும். இந்த திரை செல்போனை இணைக்கும் வசதிக் கொண்டது என கூறப்படுகின்றது. மேலும், தொடுதிரை வசதிக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மேப், மியூசிக் பிளேயரை கன்ட்ரோல் செய்தல் போன்றவற்றை செய்துக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








