3 வருஷம் ஆகிருச்சு இப்பவும் புதுசு போல ரேஞ்ச் தரும் இ-ஸ்கூட்டர்.. இவங்களோட தயாரிப்பா இப்படி வேலை செய்யுது?
மின்சார வாகனங்களின் செயல்திறன் நாள்பட குறையத் தொடங்கும் என்பதே பலரின் கருத்தாக இருக்கின்றது. குறிப்பாக, மின்சார வாகனங்களின் பேட்டரி பேக் சில மாத பயன்பாட்டிலேயே கணிசமான அளவு குறையத் தொடங்கும். அதாவது, புதியதாக இருக்கும்போது கிடைக்கின்ற ரேஞ்ச் திறன், அந்த மின்சார வாகனம் பழையதாக மாறும்போது கிடைக்காது. வயதுக்கு ஏற்ப அதன் ரேஞ்ச் திறன் குறையத் தொடங்கும். அதன் ஆயுட்காலமும் குறையும்.
இந்த மாதிரியான சூழலிலேயே மூன்று ஆண்டுகள் ஆகிய போதிலும் ஓர் எலெக்ட்ரிக் வாகனம் இப்போதும் புதிதுபோல் ரேஞ்ச் திறனை வழங்கிக் கொண்டிருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன வாகனம்? இப்போது வரை எத்தனை கிமீ தூரம் வரை அது பயணித்து இருக்கின்றது? இதுபோன்ற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மிக சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஏத்தர் 450 (Ather 450)-ம் ஒன்றாகும். இது ஓர் இந்திய தயாரிப்பும்கூட. கர்நாடகா மாநிலம், பெங்களூருவை மையமாகக் கொண்டே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகின்றது.
இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அதன் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய ஆச்சரியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. 3 வயதான ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று இப்போதும் புதிதாக வாங்கப்பட்டதைப் போல மிக சிறப்பான ரேஞ்ச் திறனை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகவே அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தனைக்கும் அந்த வாகனம் இதுவரை 70 ஆயிரத்துக்கும் அதிகமான கிமீ வரை பயணித்து இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே அதன் பேட்டரி மற்றும் மின்சார மோட்டார் செயல்திறனில் எந்த சுணக்கமும் இல்லை என்பது தெரிய வந்திருக்கின்றது. அதேவேளையில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பழையது என்பதை வெளிக்காட்டும் விதமாக, அதன் வெளிப்புற தோற்றத்தின் புகைப்படங்களையும் உரிமையாளர் பகிர்ந்திருக்கின்றார்.
இதன் வாயிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகக் கடுமையான பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகின்றது. பாடி பேனல்களில் சிராய்ப்பகள், ரியர் வியூ மிர்ரர் இல்லாதது என முற்றிலும் பழைய தோற்றத்திற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாறி இருக்கின்றது. இருப்பினும், அது வேலை செய்வதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதற்கு சான்றாக 100 சதவீத சார்ஜில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 75 கிமீ ரேஞ்ஜையும் தந்துக் கொண்டிருக்கின்றது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள திரையும், அதன் ரேஞ்ச் திறனை உறுதிப்படுத்துகின்றது. இந்த அளவிற்கு ஏத்தர் 450 நல்ல ரேஞ்ச் தரும் நிலைமையில் இருப்பதற்கு சில யுக்திகளை அதன் உரிமையாளர் கடைப்பிடித்தது மட்டுமே காரணம் என கூறப்படுகின்றது.
மிக முக்கியமாக அவர் ஈகோ மோடிலேயே அதிகம் டிராவல் செய்திருக்கின்றார். அதுதவிர, அவர் அதிக வேகத்தில் செல்ல மாட்டார் என கூறப்படுகின்றது. அவசர தேவையின் மட்டுமே சற்று வேகமாக செல்ல அந்த வாகனம் உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், பெங்களூரு நகர சாலையில் அதிக வேகத்தில் செல்வது என்பது இயலாத ஒன்றாகும்.

இத்தகைய பயன்பாட்டிற்கு பின்னரே இப்போதும் மிக சிறந்த ரேஞ்ச் திறனை ஏத்தர் 450 வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் பழையது என்பதற்கு சான்றாக, இயக்கத்தின்போது அதில் இருந்து வெளி வரும் சத்தமும் உள்ளது. நீண்ட நாள் பயன்பாடு காரணமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள பாகங்கள் பல லூஸ் கான்டாக்டாகி இருப்பதை இந்த நிலை உறுதிப்படுத்துகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிசயமாகப் பார்க்கப்படும் இந்த ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய விபரங்களை ஏதர் எனர்ஜியின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான தருண் மேத்தாவும் பகிர்ந்திருக்கின்றார். தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு அதிக நிலைத் தன்மைக் கொண்டது என்பதை வெளிக்காட்டும் விதமாக இதுபற்றிய பதிவை அவர் பகிர்ந்திருக்கின்றார்.


Click it and Unblock the Notifications









