லேப்டாப் தயாரிச்சுட்டு இருந்த நிறுவனம் இப்ப எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செஞ்சிருக்கு! எந்த நிறுவனம் அது?
பிரபல மின்சாதன தயாரிப்பு நிறுவனமான ஏசர் (Acer) தற்போது மின்சார வாகனம் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கின்றது. முவி 125 4 ஜி (Muvi 125 4g) எனும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே அது அறிமுகம் செய்து உள்ளது.
மடிக்கணினி (லேட்டாப்), கணினி (டெஸ்க்டாப்) உள்ளிட்டவையே நிறுவனத்தின் முதன் தயாரிப்புகள் ஆகும். இதுதவிர, குரோம்புக், டேப்ளட்டுகள், மானிட்டர், புரஜெக்டர், நெட்வொர்க் சார்ந்த கருவிகள் மற்றும் ஸ்பீக்கர் உள்ளிட்ட பிற டிவைஸ்கள் ஆகியவற்றின் தயாரிப்பிலும் ஏசர் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே மின்சாதன பொருட்களுடன் சேர்த்து எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியையும் ஏசர் கையில் எடுத்திருக்கின்றது.

இந்த பணியை கையில் எடுத்து அந்நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலே இந்த முவி 125 4ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அதேவேளையில், இந்த பிரிவில் போட்டியும் அதிகம்.
இந்த பிரிவில் ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஏத்தர் எனெர்ஜி ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவர்களுக்கு போட்டி அளிக்கும் விதமாக ஏசர் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது ஓர் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.
குறிப்பாக நகர்புற பயன்பாட்டை மையப்படுத்தி இந்த ஸ்கூட்டரை ஏசர் வடிவமைத்து, தயாரித்து இருக்கின்றது. இதன் தயாரிப்பில் ஐரோப்பிய எஞ்ஜினியரிங் தொழில்நுட்பத்தை ஏசர் கையாண்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதனால், இந்தியாவின் எந்த மாதிரியான சாலையையும் சமாளிக்க முடியும் என்றும் நிறுவனம் கூறுகின்றது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பு வசதிகள்: ஸ்வாப்பபிள் பேட்டரி (கழட்டி மாட்டும் வசதிக் கொண்டது), இலகு ரக எடைக் கொண்ட சேஸிஸ்கள், 16 அங்குல வீல்கள், சிறப்பம்சங்களை கஸ்டமைஸ் செய்யும் வசதி என ஏகப்பட்ட சிறப்பு வசதிகள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றன.
இதனால், மணிக்கு 75 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். இதுதவிர, ஓர் முழு சார்ஜில் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். முவி 125 4ஜி இ-பைக்-கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வாயிலாகவே உற்பத்தி செய்யப்பட்டு இருக்கின்றது. ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஏசர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இ-பைக்-கோ நிறுவனம் உற்பத்தி செய்திருக்கின்றது.
இ-மொபிலிட்டி சேவையில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இ-பைக்-கோ இருக்கின்றது. இந்த நிறுவனங்களும் இணைந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமின்றி இன்னும் பிற மின்சார வாகனங்களையும் உற்பத்தி செய்ய இருக்கின்றன. அந்தவகையில், எலெக்ட்ரிக் பைக், மூன்று சக்கர வானம் மற்றும் டிரைக் ரக வாகனங்களையும் இந்த கூட்டணி உற்பத்தி செய்ய இருக்கின்றது.
இந்த இ-பைக்-கோ நிறுவனம், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் மட்டுமில்லைங்க, மார்க்கெட்டிங் மற்றும் கஸ்டமர் சப்போர்ட் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் மிகப் பெரிய போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது.
ஆகையால், ஏசர் முவி 125 4ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மிக மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளே மிக அதிகமாக இருக்கின்றது. இதன்படி ரூ. 1.10 லட்சம் அல்லது ரூ. 1.20 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியர்கள் பெரும்பாலானோர் விலையை பெரிதாக பொருட்படுத்துவதாக தெரியவில்லை. அதேவேளையில், தாங்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்ப அதிக சிறப்பம்சங்களை அது கொண்டிருக்கின்றதா என்றே எதிர்பார்க்கின்றனர். அந்தவகையில், முவி அதிக அம்சங்களைக் கொண்டிருக்கும் எனில் இந்தியர்களிடத்தில் அமோக வரவேற்பை அது தாராளமாகப் பெறும்.


Click it and Unblock the Notifications








