கம்மியான விலையில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! கொஞ்சம் காசு சேர்த்து வெச்ச போதும்... 2024இல் அறிமுகம்!
ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் வருகிற 2024ஆம் ஆண்டில், குடும்பத்தில் உள்ள அனைவரும் அன்றாடம் பயன்படுத்துவதற்கு ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது எந்த மாதிரியான ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என்பதை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களுள் ஒன்று ஏத்தர் எனர்ஜி ஆகும். 450எஸ், 450எக்ஸ் என்ற செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்பதினாலேயே இவற்றின் விலைகள் சற்று அதிகமாக உள்ளன.

அதுமட்டுமின்றி, தற்போதைய ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அளவிலும் ஒல்லியதாக இருப்பதால், பொருட்களை வைத்து எடுத்து செல்வதும் கடினமானதாக உள்ளது. இதனை புரிந்துக் கொண்டு, நன்கு பருத்த உடலமைப்பில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அடுத்த 2024ஆம் வருடத்தில் அறிமுகம் செய்ய ஏத்தர் எனர்ஜி தயாராகி வருகிறது. இதனை ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் சிஇஓ தருண் மெஹ்தா உறுதிப்படுத்தி உள்ளார்.
அளவில் பெரியதாக கொண்டுவரப்படுவதால், பொருட்களை வைக்க கூடுதல் இடவசதி கிடைக்கும் என்பது மட்டுமின்றி, சவுகரியத்திற்கும் குறை இருக்காது என தருண் மெஹ்தா கூறியுள்ளார். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏத்தரின் விலை குறைவான எண்ட்ரீ-லெவல் தயாரிப்பாக இருக்கும் என மெஹ்தா உறுதிப்படுத்தி உள்ளார்.

இதனால், ஏத்தரின் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போதைய 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அளவிற்கு செயல்படுதிறன் மிக்கதாக இருக்காது. இதனால், ஓலா எஸ்1, பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப் போன்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இவ்வாறு புத்தம் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்டுவரும் அதேநேரம் தற்போதைய 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் அப்டேட் செய்ய உள்ளதாக மெஹ்தா அறிவித்துள்ளார். தற்போதைய மாடல்களை காட்டிலும் இன்னும் கூர்மையான லைன்களை கொண்டதாக மற்றும் கூடுதல் செயல்படுதிறன் மிக்கதாக கொண்டுவரப்படும் புதிய 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் அடுத்த 2024ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த ஏத்தர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன், 2024 ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெஸ்ட்-இன்-கிளாஸ் வசதிகளை கொண்டவை ஆகவும் இருக்கும் என்பது உறுதி. இந்த அப்டேட்களினால் புதிய 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து தற்சமயம் 450எஸ் மற்றும் 450எக்ஸ் என இரு விதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதில், 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.30 இலட்சமாகவும், 450எக்ஸ்-இன் விலை ரூ.1.38 இலட்சமாகவும் உள்ளது. ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.7kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 150கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். 450எஸ் மற்றும் 450எக்ஸ் இரண்டிலும் அதிகப்பட்சமாக மணிக்கு 90kmph வேகத்தில் செல்லலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோரின் எண்ணிக்கை சமீப காலங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனை ஓலா, பஜாஜ், டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த ரேஸில் தன்னையும் இணைந்துக் கொள்ள ஏத்தர் எனர்ஜி தயாராகி வருகிறது. தற்போதைய ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சற்று அதிக விலையினால் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகுவது இல்லை.


Click it and Unblock the Notifications









