ஈஸியா மடக்கி எடுத்துனு போய்டலாம்!! ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்த எலக்ட்ரிக் சைக்கிள் - உருவாக்குனது யாரு?
உலகிலேயே முதல்முறையாக டைமண்ட் ஃப்ரேமில் இ-சைக்கிள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த இ-பைக்கை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மகிழ்ச்சியுடன் ஓட்டி பார்த்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். அத்துடன், இவர் இந்தியாவில் புதியதாக தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதையும் மறந்தது கிடையாது. இத்தகைய மனிதரின் டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஓர் பதிவு பதிவிடப்பட்டுள்ளது. இது ஓர் எலக்ட்ரிக் சைக்கிளை பற்றிய டுவிட்டர் பதிவாகும்.

மும்பை ஐஐடி -ஐ சேர்ந்தவர்கள் ஆரம்பித்துள்ள 'ஹார்ன்பேக்' என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் புதிய தயாரிப்பை பற்றி இந்த டுவிட்டர் பதிவில் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார். ஹார்ன்பேக் ஸ்டார்ட்-அப் நிறுவனம் உலகிலேயே முதல்முறையாக மடக்கி எடுத்துச் செல்லக்கூடிய எலக்ட்ரிக் சைக்கிளை டைமண்ட் ஃப்ரேமில் உருவாக்கி உள்ளது.
எலக்ட்ரிக் சைக்கிள் ஒன்று டைமண்ட் ஃப்ரேமில் உருவாக்கப்படுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. அத்துடன், இந்த இ-சைக்கிளின் மற்றொரு சிறப்பம்சம், இந்த சைக்கிளில் இருப்பவை முழு-அளவு சக்கரங்கள் ஆகும். இந்த இ-சைக்கிளின் பெயர் 'எக்ஸ்1' ஆகும். தொழிற்சாலையில் இருந்து ஹார்ன்பேக் எக்ஸ்1 சைக்கிளை வாங்கியது மட்டுமின்றி, அதனை மும்பையில் உள்ள தனது அலுவலத்தின் வளாகத்திற்குள் ஆனந்த் மஹிந்திரா ஓட்டியும் பார்த்துள்ளார்.

இந்த சைக்கிள் ரைடிங் குறித்து இவர் வெளியிட்டுள்ள படங்களில், ஹார்ன்பேக் எக்ஸ்1 இ-சைக்கிளை ஆனந்த் மஹிந்திரா ஓட்டுவதும், பின்னர் அதனை இரண்டாக மடக்கி, எஸ்யூவி கார் ஒன்றின் பின்பக்கத்தில் வைப்பதும் காட்டப்பட்டுள்ளது. ஹார்ன்பேக் எக்ஸ்1 இ-சைக்கிள் ரூ.45,000 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த எலக்ட்ரிக் சைக்கிளில் 36 வோல்ட், 7.65 ஆம்பியர் பேட்டரி 250 வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாருடன் பொருத்தப்படுகிறது. பேட்டரியை சைக்கிளில் இருந்து நீக்கிக்கொள்ள முடியும். எலக்ட்ரிக் மோட்டார் மூலம் அதிகப்பட்சமாக 36 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். வழக்கமான வீட்டு உபயோக பிளக் பாயிண்ட்டில் சார்ஜ் செய்தால், சைக்கிளின் பேட்டரியை 3 மணிநேரங்களுக்குள் முழுவதுமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்த பின் சைக்கிளில் எலக்ட்ரிக் பவரில் அதிகப்பட்சமாக 45கிமீ தொலைவிற்கு செல்ல முடியும். ஹார்ன்பேக் எக்ஸ்1 இ-சைக்கிளில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், ஸ்மார்ட் எல்சிடி டிஸ்பிளே மற்றும் 28 இன்ச்சில் சக்கரங்களை சொல்லலாம். ஸ்மார்ட் எல்சிடி டிஸ்பிளே மூலமாக சைக்கிள் இயங்கும் வேகம், பேட்டரியில் சார்ஜ் அளவு உள்பட சில முக்கியமான விபரங்களை பெற முடியும்.
இந்த எலக்ட்ரிக் சைக்கிளை கிரே-ஆரஞ்ச் மற்றும் நீலம்-ஆரஞ்ச் என்கிற 2 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் வாங்கலாம். ஹார்ன்பேக் எக்ஸ்1 குறித்து ஆனந்த் மஹிந்திரா கருத்து தெரிவிக்கையில், "ஐஐடி மும்பை காய்ஸ் மீண்டும் ஒருமுறை நம்மை பெருமைப்படுத்தி உள்ளனர். முழு-அளவு சக்கரங்களுடன் உலகிலேயே முதல்முறையாக அவர்கள் டைமண்ட் ஃப்ரேம் இ-பைக்கை உருவாக்கியுள்ளனர்" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் ஹார்ன்பேக் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இதன் காரணமாகவே, சைக்கிளை விளம்பரப்படுத்தும் வகையிலும், அதேநேரம் அதன் தரத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கத்திலும் தொழிற்சாலையில் உருவாகும் எக்ஸ்1 இ-சைக்கிள்களுள் ஒன்றை பெற்று ஓட்டிக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications









