தொடங்கிட்டாங்க.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மலிவு விலை ஏத்தர் இ-ஸ்கூட்டருக்கு ப்ரீ புக்கிங் ஸ்டார்டாகிருச்சு!
பிரபல மின்சார இருசக்கர (Electric Two Wheeler) வாகன உற்பத்தி நிறுவனமான ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) இந்தியாவில் மலிவு விலையில் ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-ஐ விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக சமீப சில தினங்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
தற்போதைய நிலைவரப்படி நிறுவனத்தின்கீழ் ஏத்தர் 450 எக்ஸ் (Ather 450X) எனும் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் மட்டுமே விற்பனையில் இருக்கின்றது. அதன் விலை 1 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த தேர்வில் ப்ரோ ஆட்-ஆன் எனும் மதிப்புக்கூட்ட வசதிகளைச் சேர்த்துக் கொள்ள முடியும்.

அதைச் செய்யும்பட்சத்தில் அதன் விலை ரூ. 1.67 லட்சமாக மாறும். இந்த விலை மிக உயரியவை ஆகும். இதனால்தான் பலருக்கு ஏத்தரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எட்டாக் கனியாக இருக்கின்றன. இந்த காரணத்திற்காகவே மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் ஏத்தர் எனெர்ஜி தற்போது களமிறங்கி இருக்கின்றது.
அதன்படி, விரைவில் ஏத்தர் 450 எஸ் (Ather 450S) எனும் புதிய மாடலை அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதற்கு ஏத்தர் 450எக்ஸைக் காட்டிலும் குறைவான விலையே நிர்ணயிக்கப்பட இருக்கின்றது. இப்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி அறிமுகமாக ஏத்தர் 450 எஸ் மாடலுக்கு 1,29,999 ரூபாயே விலையாக நிர்ணயம் செய்யப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்த மலிவு விலை இ-ஸ்கூட்டருக்கான ப்ரீ புக்கிங் பணிகளே தற்போது தொடங்கி இருக்கின்றது. இந்த தகவல் இதன் வருகையை பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஏத்தர் 450எக்ஸ் மாடலைக் காட்டிலும் விலை குறைவானது இது என்பதால் சிறப்பம்சங்கள் மற்றும் ரேஞ்ஜ் விஷயத்திலும் 450எக்ஸைக் காட்டிலும் அடிநிலை மாடலாகவே அது இருக்கும்.
உதாரணமாக இதன் ரேஞ்ஜ் 115 கிமீட்டராகவும், டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீட்டராக மட்டுமே இருக்கும் என கூறப்படுகின்றது. இதுதவிர டிஎஃப்டி தொடுதிரைக்கு பதிலாக எல்சிடி ஸ்கீரினே இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கும். இதுபோன்று பல விஷயங்களில் வசதி குறைவான வாகனமாகவே ஏத்தரின் புதிய மாடல் 450எஸ் இருக்கப்போகின்றது.
இதுதவிர, கூகுள் மேப் நேவிகேஷன் மற்றும் ஆவணங்களை சேகரிக்கும் வசதி உள்ளிட்டவற்றையும் 450எஸ் இழக்க இருக்கின்றது. இதேபோல் ப்ளூடூத் வசதியையும் இந்த வாகனம் தக்க வைத்துக் கொள்ளுமா? அல்லது இழக்குமா?, என்பது தெரியவில்லை. அறிமுகத்தின் போதே அதுபற்றிய தகவல் தெரிய வரும்.
ஆகஸ்டு 3 ஆம் தேதி அன்றே ஏத்தர் 450எஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஓலா எஸ்1, டிவிஎஸ் ஐக்யூப், ஆம்பியர் பிரைமஸ் மற்றும் ஹீரோவின் விடா வி1 ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக மாறும்.
குறிப்பாக மலிவு விலையில் 450எஸ் விற்பனைக்கு வர இருப்பதால் இந்தியர்கள் மத்தியில் இதற்கு எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. சொல்லப்போனால் பட்ஜெட் விலையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டும் என்கிற பிளானில் இருப்போர்கள் பலரின் கவனத்தை இந்த வாகனம் வெகுவாக ஈர்த்த வண்ணம் இருக்கின்றது.
இந்த நிலையிலேயே வரும் ஆகஸ்டு மாதம் மூன்றாம் தேதி அன்று புதிய ஏத்தர் 450எஸ் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. இந்த மாதத்தில் இன்னும் சில புதுமுக மின்சார வாகனங்கள் மற்றும் ஐசிஇ வாகனங்களும் விற்பனைக்கு வர இருக்கின்றன என்பது. ஆகஸ்டு மாதம் வாகன பிரியர்களுக்கு விருந்தளிக்கும் மாதமாக அமைய இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் எனெர்ஜி விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதன் வருகையால் நிறுவனத்தின் விற்பனை விகிதம் அடுத்தடுத்து வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








