ஏத்தரின் ஓசூர் ஃபேக்ட்ரியில் வேலை மும்முரமாக ஓடுது!! ஐந்தே வருஷத்தில் 2 இலட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் 2018ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் 2 இலட்ச எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து அசத்தி உள்ளது. 2 லட்சமாவது ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி பணிகள் அனைத்தும் முடிந்து, சமீபத்தில் ஏத்தர் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளது.
இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக ஏத்தர் எனர்ஜியை சொல்லலாம். பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை நம் தமிழகத்தில் ஓசூரில் அமைந்துள்ளது. இந்தியாவில் நீண்ட காலமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் ஈடுப்பட்டுவரும் நிறுவனங்களுள் ஒன்றாக ஏத்தர் எனர்ஜியை சொல்லலாம்.

2018இல் இருந்து கிட்டத்தட்ட கடந்த 5 வருடங்களாக ஏத்தர் எனர்ஜியின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிலையில், ஏத்தரின் ஓசூர் தொழிற்சாலையில் இருந்து 2 இலட்சமாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி பணிகள் அனைத்தும் முடித்து அசெம்பிள் லைனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்பின், அந்த ஸ்கூட்டர் நேரடியாக ஷோரூமுக்கு அனுப்ப வேண்டியதுதான் பாக்கி.
இந்த 2 லட்சமாவது ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 450எக்ஸ் ஆகும். 2018இல் இருந்து விற்பனையில் இருக்கும் இந்த ஸ்கூட்டர் தற்போது 2 இலட்சமாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் அமைந்திருப்பது ஏத்தர் எனர்ஜிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 இலட்சமாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றம் செய்யப்படுவதை ஏத்தர் நிறுவனம் படத்துடன் அதன் சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வின் போது, ஏத்தர் எனர்ஜியின் துணை நிறுவனர் ஸ்வப்னில் ஜெயின் கலந்துக் கொண்டார். கடந்த 2022ஆம் வருடத்தில், ஏத்தர் நிறுவனம் 3ஆம் தலைமுறை 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து, சில வாரங்களிலேயே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் 50 ஆயிரம் மைல்கல்லை வெற்றிக்கரமாக கடந்தது.
ஆனால், அதற்கடுத்த ஒரே வருடத்திற்குள் 2 இலட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியை ஏத்தர் நிறுவனம் கடந்திருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மார்க்கெட்டில் ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்திய முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 450எஸ் ஆகும். அதன்பின், 450எக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. 450எஸ் ஸ்கூட்டரை காட்டிலும், 450எக்ஸ் மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதன் காரணமாகவே, 3ஆம் தலைமுறை ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் வரையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் தலைமுறை 450எக்ஸ் இ-ஸ்கூட்டர் 2020இல் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்து இந்தியாவின் செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டராக 450எக்ஸ் விளங்கி வருகிறது. புதிய ஏத்தர் 450எக்ஸ் ஜென் 3 கடந்த 2022இல் அறிமுகம் செய்யப்பட்டது.
450எக்ஸ் ஜென் 3 ஸ்கூட்டரில் 3.7 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. அடுத்ததாக, ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அதன் 3வது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக 450 அபெக்ஸை விற்பனைக்கு கொண்டுவர தயாராகி வருகிறது. இது தற்போதைய 450எக்ஸ் ஸ்கூட்டரை காட்டிலும் செயல்திறன்மிக்கதாக இருக்கும். 450 அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தவிர்க்க முடியாத எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமாக ஏத்தர் எனர்ஜியை சொல்லலாம். இருப்பினும், கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பின் இப்போதுதான் 2 இலட்சம் மைல்கல்லை ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் இந்த நிறுவனம் கடந்திருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணம், ஏத்தர் இ-ஸ்கூட்டர்கள் செயல்படுதிறன் மிக்கவை, அதற்கேற்ப அவற்றின் விலைகளும் அதிகமாக உள்ளன.


Click it and Unblock the Notifications









