ஓசூரில் ஃபேக்ட்ரி வைத்திருப்பதால் சாதாரண இவி நிறுவனம்னு நினைச்சிட்டீங்களா!! ஏத்தரின் முதல் வெளிநாட்டு ஷோரூம்!
ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் அதன் முதல் சர்வதேச ஸ்கூட்டர் விற்பனை மையத்தை நேபாளத்தில் திறந்துள்ளது. இந்தியாவின் அண்டான நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இந்த விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது. ஏத்தர் எனர்ஜியின் இந்த டீலர்ஷிப் மையத்தின் சிறப்பம்சங்களை இனி பார்க்கலாம்.
ஏத்தர் எனர்ஜி, இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களுள் ஒன்று, ஏத்தர் ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூரிலும், உற்பத்தி தொழிற்சாலை ஓசூருக்கு அருகேயும் உள்ளன.

ஏத்தர் நிறுவனத்துக்கு இந்தியாவில் பல நகரங்களில் விற்பனை மையங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவை தாண்டி வெளிநாட்டில் எந்த ஷோரூமும் ஏத்தர் எனர்ஜிக்கு இருந்ததில்லை. இதனால், முழுக்க முழுக்க ஓர் இந்திய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த குறை நீக்கியுள்ளது.
ஆம், ஏத்தர் எனர்ஜியின் முதல் ஷோரூம் வெளிநாட்டில் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளுள் ஒன்றான நேபாளத்தில் தனது முதல் வெளிநாட்டு ஷோரூமை ஏத்தர் எனர்ஜி திறந்துள்ளது. நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் திறக்கப்பட்டுள்ள இந்த ஷோரூமுக்கு ஏத்தர் ஸ்பேஸ் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

வைத்யாவின் தொழில்துறை & வர்த்தக குடும்பங்கள் கூட்டமைப்பில் ஓர் அங்கமாக விளங்கும் வைத்யா எனர்ஜி நிறுவனத்துடன் இணைந்து இந்த விற்பனை மையத்தை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் காத்மண்டுவில் திறந்துள்ளது. இந்த பகுதியில் புதிய ஷோரூமை திறக்க உள்ளதை கடந்த அக்டோபர் மாதத்திலேயே ஏத்தர் நிறுவனம் அறிவித்து இருந்தது.
அதன்பின்னர், காத்மண்டு மாநகரத்தை சுற்றிலும் தனது 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விளம்பரப்படுத்தும் பணியில் ஏத்தர் எனர்ஜி இறங்கியது. இதன் மூலமாக, ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் காத்மண்டு மக்களிடைய குறிப்பிடத்தக்க கவனத்தை பெற்றுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காத்மண்டுவில் தனது 2வது எக்ஸ்பிரீயன்ஸ் ஷோரூமை திறக்கும் திட்டத்திலும் ஏத்தர் எனர்ஜி உள்ளது.

இந்த ஷோரூமையும் வைத்யா எனர்ஜி உடன் இணைந்தே ஏத்தர் எனர்ஜி திறக்கிறது. இவற்றின் மூலமாக, நேபாள நாட்டில் முதலாவதாக தலைநகரில் நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதில் ஏத்தர் தீவிரமாக இருப்பது தெரிய வருகிறது. காத்மண்டுவை தொடர்ந்து, நேபாளத்தின் முக்கிய 7 நகரங்களில் குறைந்தது 10 விற்பனை மையங்கள் மூலமாக வரும்காலங்களில் மார்க்கெட்டை விரிவுப்படுத்த வேண்டும் என்பது ஏத்தர் எனர்ஜியின் விருப்பம்.
ஏத்தர் எனர்ஜியின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நேபாளத்தில் விற்பனை செய்வது மற்றும் அவற்றிற்கான சர்வீஸ்களை வழங்குவது உள்ளிட்ட பணிகளை வைத்யா எனர்ஜி மேற்கொள்ள உள்ளது. மேலும், நேபாள நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுவரும் ஏத்தர் கிரிட் சார்ஜிங் நிலையங்களையும் வைத்யா எனர்ஜி நிறுவனம் தான் மேற்பார்வை செய்ய உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தென் பகுதியில் உருவான ஓர் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் நாடு கடந்து வேறொரு நாட்டில் சந்தையை விரிவுப்படுத்துவது கேட்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோன்று, மியான்மர், பூடான், வங்காள தேசம் போன்ற இந்தியாவின் மற்ற அண்டை நாடுகளிலும் நெட்வொர்க்கை விரிவுப்படுத்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிடல் வேண்டும். ஏனெனில், இந்த நாடுகளில் ஷோரூம்களை திறப்பது சற்று சுலபமான காரியமே.


Click it and Unblock the Notifications









