காலம் வேகமா ஓடுது... முதல் பிஎம்டபிள்யூ பைக் வெளிவந்து 100 வருஷமாயிடுச்சு! புதிய 100 இயர்ஸ் எடிசன் பைக்குகள்..
பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் இந்தியாவில் அதன் ஆர் நைண்டி மற்றும் ஆர்18 மோட்டார்சைக்கிள்களின் புதிய 100 இயர்ஸ் ஸ்பெஷல் எடிசன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்குகளை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஜெர்மனி, ஆட்டோமொபைலின் பிறப்பிடம் என்று சொன்னால் அதில் எந்த மிகையும் இல்லை. ஏனெனில் இன்று உலகளவில் பிரபலமான ஆட்டோமொபைல் பிராண்ட்களாக விளங்கும் மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்டவை ஜெர்மனியில் தோன்றியவையே. இதில் பிஎம்டபிள்யூ முதல் உலக போர் மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்த 1916ஆம் ஆண்டில் விமான என்ஜின்களை தயாரிக்கும் நிறுவனமாக அறிமுகமாகியது.

அதன்பின் கார்களை தயாரித்து, விற்பனை செய்ய ஆரம்பித்த பிஎம்டபிள்யூ நிறுவனம் 1923இல் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்வதற்காக பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் என்ற புதிய சப்-பிராண்டை துவங்கியது. இதன்படி பார்த்தால், பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் துவங்கப்பட்டு இந்த 2023ஆம் ஆண்டோடு 100 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்த நேரத்தில், பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் பிராண்ட் உருவான வரலாற்றை கூறினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
1922 டிசம்பரில் அப்போதைய பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதன்மை வடிவமைப்பாளர் மேக்ஸ் ஃப்ரிஸ் முதல்-முழு பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிளை வரைந்து முடித்தார். அந்த பைக்கின் இதய பகுதியில் ஏர்-கூல்டு 2-சிலிண்டர் 4-ஸ்ட்ரோக் பாக்ஸர் என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது. அதன்பின் அந்த பைக்கை ஆர்32 என்ற பெயரில் 1923 செப்டம்பரில் முதன்முதலாக உலகிற்கு வெளிக்காட்டினர். இதன் பின்னரே பிஎம்டபிள்யூ பைக்குகள் தொடர்ச்சியாக வெளிவர துவங்கின.

இந்த 100 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாகவே ஆர் நைண்டி மற்றும் ஆர் 18 பைக்குகளில் புதிய 100 இயர்ஸ் எடிசன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டும் லிமிடெட் எடிசன்களாகும். அதாவது இந்த 100 இயர்ஸ் பைக்குகள் மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. எந்த அளவிற்கு என்றால், இந்த பைக்குகள் இரண்டும் உலகளவிலேயே வெறும் 1923 யூனிட்கள் மட்டுமே தயாரித்து, விற்பனை செய்யப்பட உள்ளன.
1923 என்பது பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் துவங்கப்பட்ட வருடத்தை குறிக்கிறது. 1923இல் எத்தனை யூனிட்கள் இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை. இதனால் விருப்பப்படுவோர் உடனடியாக இந்த 100 இயர்ஸ் பைக்குகளை புக் செய்துவிடுவது நல்லது. இந்த பைக்குகளுக்கான முன்பதிவுகள் இன்று முதல் (பிப்.21) நாடு முழுவதும் துவங்கப்பட்டுள்ளன.

இவை இரண்டில் ஆர் நைண்டி 100 இயர்ஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.24 இலட்சமாகவும், ஆர் 18 100 இயர்ஸ் -இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.25.90 இலட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய 100 இயர்ஸ் எடிசன் பைக்குகளை அறிமுகம் செய்திருப்பது குறித்து பிஎம்டபிள்யூ குழுமத்தின் இந்தியாவிற்கான தலைவர் விக்ரம் பவா கருத்து தெரிவிக்கையில், "100 ஆண்டுகளுக்கு முன் ஆர்32 பைக் ஒரு தனித்துவமான வெற்றி கதையை தொடங்கியது.
இன்று 2 புதிய ஐகான்களுடன் எங்களின் அற்புதமான வரலாற்றை கொண்டாடுகிறோம். பிஎம்டபிள்யூ ஆர் நைண்டி 100 இயர்ஸ் மற்றும் ஆர்18 100 இயர்ஸ் ஒவ்வொன்றும் 1,923 யூனிட்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் முழுமையான ஆர்வலர்களுக்கானது" என்றார். பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் தனது பைக்குகளுக்கு 3 வருட மற்றும் முடிவிலா கிமீ உத்தரவாதத்தை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








