100கிமீ கூட முழுசா ஓடல.. அதுக்குள்ள சீஸ் ஆகிய எஞ்ஜின்.. போலீஸ் வந்தும் பலன் கிடைக்காமல் போச்சு..
இந்தியர்கள் பலரின் ஃபேவரிட் இருசக்கர வாகனமாக கேடிஎம் (KTM) நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. அந்தவகையில், கேடிஎம் ட்யூக் 390 (KTM Duke 390) பைக் மாடலுக்கு இந்திய இளசுகள் மத்தியில் வரவேற்பு மிக மிக அதிகம். இந்த இருசக்கர வாகனமே தற்போது மிகப் பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கின்றது.
அண்மையில் வாங்கப்பட்ட புத்தம் புதிய கேடிஎம் ட்யூக் 390 சில பத்து கிமீ பயணத்திற்கு உள்ளாகவே எஞ்ஜின் சீஸ் பழுதடைந்திருக்கின்றது. இந்த சம்பவம் கேடிஎம் பைக் பிரியர்களை மிகப் பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. குறிப்பாக, ட்யூக் 390 பைக் விரும்பிகளை இந்த தகவல் அதிர்ச்சியின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றது.

புத்தம் புதிய பைக்கில் எப்படி இந்த மாதிரியான ஓர் சிக்கல் ஏற்படும் என்பதே பலரின் கேள்விக் குறியாக அமைந்திருக்கின்றது. குறிப்பாக, பைக் வாங்கி முழுமையாக 100 கிமீ தூரம்கூட பயணித்திராத நிலையிலேயே எஞ்ஜின் பழுதடைந்திருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் 90 கிமீ பயண இடைவெளியிலேயே கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் எஞ்ஜின் சீஸ் ஆகி இருக்கின்றது.
பைக்கின் உரிமையாளர் ஓர் யுட்யூபர் என தெரிகின்றது. அவர், தன்னுடைய புத்தம் புதிய கேடிஎம் 390 பைக்கில் அவருடைய நண்பருடன் சேர்ந்து டெல்லியில் இருந்து நொய்டாவிற்கு பயணிக்கத் தொடங்கி இருக்கின்றார். தாஜ் எக்ஸ்பிரஸ் வே வாயிலாகவே அவர்கள் அந்த பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே பயணம் தொடங்கிய சில கிமீ தூரத்திலேயே எஞ்ஜினில் இருந்து விநோதமான சத்தம் வர தொடங்கி இருக்கின்றது. முதலில் அந்த சத்தம் எங்கிருந்து வருகின்றது என்பதை அறியாமலேயே அந்த விளாக்கர் இருந்திருக்கின்றார். அடுத்தடுத்து சத்தம் கூடிக் கொண்டே சென்றிருக்கின்றது. இந்த நிலையிலேயே எஞ்ஜினில் இருந்தே சத்தம் வருகிறது என்பதை உணர்ந்திருக்கின்றார்.
என்னதான் நடக்கின்றது என்பதை உணர்வதற்குள் மற்றுமொரு சிக்கலமாக கியரை மாற்றுவதில் கோளாறு ஏற்பட்டு இருக்கின்றது. இதுவே அவர் சந்தித்த அடுத்த மிகப் பெரிய சிக்கல் ஆகும். ஒரு கியருக்கு மேல் அவர்களால் பைக்கை மாற்றவே முடியவில்லை. மேலும், சம்பவம் நடைபெற்றது அதி காலை என்பதால், அவர்களுக்கு போதிய உதவி கிடைக்கவில்லை.

எனவே, முதல் கியரிலேயே மிக மிக பொறுமையாக இயக்கி மீண்டும் வீட்டிற்கு வந்தடைந்தார். அங்கு சர்வீஸ் மையத்தில் நிகழ்ந்தவை அனைத்தைப் பற்றியும் தெரிவித்து இருக்கின்றார். குறிப்பாக, 100 கிமீகூட டிராவல் செய்யாத நிலையில் தன்னுடைய பைக் இந்த நிலைமைக்கு போயிருப்பது குறித்து அழர் கவலை தெரிவித்தார்.
எஞ்ஜின், கிளட் பேட்டை ஆய்வு செய்ய வேண்டும் என சர்வீஸ் மைய ஊழியர்கள் இளைஞரிடத்தில் கூறி இருக்கின்றார். ஆனால், 100 கிமீ மட்டுமே வாகனம் ஓடியதைக் காரணம் காட்டி வெறும் கிளட்ச் பிளேட்டை மட்டும் ஆய்வு அவர் அனுமதித்தார். எஞ்ஜினை பிரித்து பார்க்க அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
மேலும், டீலர்ஷிப் தனக்கு பழுதடைந்த மோட்டார்சைக்கிளை விற்றுவிட்டதாகவும், டெலிவரி எடுக்கும் முன் தன்னை பைக்கை ஆய்வு செய்யக் கூட அவர்கள் அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், இந்த சம்பவம் குறித்து எந்த தகவலையும் வெளியில் கூற வேண்டாம் என்றும் ஷோரூம் நிர்வாகம் யுட்யூபரிடத்தில் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
ஆனால், அவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மற்றவர்களுடன் பகிரந்துக் கொள்ளும் விதமாக தான் எடுத்து அனைத்து வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஒட்டுமொத்தமாக மூன்று வீடியோக்களை அவர் பகிர்ந்திருக்கின்றார். இதற்கிடையில், ஷோரூம்க்கு போலீஸும் வரவழைக்கப்பட்டு இருக்கின்றது. அவர்கள் வாடிக்கையாளரின் பக்கம் இருந்ததை வீடியோக் காண்பிக்கின்றது.
மேலும், வாடிக்கையாளர் தரப்பில் இருந்து பைக்கை திருப்பிப் பெற்றுக் கொள்ள கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால், ஷோரூம் நிர்வாகம் பதிவு செய்யப்பட்ட பைக்கை திரும்பி பெற இயலாது என கூறி மறுப்பு தெரிவித்து விட்டது. ஆகையால், விரைவில் இதுகுறித்து நீதிமன்றத்தில் கேடிஎம் ட்யூக் 390 பைக் உரிமையாளர் வழக்கைத் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த காலங்களில் இதுபோல் புத்தம் புதிய வாகனங்களால் இன்னல்களைச் சந்தித்த வாடிக்கையாளர்களுக்கு சாதமாகவே தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்றன. அந்தவகையில், இந்த வழக்கு நீதிமன்றம் வரை செல்லும் எனில் கட்டாயம் கேடிஎம் ட்யூக் 390 பைக் பிரியருக்கு சாதகமான தீர்ப்பே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









