ஜூன் 1 முதல் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை எக்கு தப்பா ஏறப்போகுது! மே மாசமே வாங்குனா விலை கம்மி தான்!
மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட மானியங்களை அதிரடியாகக் குறைத்ததால் வரும் ஜூன் 1ம் தேதி முதல் எலெக்ட்ரிக் வாகனங்களில் விலை தாறுமாறாக ஏறப்போகிறது. வரிசையாக எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் தங்கள் விலையேற்றத்தை அறிவிக்கவுள்ளனர். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
மத்திய அரசு இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க மத்திய ஹெவி இன்ட்ஸ்ட்ரீஸ் துறை மூலம் மானியங்களை வழங்கி வருகிறது. அதன்படி எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது. Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles (FAME) என இந்த திட்டத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஃபேம் திட்டத்தின் 2வது கட்ட மானியம் கடந்த 2019ம் ஆண்டு துவங்கியது. இதன் படி எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிகபட்சம் 40 சதவீதம் வரையிலும் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு ஒரு கிலோவாட் ஹவர்க்கு ரூ15 ஆயிரமும் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியம் நேரடியாக மக்களுக்குக் கிடைக்கும் வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விலையில் மறைமுகமாகக் குறைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் மானியத்தின் அளவுகளைக் குறைத்து புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி வரும் ஜூன் 1ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியம் மாற்றியமைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. 40 சதவீதம் அதிகபட்ச மானியமாக இருந்தது தற்போது 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதே போல எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு கிலோவாட் ஹவர் திறனுக்கு வழங்கப்பட்ட ரூ15 ஆயிரம் மானியம் இனி ரூ10 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஆரம்பிக்கும்போது ரூ10 ஆயிரம் கோடியை இதற்கான மானியமாக வழங்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டது. தற்போது கடந்த 5 ஆண்டுகளாக எலெக்ட்ரிக் 2, 3 மற்றும் 4 வீலர்களுக்கும், எலெக்ட்ரிக் பஸ்களுக்கும் இந்த மானியம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த மானியங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மக்கள் மத்தியில் அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டது. மேலும் இந்த மானியங்களில் அதிகமான எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் இந்த துறையில் நுழைவார்கள் என்பதும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. இந்நிலையில் சமீபகாலமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகமாகியுள்ளது. பரவலாக இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஓட துவங்கியுள்ளன.

இந்நிலையில் இருக்கும் பணத்தை வைத்து இன்னும் அதிகமாக மக்களைப் பலனடைய வைக்க மானியங்களைக் குறைத்துள்ளது. இதனால் மானியத்தின் அளவு குறைந்தாலும் அதிகமான வாகனங்களுக்கு மானியம் கிடைக்கும் என்பதால் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன் விளைவாக எலெக்ட்ரிக் வாகனங்களில் விலை அதிகமாக வாய்ப்புள்ளது. இனி எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் வரிசையாக விலை உயர்வை அதிகரிக்கலாம்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொருத்தவரை சிறப்பாக விற்பனையாகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 1,10,503 எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 90.48 சதவீதம் எலெக்ட்ரிக் 2 வீலர் மற்றும் பயணிகள் எலெக்ட்ரிக் 3வீலர் தான் அதிகம் விற்பனையாகியுள்ளது. இந்தியாவில் உ.பி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தான் அதிகமான வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.
எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனையில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ள நிறுவனம் என்றால் ஓலா தான் மிக அதிகமான விற்பனையைப் பெற்று வருகிறது. அதே போல 2வது இடத்தில் ஆம்பியர் நிறுவனம் இருக்கிறது. 3வது இடத்தில் தான் ஏத்தர் நிறுவனம் இருக்கிறது. மே மாதமும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சிறப்பாகவே இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும். எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து மக்களிடம் இன்னும் போதுமான விழிப்புணர்வு வேண்டும். மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கா சார்ஜிங் ஸ்டேஷன் உள்ளிட்ட கட்டுமானங்களை நிறுவவும் மானியங்கள் வழங்கப்பட வேண்டும் எனற எண்ணமும் மக்கள் மத்தியில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications









