சென்னையின் நிறைய இடத்துல சார்ஜிங் பாயிண்ட் வரபோகுது! இதுக்கு மேலையுமா மின்சார வாகனங்களை வாங்க தயங்க போறீங்க?..
ஸ்டார்ட் நிறுவனமாக கால் தடம் பதித்து இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்து இருக்கும் நிறுவனம் ஏத்தர் எனெர்ஜி. இந்நிறுவனம், வாடிக்கையாளர்களைத் தன் தயாரிப்பின் பக்கம் ஈர்க்க வேண்டும் என்கிற நோக்கில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகின்றது.
அந்த வகையில், தற்போது சென்னை வாசிகளை கவரும் பொருட்டு ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. பெரும்பாலானோர் மின்சார இருசக்கர வாகனங்களை தயாராக இருக்கின்றனர். ஆனால், போதிய அளவு அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தினால் அவற்றை வாங்க சற்றே தயக்கம் காட்டுகின்றனர்.

குறிப்பாக, சார்ஜிங் மைய தட்டுப்பாடே பலரின் மின் வாகன கனவிற்கு முற்று புள்ளியாக இருக்கின்றது. வீடுகளில் சார்ஜ் செய்ய முடியாதவர்கள், சார்ஜிங் மையங்களில் வைத்து இ-ஸ்கூட்டரை சார்ஜ் செய்து கொள்ளலாம் என நினைத்தால், குறிப்பிட்ட சில பகுதிகளிலேயே சார்ஜிங் மையங்கள் உள்ளன.
அந்த மையங்கள் பல நேரங்களில் வாகனங்கள் நிறைந்தவாறு காணப்படுவதாக கூறப்படுகின்றது. அதாவது, சார்ஜ் செய்ய வாகனங்கள் வரிசையில் காத்துக் கொண்டிருப்பதாக மின்வாகன பயன்பாட்டாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மின்சார வாகன சார்ஜிங் மையம் தட்டுப்பாடு என்பது தலைவிரித்தாடும் வகையிலேயே நாட்டில் உள்ளது.

இந்த நிலையை நமது சென்னையில் குறைக்கும் முயற்சியிலேயே ஏத்தர் எனெர்ஜி தற்போது களமிறங்கி இருக்கின்றது. இதுகுறித்து ஓர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் சுமார் 100 சதுர அடியில் சார்ஜிங் மையங்களை உருவாக்க இருப்பதாக நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்து இருக்கின்றது.
எம்ஆர்டிஎஸ்/ சப்-அர்பன் ரயில் நிலையங்களிலேயே ஏத்தரின் சார்ஜிங் மையங்கள் விரைவில் அமைக்கப்பட இருக்கின்றன. ஆகையால், பறக்கும் ரயில் என்று அழைக்கப்படும் சென்னை பீச் - வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்கள், சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் மற்றும் சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் உள்ள சென்னைக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் ஏத்தரின் சார்ஜிங் மையங்கள் பயன்பாட்டிற்கு வர இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

முதற்கட்டமாக 10 மிக முக்கியமான ரயில் நிலையங்களிலேயே ஏத்தர் தனது சார்ஜிங் க்ரிட்களை அமைக்க இருக்கின்றது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை சார்ஜ் செய்யும் வகையில் சார்ஜிங் கருவிகள் அமைக்கப்பட உள்ளன. 100 சதுர அடி என்பது மூன்று சார்ஜிங் கருவிகள் அமைக்கப் போதுமான இடம் ஆகும்.
இங்கு ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி பிற மின்சார வாகனங்களும் சார்ஜ் செய்து கொள்ள அனுமதிக்கப்படும். எலெக்ட்ரிக் கார், ஆட்டோ உள்ளிட்டவற்றையும் சார்ஜ் செய்து கொள்ள முடியும் என கூறப்படுகின்றது. நிறுவனத்தின் இந்த முயற்சி கட்டாயம் மின்சார வாகன பயன்பாட்டாளர்களை சென்னையில் கணிசமாக உயர்த்தும் என நம்பப்படுகின்றது.

இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஏத்தர் எனெர்ஜி சென்னையை மையமாகக் கொண்டு சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை விரிவுப்படுத்தும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. சென்னையில் மட்டும் நிறுவனத்தின்கீழ் ஏற்கனவே 60க்கும் மேற்பட்ட ஏத்தர் சார்ஜிங் க்ரிட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் 185க்கும் அதிகமான சார்ஜிங் மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவற்றின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஏத்தர் களமிறங்கி இருக்கின்றது. ஏத்தர் இந்த சார்ஜ் மையங்களில் வாயிலாக மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும்போது அதிக வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. நேரத்தை மிச்சப்படுத்த இது உதவும். எனவேதான் பலர் வீட்டு சார்ஜரை காட்டிலும் இதுபோன்ற மையங்களில் சார்ஜ் செய்ய விரும்புகின்றனர்.


Click it and Unblock the Notifications









