நீங்க கொடுத்த புக்கிங்கை நீங்களே கேன்சல் பண்ணுங்க.. மாச கணக்கா காத்திருந்தவங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்!
நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளானைப் போல, இந்தியாவில் அதிகரித்து வரும் மின் வாகனத்திற்கான தேவையை உணர்ந்து இந்தியாவில் தொடங்கப்பட்ட ஓர் ஸ்டார்ட் அப் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமே சிம்பிள் எனெர்ஜி (Simple Energy). கர்நாடகா மாநிலம், பெங்களூருவை மையமாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகின்றது.
சிம்பிள் ஒன் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த வாகனத்தின் சிறப்புகளைக் கண்டு மெய் மறந்துப் போன இந்தியர்கள் பலர், குறிப்பாக, மின்சார இருசக்கர வாகன பிரியர்கள் பலர் இந்த வாகனத்தை கையில் பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.

இதன் அடிப்படையில், ப்ரீ புக்கிங் பணிகள் தொடங்கிய உடன் மழை பொழிவதுபோல புக்கிங் மழையை அவர்கள் பொழியச் செய்தனர். ஆனால், நிறுவனமோ இப்போது வரை பலருக்கு டெலிவரி வழங்காமல் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது. தற்போது வரை சொற்ப அளவிலான யூனிட்டுகள் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டுமே அது இந்தியாவில் டெலிவரிக் கொடுத்திருக்கின்றன.
ஆகையால், நிறுவனத்தின் இந்த செயல் பெயருக்காக தொடங்கப்பட்டதைப் போல் தெரிகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சிம்பிள் எனெர்ஜி நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களைத் தொடர்புக் கொண்டு, அதாவது, ப்ரீ புக்கிங் செய்தவர்களைத் தொடர்புக் கொண்டு, அவர்களின் புக்கிங்கை கேன்சல் செய்யச் சொல்வதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிராண்டை நம்பி முன் பணத்தைச் செலுத்திவிட்டு இந்தியர்கள் பலர் பல மாதங்களாக காத்துக் கொண்டிருக்கின்ற சூழலில், அந்த பிராண்டோ ப்ரீ புக்கிங்கை கேன்சல் செய்ய சொல்லிக் கொண்டிருப்பதாக அதன் வாடிக்கையாளர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புக் கொண்டு விசாரித்துள்ளார்.
அப்போது நிறுவனத்திடம் இருந்த கிடைத்த பதில் இதோ, "நிறுவனத்தின் பெயரில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதில் இருந்து வாடிக்கையாளர்களைக் காக்கும் பொருட்டே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மோசடி அரங்கேற வாய்ப்பு இருக்கும் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களைத் தொடர்புக் கொண்டு ப்ரீ புக்கிங்கைக் கேன்சல் செய்ய அறிவுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது".
மேலும், நிறுவனத்தின் நற்பெயருக்கு கலங்கம் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும் சிம்பிள் எனெர்ஜி அதிக அக்கறையுடன் இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றது. இதுகுறித்து ஆட்டோகார் எழுப்பிய கேள்விக்கும் இதே மாதிரியான பதிலே கிடைத்திருக்கின்றது. கூடுதலாக, வாடிக்கையாளர் விருப்பப்பட்டால் மட்டுமே புக்கிங்கை கேன்சல் செய்துக் கொடுப்பதாகவும் அல்லது புக்கிங்கை தக்க வைத்துக் கொள்வதாகவும் அது தெரிவித்து இருக்கின்றது.
மறுபக்கம் நிறுவனம் இதுவரை ஒட்டுமொத்தமாகவே 40 யூனிட்டுகள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டுமே டெலிவரி கொடுத்திருக்கின்றது. சென்ற ஜூன் மாதத்தில் 10 யூனிட்டுகளும், ஜூலை மாதத்தில் 14 யூனிட்டுகளும் மற்றும் ஆகஸ்டு மாதத்தில் 13 யூனிட்டுகளும் டெலிவரிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. செப்டம்பர் மாதத்தில் அது ஒரு யூனிட்டைக் கூட டெலிவரிக் கொடுக்கவில்லை.
இந்த மாதத்திற்கு பின்னர் இப்போது வரை அது ஒற்றை யூனிட்டைக் கூட கொடுக்கவில்லை என்பதே உண்மை ஆகும். இந்த நிலையிலேயே மோசடியில் வாடிக்கையாளர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ப்ரீ புக்கிங்கை கேன்சல் செய்ய சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவுறுத்தப்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
இது பல மாதங்களாக ப்ரீ புக்கிங் செய்துவிட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இப்போது கைகளுக்கு வந்துவிடும், நாளைக்கு கைகளுக்கு வந்துவிடும் என காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 1.45 லட்சம் - ரூ. 1.50 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விலையிலேயே அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதாக சிம்பிள் ஒன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஓர் முழு சார்ஜில் 212 கிமீ ரேஞ்ஜையும், மணிக்கு 105 கி.மீ வேகத்திலும் செல்லும் திறன் கொண்டது. இத்தகைய திறன்களின் மோகத்தில் கவர்ந்தே இந்தியர்கள் பலர் சிம்பிள் ஒன்-க்கு பேராதரவு வழங்கினர். ஆனால், இப்போது வரை பலருக்கு அந்த ஸ்கூட்டர் கிடைக்காத சூழலே நிலவுகின்றது.


Click it and Unblock the Notifications








