பைக் விலை எல்லாம் தாருமாறா குறைய போகுது! ஜிஎஸ்டி வரியில் இந்த மாற்றத்தைச் செய்யக் கோரிக்கை!
டூவீலர்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்க ஆட்டோமொபைல் டீலர் அசோசியேஷன் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து நிதியமைச்சர், ஜிஎஸ்டிகவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சரக்கு மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரிமுறையில் வரிகள் விதிக்கப்படுகிறது. இந்த வரிகளைக் குறிப்பிட்ட தொழிலைச் செய்யும் நபர்கள் அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டும். இப்படியாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கும் வரி விதிக்கப்படுகிறது.

தற்போது ஜிஎஸ்டி விதிமுறையின் படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பைக்குகளுக்கு 350 சிசிக்கு குறைவான திறன் கொண்ட வாகனங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், அதற்கு அதிக திறன் கொண்ட பைக்குகளுக்கு 28 சதவீதத்துடன் 3 சதவீத செஸ் வரியும் சேர்த்து ஜிஎஸ்டி வரியாக விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆட்டோமொபைல் டீசலர் சங்கத்தினர் அரசிடம் இந்த ஜிஎஸ்டி வரியைக் குறைக்கச் சொல்லிக் கேட்டுள்ளனர். அவர்கள் அளித்த அறிக்கையின்படி இந்தியாவில் டூவீலர்கள் சொகுசான வாகனம் கிடையாது. இது மக்களின் அன்றாட தேவைக்காக வாங்கி வருகின்றனர். இதை ஆடம்பர பொருளாகக் கருதக்கூடாது. எனக் கூறியுள்ளனர். தற்போது டூவீலர்களுக்கு உள்ள 28 சதவீத வரியை 18 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டால் இந்தியாவில் டூவீலர்களின் விலை குறையும். இதனால் டூவீலர்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 28 சதவீதமாக இருக்கும் ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாகக் குறைந்தால் விலையில் 10 சதவீதம் குறைந்தால் அது மிகப்பெரிய விலை குறைப்பாக இருக்கும் என்பதால் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தினர் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.
இந்தியாவில் வளர்ந்து வரும் பணவீக்கம், எமிஷன் கட்டுப்பாடுகள், கோவிட் பிரச்சனை காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாக டூவீலர் விற்பனை மந்தமாக இருந்துள்ளது. இதை அதிகரிக்க வேண்டிய நிலையில் மார்கெட் இருப்பதால் இந்த ஜிஎஸ்டி வரிக்குறைப்பு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கின்றனர்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக டூவீலர்களின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. உதிரிப்பாகங்களின் விலையேற்றம், எமிஷன் கட்டுப்பாடுகள், அதிக வரி உள்ளிட்ட காரணங்களில் விலை மிக வேகமாக அதிகமாகியுள்ளது. உதாரணமாக 2016ம் ஆண்டு ரூ52 ஆயிரத்திற்கு விற்பனையான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தற்போது ரூ88 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அதே 2016ல் ரூ72ஆயிரத்திற்கு விற்பனையான பஜாஜ் பல்சர் பைக் தற்போது ரூ1.5 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
இப்படியாகக் கிட்டத்தட்ட 100 சதவீத விலை உயர்வு கடந்த 7 ஆண்டுகளில் பல பைக்குகளில் நடந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு முக்கியமான காரணம் மூலப்பொருட்களின் விலையேற்றம் எனச் சொல்லப்படுகிறது. இதனால் பலர் புதிய டூவீலர்கள் வாங்கும் எண்ணத்தைக் கைவிடுகின்றனர். செகண்ட் ஹேண்ட் மார்கெட்டை நோக்கி நகர்கின்றனர். ஜிஎஸ்டி விலையைக் குறைத்தால் மட்டுமே இந்தியாவில் டூவீலர் விற்பனையை அதிகரிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கையை ஆட்டோமொபைல் டீலர் சங்கத்தினர் கடிதம் மூலமாக மத்திய நிதியமைச்சர், ஜிஎஸ்டி கவுன்சில் சேர்மன், ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள், மத்திய ஹெவி இன்டஸ்ட்ரி அமைச்சகம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டூவீலர்கள் மக்களுக்கு ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. மனிதர்கள் இடம் விட்டு இடம் நகர்ந்தால் தான் பொருளாதார வளர்ச்சி என்பதே ஏற்படும் என்பதால் இதற்கு டூவீலர்கள் மிகவும் அவசியம். இதைக் கருத்தில் கொண்டு குறைந்த சிசி கொண்ட டூவீலர்களின் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும்.


Click it and Unblock the Notifications









