மத்திய அரசு மானியம் கொடுக்கவில்லை என்றாலும் பிரச்சனையில்லை... ஓலா எலக்ட்ரிக் எல்லாத்துக்கும் தயார்!!
மத்திய அரசின் ஃபேம் 2 மானியம் குறைக்கப்படுவது இந்திய எலக்ட்ரிக் வாகன துறையின் வளர்ச்சியை எந்த விதத்திலும் பாதிக்காது என ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். யார் அவர்? இதுகுறித்து மேலும் என்ன தெரிவித்தார்? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலம் என்பது உறுதியாகி விட்டது. இருப்பினும் அந்த நிலையை விரைவாக எட்டும் முயற்சியாக சில வருடங்களுக்கு முன்னர் மத்திய அரசு ஃபேம்-2 என்கிற மானிய திட்டத்தை கொண்டுவந்தது. இந்த திட்டத்தின்படி, நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தொகை மானிய வழங்கப்பட்டது.

எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதையும், அவற்றின் விற்பனையையும் அதிகரிக்க இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசு மட்டுமின்றி, அந்தந்த மாநில அரசாங்கங்களும் வெவ்வேறு விதமான சதவீதங்களில் மானியங்களை வழங்கி வருகின்றன. இதன் விளைவாக, எலக்ட்ரிக் வாகனங்களின் விலைகள் கணிசமாக குறைந்தன. குறிப்பாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை வேகமாக அதிகரிக்க துவங்கியது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர், ஃபேம்-2 திட்டத்தில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்டுவரும் மானிய தொகை குறைத்து கொள்ளப்படுவதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வருகிற ஜூன் மாதம் முதல் எலக்ட்ரிக் 2-வீலர்களின் விலைகள் அதிகமாக உள்ளன. இதனை எவ்வாறு சமாளிப்பது என எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்கள் யோசித்து கொண்டும், மக்களை எச்சரித்து கொண்டும் வருகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மத்திய அரசின் மானியம் குறைப்பு இந்திய எலக்ட்ரிக் வாகன துறையின் வளர்ச்சியை எந்த விதத்திலும் பாதிக்காது என ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி ஜிஆர் அருண் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், "இந்திய எலக்ட்ரிக் வாகன துறையை வளர்ச்சி அடைய செய்தது ஃபேம் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மானியம் குறைக்கப்படுவது நாட்டின் எலக்ட்ரிக் வாகன துறையின் வளர்ச்சியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
ஃபேம் திட்டம் ஏற்கனவே தனது பணியை சிறப்பாக செய்து முடித்துவிட்டது என்பது எனது கருத்து. ஆதலால், இதன் பின்பும் மானியம் வழங்கப்படுமா? நிறுத்தப்படுமா? அல்லது மானியம் குறைக்கப்படுமா? என்பது முக்கியம் அல்ல" என்றார். இருப்பினும் மானியம் குறைக்கப்படுவதால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் அடுத்த ஜூன் மாதத்தில் இருந்து எந்த அளவிற்கு உயரவுள்ளன என்ற விபரங்கள் ஓலா எலக்ட்ரிக் சார்பில் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆனால் ஜூன் மாதத்தில் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகளை ஓலா உயர்த்தும் என்பது மட்டும் உறுதி. ஓலா மட்டுமின்றி, ஏத்தர் எனர்ஜியும் வருகிற ஜூன் முதல் தனது 450 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை உயர்த்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இறுதி வரையில் மத்திய அரசின் உதவியுடன் வணிகம் செய்ய முடியாது என்பது எல்லா எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும் நன்றாகவே தெரியும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை பெரியதாக குறைந்துவிட கூடாது என்கிற பயத்தில் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கின்றன என்கிற பிம்பத்தை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் முன்னிறுத்த முயல்கிறது. ஓலா முதன்மை நிதி அதிகாரியின் இந்த சமீபத்திய பேட்டியின் மூலமாக அதனை தெளிவாக காண முடிகிறது. இதனால் பெட்ரோல் 2-வீலர்களின் பயன்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதா? மக்களின் முடிவே இறுதியானது.


Click it and Unblock the Notifications









