அரசுக்கு பறந்த பரிந்துரை.. இது மட்டும் நடந்துச்சு எலெக்ட்ரிக் டூ-வீலர் பிசினஸ் படுப்பது உறுதி..
இந்திய அரசாங்கம் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஃபேம் 2 (FAME 2) திட்டத்தின்கீழே மானியம் (Subsidy) வழங்கப்பட்டு வருகின்றது. இதன் விளைவாகவே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிக மிகக் குறைவானதாக மாறியிருக்கின்றது.
மேலும், பட்ஜெட் வாகன பிரியர்களாலும் இ-வாகனங்களை வாங்கிக் கொள்ள முடிகின்றது. ஆனால், விரைவில் இந்த திட்டம் முடிவடைய இருக்கின்றது. இந்த நிலையில், இத்திட்டம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தப்படுமா அல்லது இத்தோடு நிறுத்திக் கொள்ளப்படுமா என்கிற சந்தேகமே அனைவரின் மனத்திலும் எழும்பி இருக்கின்றது.

தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் ஒரு சில தகவல்கள் அரசு விரைவில் மின்சார வாகனங்களுக்கான மானியத்தை ரத்து செய்ய இருப்பதாக தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த மாதிரியான சூழ்நிலையில் மானியம் வழங்கும் திட்டத்தில் அரசு மாற்றம் கொண்டு வர இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஃபேம் 2 திட்டத்தை பார்வையிட்டு வரும் குழு, தற்போது வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையை குறைப்பதற்கு முன்மொழிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசு இதனை ஏற்கும்பட்சத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் மானியத் தொகை பெரும் அளவில் குறைந்துவிடும். இதன் விளைவாக மின்சார இருசக்கர வாகனங்களின் விலை மிக கடுமையாக உயர நேரிடும்.

மின்சார இருசக்கர வாகனங்களுக்கு அதன் பேட்டரி கெபாசிட்டியைப் பொருத்து மானியத் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு கிலோவாட்டிற்கு ரூ. 15 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை 10 ஆயிரம் ரூபாயாக குறைக்கவே கனரக தொழில்துறை அமைச்சகம் முயல்வதாகக் கூறப்படுகின்றது.
இதனை அரசு நடைமுறைப்படுத்தும் எனில் மின்சார இருசக்கர வாகனங்களின் விலை கடுமையாக உயரக் கூடும். இந்த நிலை ஏழை மற்றும் எளிய மக்களால் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படலாம் என அஞ்சப்படுகின்றது. மேலும், இந்த தகவல் இந்திய மின்சார இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஃபேம் 2 திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தொடங்கப்பட்டது. இதற்காக ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. ஃபேம் 2 திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே என்று அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் இந்த நீடிக்கும் என சென்ற நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது.

ஆகையால், தற்போதைய திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை பயன்பாட்டில் இருக்கும். இந்த நிலையிலேயே மானியத்தைக் குறைக்கும் முயற்சியில் அரசு களமிறங்கி இருக்கின்றது. ஆனால், இதற்கான முடிவுகள் இன்னும் எட்டப்படாத நிலையே உள்ளது. விரைவில் இந்த விஷயத்தில் அமைச்சகம் ஓர் நிலையான முடிவை எடுக்கும் என நம்பப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏழை மற்றும் எளிய மக்கள் என அனைத்து தரப்பினரும் மின்சார இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஃபேம் 2 திட்டத்தின் பங்கு அளப்பறியாதது. இந்த மாதிரியான சூழலிலேயே அரசு அதிரடியாக மானிய தொகையைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது தெரிய வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









