ஓலாவுக்கு ஆட்டோ ஏதாச்சும் பிடிங்கப்பா.. அத வீட்டுக்கு அனுப்பி வைக்க ஏ2பி வருது!
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி மின்சார இருசக்கர (Electric TwoWheeler) வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனம் ஏ2பி (A2B) எனும் பெயரில் புதிய பிராண்டை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏ2பி என்ற உடன் அடையார் ஆனந்த பவன் சுவீட் கடை என நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த பிராண்டின்கீழும் அந்நிறுவனம் மின்சார இருசக்கர வாகனங்களையே விற்பனைச் செய்ய இருக்கின்றது. ஏற்கனவே இந்த நிறுவனம் ஹீரோ எலெக்ட்ரிக் எனும் பெயரில் மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த பெயரே நல்லாதானே இருக்கு, இந்த நிலையில் ஏன் புதிய பிராண்ட்? என்கிற கேள்வியும், இந்த புதிய பிராண்டின் அறிமுகத்திற்கான அவசியம் என்ன என்கிற சந்தேகமும் உங்களுக்கு எழும்பி இருக்கக் கூடும். இதுமாதிரியான கேள்விள் மற்றும் சந்தேகங்களுக்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, புதிய பிராண்டின்கீழ் நிறுவனம் என்ன மாதிரியான பணிகளை செய்ய இருக்கின்றது என்பதையே பார்க்க உள்ளோம். விரிவான பதிவிற்குள் போகலாம், வாங்க.
இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன பிரிவை பொருத்தவரை மிகக் கடுமையான போட்டி நிலவுகின்றது. குறிப்பாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தக் கூடிய நிறுவனங்களாக ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) மற்றும் ஏத்தர் (Ather Energy) நிறுவனங்கள் மாறி இருக்கின்றன.

கடந்த காலங்களில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் முன்னணி இடத்தில் இருந்த ஹீரோ எலெக்ட்ரிக் தற்போது இந்த நிறுவனங்களின் வருகையால் பின்னடைவைச் சந்தித்து இருக்கின்றது. இவற்றினால் ஏற்பட்ட பெருத்த அடியில் இருந்து மீளும் நோக்கிலேயே ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் ஏ2பி எனும் புதிய பிராண்டை கையில் எடுத்திருக்கின்றது.
இந்த பிராண்டின்கீழ் அந்நிறுவனம் பிரீமியம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை மட்டுமே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, பிக் விங் எனும் தனி ஷோரூம் வாயிலாக அதன் பிரீமியம் தர தயாரிப்புகளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பதைப் போல ஹீரோ எலெக்ட்ரிக் பிரீமியம் தர இருசக்கர வாகனங்களுக்கு என தனி பிராண்டையே உருவாக்கி இருக்கின்றது.

இந்த புதிய பிராண்டின் வருகைகுறித்து ஹீரோ அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு இருக்கின்றது. அந்த அறிக்கையில், பிராண்டின்கீழ் எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை அதிக பிரீமியம் வசதிகளுடன் விற்பனைக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. அது தவிர இந்த வாகனங்கள் இந்தியாவின் கரடு-முரடான சாலைகள் மற்றும் சீதோஷ்ணநிலைக்கு ஏற்றதாகவும் இருக்கும் என தெரிவித்து இருக்கின்றது.
ஆகையால், மழை மற்றும் கடும் வெயிலில் பாதிக்காத திறன் கொண்ட மின்சார இருசக்கர வாகனங்களை அது விற்பனைக்கு வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க, அதிக வேகத்தில் சார்ஜாகும் திறன், சூப்பரான ரேஞ்ஜ் தரும் பேட்டரி பேக் மற்றும் நொடிப் பொழுதிலேயே சீறி பாயும் திறன் கொண்ட பேட்டரி பேக் என ஏகப்பட்ட அம்சங்களைக் கொண்ட எலெக்ட்ரிக் டூ-வீலரையே புதிய பிராண்டின்கீழ் ஹீரோ எலெக்ட்ரிக் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
இதனை ஹீரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரியான சோஹிந்தர் கில்-ம் உறுதி செய்திருக்கின்றார். மேலும், இந்த புதிய பிராண்டிற்காக மிகப் பெரிய தொகையை ஹீரோ எலெக்ட்ரிக் முதலீடு செய்ய இருக்கின்றது. ஆனால், இந்த புதிய பிராண்டின்கீழ் எப்போது மின்சார வாகனங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்கிற காலக்கெடு விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இதேபோல், தனி ஷோரூம் அமைக்கப்படுமா அல்லது இப்போது செயல்பாட்டில் உள்ள ஹீரோ எலெக்ட்ரிக் ஷோரூம்களிலேயே தனி பிரிவு அமைக்கப்பட்டு அங்கு அது விற்பனைக்கு வழங்கப்படுமா என்பதும் தெரியவில்லை. தற்போது நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 850க்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் சேவை மையங்கள் தற்போது செயல்பாட்டில் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாடு முழுவதும் உள்ள தன்னுடைய மிகப் பெரிய நெட்வொர்க்கை பயன்படுத்தி புதிய பிராண்டின் தயாரிப்புகளை ஹீரோ எலெக்ட்ரிக் விற்பனைக்குக் கொண்டு வரும் எனில் அதற்கு தனி விளம்பரமே தேவைப்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது. வாடிக்கையாளர்கள் தானாக தேடி வர அதுவே போதுமானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









