"அரசு மானியத்தை குறைத்தாலும் நாங்க விலையை ஏத்த மாட்டோம்".. ஹீரோ எலெக்ட்ரிக் அதிரடி முடிவு!
அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அரசு கையில் எடுத்திருக்கும் ஓர் எந்திரமே மின்சார வாகனம் (Electric Vehicles). இவையே ஒட்டுமொத்த உலகின் எதிர்காலமாகவும் பார்க்கப்படுகின்றது. ஆகையால், இவற்றை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் பலகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
அந்தவகையில், அது எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக அறிமுகம் செய்த ஓர் சூப்பரான திட்டமே ஃபேம்2 (FAME II). இந்த திட்டத்தின்கீழே அரசு மின் வாகன உற்பத்தியையும் நாட்டில் ஊக்குவித்து வருகின்றது. மிக முக்கியமாக மின்சார வாகனங்களுக்கு மானிய (Subsidy)-த்தை இந்த திட்டம் வாயிலாக மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த மானியத்தையே குறைத்துக் கொள்ளப்போவதாக அரசாங்கம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. வரும் ஜூன் மாதத்தில் இருந்து அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த தகவல் யாருக்கு அதிர்ச்சியானதாக அமைந்திருக்கின்றதோ, இல்லையோ, முக்கியமாக மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்களுக்கு பேரிடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
இந்திய அரசின் மானியம் திட்டம் கிடைக்கின்ற காரணத்தினாலேயே பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே மானியத் தொகையை அரசு கணிசமாக குறைக்க இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால், கணிசமான அளவு எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை உயர இருக்கின்றது.

இதன் காரணத்தினாலேயே எலெக்ட்ரிக் வாகன பிரியர்களும், மின்வாகன உற்பத்தியாளர்களும் தற்போது கலக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டிருக்கும் அதேவேளையில் ஒரு சில நிறுவனங்கள் இந்த விலை உயர்வு நடவடிக்கையினால் இந்தியாவில் மின் வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வளர்ச்சி எந்த வகையிலும் பாதிப்படையாது என தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.
மேலும், நாட்டின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) இருக்கும் இதுகுறித்து கருத்தை வெளியிட்டு இருக்கின்றது. அரசு மானியம் தொகையை குறைத்துக் கொண்டாலும் நாங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையை உயர்த்தப் போவதில்லை என கூறி இருக்கின்றது.

இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின்கீழ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பரந்த விரிந்த அளவில் இதன் மின்சார இருசக்கர வாகன மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஒட்டுமொத்தமாக 10 விதமான எலெக்ட்ரிக் டூ-வீலர்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் ஓர் இ-சைக்கிளும் அடங்கும்.
நிறுவனத்தின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக ஆப்டிமா இருக்கின்றது. இந்த மாடல் மட்டுமே நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 59,640 எனும் ஆரம்ப விலையில் இருந்து அதிகபட்சமாக ரூ. 1,29,890 என்கிற விலை வரையில் இந்த நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் விற்கப்படுகின்றன.

இந்த விலையிலேயே மானிய தொகை குறைப்பு காரணமாக மாற்றம் செய்யப்படும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் விலையை நாங்கள் உயர்த்தப்போவது இல்லை என மகிழ்ச்சி அளிக்கும் தகவலை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை நிறுவனத்தின் சிஇஓ (CEO)-ஆன சோஹிந்தர் கில்-ம் உறுதிப்படுத்தி இருக்கின்றார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, " மானியங்களை திடீரென அரசு குறைத்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு நல்லது அல்ல. எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையின் வீழ்ச்சிக்கு இது வழிவகுக்கும். கடந்த காலங்களைக் காட்டிலும் மின்சார இருசக்கர வாகன பிசினஸ் வரும்காலங்களில் அதிகரிப்பதற்கான சூழலே தென்படுகின்றது. இந்த சூழலை தக்க வைத்துக் கொள்ள முடியாததற்கான சூழலையே அரசு உருவாக்கி இருக்கின்றது.

நிதி ஆயோக்கின் 2.3 மில்லியன் விற்பனை இலக்கை எட்டுவதும் தற்போது சிக்கலாக மாறி இருக்கின்றது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுக்கு கிடைக்க வேண்டிய மானிய தொகை கனரக தொழில்துறை அமைச்சகத்திடம் சிக்கி இருக்கின்றது. இதனால் கடும் நிதி நெருக்கடி எங்களுக்கு ஏற்பட்டது. இருப்பினும், எங்களால் இயன்ற வரை தற்போதைய விலைகளின்கீழே எங்களின் மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றோம்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஓர் kWh பேட்டரிக்கு ரூ. 15 ஆயிரம் மானியம் வழங்கிக் கொண்டிருந்த நிலையில், அதை ஒரு kWh பேட்டரிக்கு ரூ. 10 ஆயிரமாக அரசு குறைக்கின்றது. இதனால் ரூ. 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை மின்சார டூ-வீலர்களின் விலை உயர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









