மாற்று திறனாளி பணியாளருக்கு 30 லட்ச ரூபா மதிப்புள்ள ஹார்லி டேவிட்சன் பைக்கை பரிசளித்த ஹீரோ.. ரொம்ப நல்ல மனசு!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹார்லி டேவிட்சன், இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் உடன் இணைந்து இந்தியாவில் இயங்கத் தொடங்கி இருக்கின்றது. ஹீரோவின் இருசக்கர வாகன உற்பத்தி ஆலையில் வைத்தே ஹார்லி டேவிட்சன் பைக்குகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த பிராண்டின் பிசினஸ் யூனிட்டின் துணை மேலாளராக சித்ரா ஜுட்ஷி எனும் இளம் பெண் பணியாற்றி வருகின்றார். பிறவியிலேயே இவர் கால் முடக்கம் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவருக்கே, நான்கு சக்கரங்கள் கொண்ட வாகனமாக ஹார்லி டேவிட்சன் ரோட் கிங் பைக் மாற்றப்பட்டிருக்கின்றது.

அவருக்கு பரிசாக வழங்கவே இந்த மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. பைக்கிற்கான சாவியை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் சேர்மேனான பவன் முன்ஜலே, அப்பெண்ணிற்கு வழங்கி இருக்கின்றார். நான்கு சக்கரங்களுடன் சேர்த்து, கால்களால் கட்டுப்படுத்த வேண்டிய கருவிகள் அனைத்தும் கைகளால் கட்டுப்படுத்தும் வகையில் மாற்றப்பட்டு இருக்கின்றன.
இந்த மாற்றத்தை ராஜ்புதனா எனும் மாடிஃபிகேஷன் நிறுவனத்தின் வாயிலாகவே ஹீரோ மோட்டோகார்ப் செய்திருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட சித்ரா, அங்கிருந்த பைக்குகளை ஓட்டி பார்க்க பிரியப்பட்டிருக்கின்றார். ஆனால், அவரது இயலாமை அதற்கு ஒத்துழைக்கவில்லை.

ஆகையால், வெறும் பில்லியன் ரைடராக மட்டுமே அமர்ந்து அந்த பயணத்தை மேற்கொண்டார். இந்த சம்பவம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கவனத்திற்கு சென்றிருக்கின்றது. இந்த நிலையிலேயே அவருக்கான நான்கு சக்கரங்களைக் கொண்ட, மாற்றுத் திறனாளிகள் இயக்க ஏற்ற மோட்டார் சைக்கிள் தயார் செய்யப்பட்டது.
இதுவே தற்போது துணை மேலாளர் சித்ரா ஜுட்ஷி-யிடம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதை பவன் முஞ்ஜல் பரிசளிக்கும் வீடியோவே தற்போது வெளியாகி இருக்கின்றது. இதனை ஹார்லி டேவிட்சன் அதன் யுட்யூப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. சித்ரா அந்த பைக்கை ஓட்டி பார்க்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன.

இதுவே அவர் மோட்டார்சைக்கிளை ஓட்டுவது முதல் முறையாகும். நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறி இருப்பதாக அவர் தெரிவித்தார். சித்ரா மோட்டார்சைக்கிளை இயக்குவது இதுவே முதல் முறை என்பதால், மேற்பார்வையாளர்களின் முன்னிலையில் அவர் அந்த பைக்கை ஓட்டி பார்த்தார். மேலும், அவருக்கு பைக்கைக் கட்டுப்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
குறிப்பாக, கைகளால் கட்டுப்படுத்தும் கருவிகள்குறித்த பயிற்சிகளும், எதிர்பாரா சூழல்களைக் எவ்வாறு கையாள்வது என்கிற யுக்திகள் சிலவற்றை பற்றியும் அவருக்கு வழங்கப்பட்டது. சித்ராவிற்கு இருந்த அதீத ஆர்வம் அவரை விரைவிலேயே மோட்டார்சைக்கிளை ஓட்ட தயார் செய்துவிட்டது. கூடுதலாக வீல் சேர்த்தல் மற்றும் பைக்கின் கன்ட்ரோல்கள் இடம் மாற்றம் செய்தல் ஆகியவை மட்டுமே இந்த ஹார்லி டேவிட்சன் ரோட் கிங் பைக்கில் செய்யப்பட்டு இருக்கின்றது.

இதைத்தவிர வேறு எந்த மாற்றத்தையும் அந்த பைக்கில் ராஜ்புதனா செய்யவில்லை. ஆகையால், எஞ்ஜின் திறன் வெளிப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. ஹார்லி டேவிட்சன் ரோட் கிங் பைக்கில் 1,745 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 84 பிஎஸ் பவரையும், 147 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கின் விலை ரூ. 28.49 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய மிக மிக விலை உயர்ந்த பைக்கையே தன்னுடைய பணியாளருக்காக ஹீரோ மோட்டோகார்ப் மாடிஃபை செய்து வழங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
ஹீரோ நிறுவனம் தன்னுடைய உயர் பதவியில் இருக்கும் பணியாளருக்கு இத்தகைய விலை உயர்ந்த பரிசை வழங்கி இருப்பது மிகப் பெரிய ஆச்சரியமாக அமைந்திருக்கின்றது. இன்னும் ஒரு சில நாட்களில் ஹீரோ தயாரித்த ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. இதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக நிறுவனம் மேற்கொண்டிருக்கும் ஓர் முயற்சியாக இது பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









