சம்பவம் லோடிங்! 2 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களத்தில் இறக்குகிறது ஹோண்டா!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் நிலையில், ஹோண்டா (Honda) நிறுவனம் இன்னும் ஒரு எலெக்ட்ரிக் டூவீலரை கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆனால் வெகு விரைவில் இந்தியாவின் எலெக்ட்ரிக் டூவீலர் சந்தையில் ஹோண்டா நிறுவனம் கம்பீரமாக கால் தடம் பதிக்கவுள்ளது.
இந்திய எலெக்ட்ரிக் டூவீலர் சந்தைக்கான தனது முதற்கட்ட திட்டங்களை ஹோண்டா நிறுவனம் இன்று (மார்ச் 29) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன்படி இந்திய சந்தையில் 2 புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) ஹோண்டா நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

ஏற்கனவே வெளியான தகவல்களின்படி, ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கழற்றி மாற்ற முடியாத வகையிலான பேட்டரியை கொண்டதாக இருக்கும். அனேகமாக இது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கலாம். ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் (Honda Activa Electric) என்ற பெயரில் இது விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் ஹோண்டா நிறுவனத்தின் 2வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கழற்றி மாற்ற கொள்ள கூடிய வகையிலான பேட்டரியை பெற்றிருக்கும். எனவே சார்ஜ் தீர்ந்து போன பேட்டரிக்கு பதிலாக ஏற்கனவே சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை பொருத்தி கொண்டு, வாடிக்கையாளர்கள் பயணத்தை தொடர முடியும்.

இந்த வசதி காரணமாக, பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் காத்து கொண்டிருக்க வேண்டிய தலைவலி வாடிக்கையாளர்களுக்கு இருக்காது. இதற்காக இந்தியா முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில், பேட்டரிகளை மாற்றி கொள்ளும் மையங்களை அமைக்கும் பணியில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம் நர்சபுரா பகுதியில் உள்ள தொழிற்சாலை 'இ' (Factory 'E') ஆலையில் ஹோண்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் டூவீலர்கள் அனைத்தும் உற்பத்தி செய்யப்படவுள்ளது. வரும் 2030ம் ஆண்டில், 1 மில்லியன் (10 லட்சம்) எலெக்ட்ரிக் டூவீலர்களை உற்பத்தி செய்யக்கூடிய திறனை இந்த ஆலை பெற்றிருக்கும்.
எலெக்ட்ரிக் டூவீலர்களை சர்வீஸ் செய்வதற்கு வசதியாக தனது ஒரு சில சர்வீஸ் சென்டர்களை, ஒர்க்ஸாப் 'இ'-ஆக (Workshop 'E') ஹோண்டா நிறுவனம் மாற்றவுள்ளது. இந்த பிரத்யேகமான சர்வீஸ் சென்டர்களில், ஹோண்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் டூவீலர்கள் மட்டும் பழுது பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி, 2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடையும் நிதியாண்டிற்குள் இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் இவற்றின் அறிமுகத்தை நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து கொண்டு வரும் நிலையில், கால மாற்றத்திற்கு ஏற்ப, ஹோண்டா நிறுவனம் மிகவும் சரியான ஒரு முடிவை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. பெட்ரோல் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பிரச்னைகளால் தரமான எலெக்ட்ரிக் வாகனங்களை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் வரப்பிரசாதமாக அமையலாம்.
Note: Images used are for representational purpose only


Click it and Unblock the Notifications








