மகளிர் தினத்திற்காக... சலுகைகளை வாரி வாரி இரைத்துள்ள பிரபல எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம்! இவ்வளவு சேமிக்கலாமா?
மகளிர் தினத்தை முன்னிட்டும், ஹோலி பண்டிகையை முன்னிட்டு தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான சலுகைகளை ஓர் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் அறிவித்துள்ளது. அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
வார்ட் விசார்ட் இன்னோவேஷன்ஸ் மற்றும் மொபைலிட்டி நிறுவனத்தை பற்றி சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றான இது எலக்ட்ரிக் வாகனங்களை 'ஜாய் இ-பைக்' என்ற பெயரிலான பிராண்டின் கீழ் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் தேசிய மகளிர் தினம் மற்றும் ஹோலி பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை ஜாய் இ-பைக் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு சலுகையின்படி, மார்ச் 31ஆம் தேதி வரையில் ஜாய் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை ரூ.12,000 வரையிலான பணம் தள்ளுபடி உடன் வாங்க முடியும். அதாவது ஜாய் எலக்ட்ரிக் 2-வீலர்ஸின் விலையில் அதிகப்பட்சமாக ரூ.12,000 வரையில் குறைக்கப்படும். ஜாய் இ-பைக் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுபவையில் க்ளோப், வூல்ஃப், வூல்ஃப்+, வூல்ஃப் ஈக்கோ, ஜென் நெக்ஸ்ட் நானு, ஜென் நெக்ஸ்ட் நானு+ மற்றும் ஜென் நெக்ஸ்ட் நானு ஈக்கோ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் வூல்ஃப்+ மற்றும் ஜென் நெக்ஸ்ட் நானு+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோர்க்கு தான் ரூ.12,000 பணம் தள்ளுபடி ஆகும். அதுவே க்ளோப், வூல்ஃப், ஜென் நெக்ஸ்ட் நானு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோர்க்கு ரூ.7,000மும், வூல்ஃப் ஈக்கோ மற்றும் ஜென் நெக்ஸ்ட் நானு ஈக்கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோர்க்கு ரூ.4,000மும் பணம் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பணம் தள்ளுபடி உடன் வாகனத்தை ஆர்டிஓ-வில் பதிவு செய்வதற்கான கட்டணம் மற்றும் இன்ஸ்சூரன்ஸ் கட்டணங்களும் இலவசமாக செய்து தரப்படும் என வார்ட் விசார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கூறியதுபோல் இந்த சலுகைகள் வருகிற மார்ச் 31ஆம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்கும். இந்த சலுகைகள் இல்லாமல், பெண் வாடிக்கையாளர்களுக்கு என்றே பிரத்யேகமான வேறொரு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அது என்னவென்றால், இந்த மார்ச் 8 (தேசிய மகளிர் தினம்) முதல் மார்ச் 11ஆம் தேதி வரையில் ஜாய் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்கும் பெண் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.2,000 பணம் தள்ளுபடி கிடைக்குமாம். அன்றாட வாழ்வில் ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக விளங்கும் பெண்களை போற்றும் விதமாக இந்த கூடுதல் சிறப்பு சலுகையினை வழங்கியுள்ளதாக வார்ட் விசார்ட் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எரிபொருள் என்ஜின் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் பசுமையான போக்குவரத்துக்கு வழிவகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஜாய் இ-பைக் பிராண்டில் இருந்து கடைசியாக மிஹோஸ் என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி 22ஆம் தேதி இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டன. இந்த புக்கிங்கின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் மிஹோஸை புக் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இதன் விளைவாக, முன்பதிவுகள் துவங்கப்பட்டு அடுத்த 15 நாட்களிலேயே மிஹோஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துவிட்டனர். இந்த புத்தம் புதிய ஜாய்-இ எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. ஜாய்-இ மிஹோஸ் ஆனது ரெட்ரோ ஸ்டைலிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதன் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1.35 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் டெலிவிரிகள் இந்த மார்ச் மாதத்தில் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








