5ஆண்டுகளுக்கு விற்பனைக்கு பிந்தைய இலவச சர்வீஸை வழங்கும் கிக்-இவி.. இந்த ஒன்னுத்துக்கே இ-ஸ்கூட்டரை வாங்கலாம்!
தன்னுடைய மின்சார இருசக்கர வாகனங்கள் மீது இருக்கும் அதீத நம்பிக்கை காரணமாகவும், தன்னுடைய நம்பிக்கையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாகவும் விரைவில் அறிமுகமாக உள்ள புதுமுக மின்சார இருசக்கர வாகனத்திற்கு இந்திய நிறுவனம் ஒன்று 5 ஆண்டுகளுக்கு விற்பனைக்கு பிந்தைய இலவச சர்வீஸை (5 years after-sales service) வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது.
கிக்-இவி எனும் புதுமுக நிறுவனமே இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. இந்த நிறுவனம் வெகு விரைவில் ஸ்மாஷ் (Smassh) எனும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இளைஞர்களைக் கவரக் கூடிய அட்டகாசமான ஸ்டைலில் இதனை கிக்-இவி தயார் செய்திருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் டூ-வீலருக்கே விற்பனைச் செய்யப்பட்ட முதல் நாள் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகள் வரை இலவசமாக சர்வீஸை வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. இருசக்கர வாகனத்தின்மீது இந்திய மின் வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இத்தகைய அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது.
கிக் இவி ஸ்மாஷ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வருகையை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை நிறுவனம் செயல்படுத்தத் தொடங்கி இருக்கின்றது. அதில் ஒன்றே இந்த ஐந்து ஆண்டுகள் இலவச சேவை திட்டம்.

இத்துடன், பூஜ்ஜியம் முன் தொகையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன் பதிவை ஏற்க இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. மின் மோட்டார், கன்ட்ரோல்லர் மற்றும் கன்வெர்டர் என பல முக்கிய பாகங்களுக்கு ஐந்து ஆண்டுகள் இலவச சேவை திட்டத்தின்கீழ் சர்வீஸ் வழங்கப்பட இருக்கின்றன.
இவற்றுடன், சேஸிஸ், டிரைவ்டிரெயின் மற்றும் டயர்கள் ஆகியவையும் அடங்கும். இந்தியர்களின் எதிர்பார்ப்பையும், இந்தியாவின் பன்முக நிலப்பரப்பையும் கருத்தில் கொண்டு இந்த வாகனத்தை வடிவமைத்து இருப்பதாக கிக் இவி தெரிவித்துள்ளது. ஓர் முழு சார்ஜில் ஸ்மாஷ் 160 கிமீ தூரம் வரை பயணிக்கும்.
இந்த அதிகபட்ச ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.5 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை அதிக வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். மைக்ரோ டி ஸ்மார்ட் இன்டெலிஜன்ட் சார்ஜர் எனும் தொழில்நுட்பத்தை இந்த ஸ்கூட்டரில் கிக்-இவி பயன்படுத்தி இருக்கின்றது.
இதுவே வெறும் 3.5 மணி நேரங்கள் எனும் குறைவான இடைவெளியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய உதவுகின்றது. இத்துடன், மணிக்கு 75 கிலோ மீட்டர் பயணிக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட இருக்கின்றது.
சிறப்பு தொழில்நுட்ப வசதிகளாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல், காம்பி பிரேக் சிஸ்டம், டிஸ்க் பிரேக்குகள், ஜிபிஎஸ் கருவி, அலாய் வீல்கள் மற்றும் செல்போன் இணைப்பு என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப டேஸ்டில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியையும் கிக்-இவி வழங்க இருக்கின்றது.
இந்த மாதிரியான வாகனங்களை ஆர்டர் கொடுத்த 45 நாட்களிலேயே டெலிவரி கொடுப்போம் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக ஆறு விதமான நிற தேர்வுகளில் ஸ்மாஷ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். சிட்ரின் மஞ்சள், கார்னெட் சிவப்பு, லோலைட் நீலம், ஒப்சிடியன் கருப்பு, பேடலைட் வெள்ளியம் மற்றும் ஜிர்கோன் வெள்ளை ஆகியவையே அவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இந்தியாவில் நாளுக்கு நாள் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மின்சார இருசக்கர வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கிக்-இவி சிறப்பு திட்டங்களை ஸ்மாஷ்க்காக அறிவித்து இருக்கின்றது. ஆகையால், இதன் வருகை ஓலா எலெக்ட்ரிக் போன்ற முன்னணி நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு தலை வலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








