36 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஸ்கூட்டரா! ஓலா, ஏத்தர்லகூட இவ்ளோ பாதுகாப்பு அம்சங்களை பார்க்க முடியாது!
பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று 36 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் இரண்டு புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இது பற்றிய கூடுதல் விபரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் பாதுகாப்பு வசதிகள் கொண்ட வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு மிகச் சிறந்த சான்றாக டாடாவின் முக்கிய தயாரிப்பான நெக்ஸான் இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். அதுமட்டுமல்ல 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற வாகனமாகவும் நெக்ஸான் இருக்கின்றது.

விபத்தின்போது அதீத பாதுகாப்பு திறனை இந்த கார் வழங்கும் என்பதற்கான சான்றே இதுவாகும். இத்தகைய ரேட்டிங்கைப் பெற்றிருப்பதனாலேயோ என்னமோ இதற்கு வரவேற்பு செம்ம டாப்பில் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியர்களைக் கவர வேண்டும் என்பதற்காக பிரபல மின்வாகன உற்பத்தி நிறுவனமான லெக்ட்ரிக்ஸ் (Lectrix), அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
36 வகையான பாதுகாப்பு அம்சங்களுடன் லெக்ட்ரிக்ஸின் புதிய தயாரிப்புகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. எல்எக்ஸ்எல் ஜி 2.0 (LXS G2.0) மற்றும் எல்எக்ஸ்எஸ் ஜி 3.0 (LXS G3.0) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட வாகனமாக லெக்ட்ரிக்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க, 24 விதமான ஸ்மார்ட் ஃபீச்சர்ஸ் மற்றும் 14 விதமான சொகுசு அம்சம் என அனைவரையும் மிரட்டச் செய்யும் வகையில் பன்முக அம்சங்களுடன் இ-ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இதில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் பல மற்ற இருசக்கர வாகனத்தில் இல்லாத அம்சமாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
2.3 kWh மற்றும் 3 kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் வழங்கப்படுகின்றன. ஆரம்ப நிலை தேர்வானது ஓர் முழு சார்ஜில் 100+ கிமீட்டர் ரேஞ்ஜை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் விலையும் ரூ. 1 லட்சமாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த இ-வாகனம் விற்பனைக்குக் கிடைக்கின்றது. உங்கள் நகரம் அதன் பட்டியலில் இருக்கின்றதா என்பதை அறிய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தை விசிட் செய்யவும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தற்போது புக்கிங் பணிகளும் தொடங்கிவிட்டன. ஆன்லைன் வாயிலாகவும் புக் செய்துக் கொள்ள முடியும்.
ரூ. 499 மட்டும் செலுத்தினாலே போதும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரும் ஆகஸ்டு 16 ஆம் தேதி முதல் டெலிவரிக் கொடுக்க நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. லெக்ட்ரிக்ஸ் நிறுவனம் புதிய இருசக்கர வாகனத்தின் உறுதித் தன்மையை ஆராய்வதற்காக அந்த வாகனத்தை மிகப் பெரிய டார்ச்சருக்கு ஆளாக்கி இருக்கின்றது.
சுமார் 2.6 கிமீட்டர்கள் வரை இயக்கி அந்த வாகனத்தை சோதனைக்கு உட்படுத்தி இருக்கின்றது. முக்கியமாக ஸ்கூட்டரின் சேஸிஸின் உறுதித் தன்மையை ஆராயும் விதமாக இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே இப்போது லெக்ட்ரிக்ஸின் இரு இ-ஸ்கூட்டர்களும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.
இந்த வாகனம் அதிக நிலைத் தன்மைக் கொண்டது மட்டுமல்ல, அதிக நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதும்கூட. குறிப்பாக நேவிகேஷன் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் அம்சம் ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ஓவர் -தி -ஏர் அப்டேட் செய்துக் கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, ஆட்டோ இன்டிகேட்டர்கள், ஹெல்மெட் வார்னிங், வெயிக்கிள் டைக்னாஸ்டிக், ரைடு ஸ்டேடிஸ்டிக்ஸ், செல்போன் வாயிலாக ரிமோட் சீட் ஆபரேட்டிங் வசதி, திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம், வாகனத்தை தேடி கண்டறியும் தொழில்நுட்பம், எஸ்ஓஎஸ் பொத்தான் என ஏகப்பட்ட அம்சங்களை லெக்ட்ரிக்ஸ் இந்த எல்எக்ஸ்எஸ் ஜி2.0 மற்றும் எல்எக்ஸ்எஸ் ஜி3.0 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் வழங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலதரப்பட்ட சிறப்பம்சங்களுடன் மலிவு விலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்திருப்பதால் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தற்போது அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். அதேவேளையில், எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரியர்கள் இதன் வருகையால் மகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








