உலகின் முதல் ஸ்டாண்ட் போடாமலே நிற்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... சீக்கிரமே இந்தியால காட்சிப்படுத்த போறாங்க!
உலகின் முதல் ஸ்டாண்ட் போடாமலே நிற்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மின்சார ஸ்கூட்டரின் பிற முக்கிய அம்சங்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் லைகர் மொபிலிட்டி. இது ஓர் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆகும். மின் வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கும் இந்திய நிறுவனங்களில் இதுவும் ஒன்று ஆகும். இந்த நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்போவி 2023 (2023 Auto Expo) -வில் அதன் பங்களிப்பை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சைடு மற்றும் சென்டர் என ரெண்டு ஸ்டாண்டுமே தேவை இல்ல
பங்களிப்பை முன்னிட்டு நிறுவனம் ஸ்டாண்ட் போடாமலே நிற்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த லைகர் மொபிலிட்டி திட்டமிட்டிருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வழங்கப்பட்டிருக்கும் செல்ஃப் பேலன்ஸிங் தொழில்நுட்பமே சைடு மற்றும் சென்டர் ஸ்டாண்டை தவிர்க்க வைத்திருக்கின்றது. இந்த சூப்பரான அம்சம் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதன் பெயர் மற்றும் பிற முக்கிய அம்சங்கள் பற்றிய விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்த தகவலை நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவிலேயே அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விற்பனைக்கு வர இருக்கும் நாள் பற்றிய முக்கிய தகவலும் அன்றைய தினமே வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமே இந்த லைகர் மொபிலிட்டி ஆகும். இந்த நிறுவனம் செல்ஃப் பேலன்ஸ் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியீடு செய்வது முதல் முறை அல்ல.

2019 லேயே காட்சிப்படுத்திட்டாங்க
இதற்கு முன்னதாகவும் நிறுவனம் செல்ஃப் பேலன்ஸ் மற்றும் தானாகவே பார்க் செய்யும் தொழில்நுட்பம் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாட்டில் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. 2019 ஆம் ஆண்டிலேயே இந்த சம்பவத்தை லைகர் மொபிலிட்டி அரங்கேற்றியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே புதிய செல்ஃப் பேலன்ஸ் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்த லைகர் தயாராகி இருக்கின்றது. இது ஓர் முன் மாதிரி மாடல் ஆகும்.
ரெட்ரோ ஸ்டைல்
இதன் உற்பத்தி பணிகளை லைகர் நிறுவனம் விரைவில் இந்தியாவில் தொடங்க இருக்கின்றது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரெட்ரோ ஸ்டைலிலேயே லைகர் உருவாக்கி இருக்கின்றது. அதேவேளையில், மாடர்ன் தொழில்நுட்ப அம்சங்களையும் மிக தாராளமாக அது வழங்கி இருக்கின்றது. ரெட்ரோ ஸ்டைல் என்ற உடன் வெஸ்பா ஸ்டைலில் இதை உருவாக்கி இருப்பாங்களோ என நினைத்துக் கொள்ள வேண்டும். முற்றிலும் மாறுபட்ட ரெட்ரோ தோற்றத்திலேயே இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை லைகர் உருவாக்கி இருக்கின்றது.

கவர்ச்சியான தோற்றம்
இதற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முகப்பு பகுதியே முக்கிய சான்றாக இருக்கின்றது. முன் பக்கத்தில் முக்கோண வடிவ எல்இடி லைட் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர, மேல்லிய கோடு போன்ற எல்இடி லைட் ஒன்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் பகல் நேரத்தில் ஒளிரக் கூடிய எல்இடி லைட்டாகும். முன் பக்கத்தின் மேல் பகுதியிலேயே இந்த லைட் இடம் பெற்றிருக்கின்றது. இது டூ-வீலருக்கு கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் உள்ளது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மாடர்ன் கால தொழில்நுட்பவமாக முழு டிஜிட்டல் தர இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. இது இணைப்பு மற்றும் பன்முக தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட கருவி ஆகும். இத்துடன் அகலமான மற்றும் கம்ஃபோர்ட்டான சீட் உள்ளிட்டவையும் லைகர் தனது புதிய செல்ஃப் பேலன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க இன்னும் பல்வேறு சிறப்பு அம்சங்களைத் தாங்கியதாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
பிரேக்கிங் சிஸ்டம்
மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் பக்க வீலில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்படும். இத்தகைய சூப்பரான அம்சம் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே லைகர் நிறுவனம் உள் நாட்டிலேயே வைத்து உற்பத்தி செய்து விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதன் செல்ஃப் பேலன்ஸிங் சிஸ்டம் மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்க ஏதுவாக இருக்கும். குறிப்பாக, நகரங்களின் நெரிசல் மிகுந்த சாலையில் இதன் பயன்பாடு மிக சிறந்ததாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








