கோடி கணக்கிலான மக்கள் பார்க்கின்றனர்!! மோட்டோஜிபி பந்தயங்களை நேரலையாக பார்ப்பது இவ்வளவு ஈஸியா!
மோட்டோஜிபி (MotoGP) பாரத் மோட்டார்சைக்கிள் பந்தயங்கள் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெறு வருகின்றன. இந்த மோட்டார்சைக்கிள் பந்தயத்தை எவ்வாறு பார்ப்பது? எங்கு இந்த பந்தயங்கள் நடைபெறுகின்றன? யார் யாரெல்லாம் பந்தயத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்? என்கிற கேள்வி இன்னமும் உங்களிடம் இருக்கலாம். இந்த கேள்விகளுக்கான பதில்களை இனி பார்க்கலாம், வாங்க.
உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் பந்தயமான மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் முதல்முறையாக தற்சமயம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. டெல்லிக்கு அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் இந்த பந்தயங்கள் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி துவங்கின. 3 நாட்கள் நடைபெறும் இந்த பந்தயங்கள் செப்டம்பர் 24ஆம் தேதி நிறைவடையும்.

முதல் நாளான செப்.22இல் பயிற்சி பந்தயங்கள் நடைபெற்றன. இதன் மூலமாக, கிரேட்டர் நொய்டாவின் புத் சர்வதேச பந்தய களம் எவ்வாறு உள்ளது என்பதை ரைடர்களால் அறிய முடிந்தது. இந்த நிலையில், இன்று (செப்.23) தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் தகுதிப் பெறும் அணிகள் நாளை (செப்.24) இறுதி பந்தயங்களில் மோத உள்ளன.
இறுதி பந்தயங்களில் ஒவ்வொரு அணியும் பெறும் மதிப்பெண்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஒவ்வொரு நாடாக நடைபெற்றுவரும் 2023 மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் அவற்றின் மதிப்பெண்களாக சேர்க்கப்படும். புத் சர்வதேச பந்தய களத்தில் ஏற்கனவே சில ஃபார்முலா 1 கார் பந்தயங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், இது மோட்டார்சைக்கிள் பந்தயம் என்பதால், அதற்கேற்ப சில திருத்தங்கள் ரேஸ் டிராக்கில் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, ஏர் ஃபென்ஸ்கள் மற்றும் ஃபோம் தடுப்புகள் பைக் ரைடர்களின் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டு உள்ளன. ஃபார்முலா 1-க்காக உருவாக்கப்பட்ட டிராக்கில் மொத்தம் 16 வளைவுகள் இருந்தன. ஆனால், மோட்டோஜிபி-க்காக 13 வளைவுகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், புத் ரேஸ் டிராக்கில் நீளமான நேர் ரோடு உள்ளது. வளைவுகள் இன்றி இருக்கும் இந்த சாலையில் ரைடர்கள் அதிகப்பட்சமாக மணிக்கு 370 கிமீ வேகத்தில் பயணிக்கலாம்.
செப்.23ஆம் தேதியான இன்றும் சில பயிற்சி பந்தயங்கள் இருந்தன. ஆனால், அவை காலை 11.10 மணியோடு முடிந்துவிட்டன. இதில் ஒரு இலவச பயிற்சி பந்தயமும் இருந்தது. தகுதிச் சுற்று பந்தயங்கள் மதியம் 2.55 மணியளவில் நிறைவடைந்தன. செப்.24இல் மிக முக்கியமான போட்டி நடைபெறவுள்ளது. இறுதி பந்தயம் ஆனது நீண்ட நேரத்திற்கு நடைபெறும்.

அந்த சமயத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் மோட்டார்சைக்கிளிலும், ரைடருக்கும் ஏற்படலாம். அந்த பிரச்சனைகளை முன்கூட்டியே அறியும் பொருட்டு, இறுதி பந்தயம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் டிஸ்ஸோட் ஸ்பிரிண்ட் என்ற பெயரில் ஓர் பந்தயம் நடத்தப்படும். இறுதி பந்தயத்தின் பாதி தொலைவிற்கு நடத்தப்படும் டிஸ்ஸோட் ஸ்பிரிண்டில் ரேஸர்கள் மதிப்பெண்கள் குறித்த கவலையின்றி பைக்கை ஓட்டலாம்.
இந்த டிஸ்ஸோட் ஸ்பிரிண்ட் பந்தயம் இன்று (செப்.23) மாலை 3.30 மணியளவில் துவங்கி, 4.15 மணி வரையில் கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு நடைபெறவுள்ளது. மோட்டோஜிபி பாரத் பந்தயங்கள் அனைத்தையும் ஸ்போர்ட்ஸ் 18 டிவி சேனலில் கண்டுக்களிக்கலாம். அத்துடன், ஜியோ சினிமா மொபைல் செயலியிலும் இந்த பந்தயங்கள் நேரலையாக ஒளிப்பரப்படுகின்றன.

செப்.22ஆம் தேதி நடைபெற்ற பயிற்சி பந்தயங்கள் மூலம் பெற்ற அனுபவத்தில், லேப் தூரத்தையும், நேரத்தையும் சற்று மாற்றியமைக்குமாறு போட்டியை நடத்தும் நிர்வாகிகளிடம் ரைடர்கள் கேட்டுக் கொண்டனர். அதன்படி, பந்தயத்தின் லேப்களில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. டிஸ்ஸோட் ஸ்பிரிண்ட் 11 லேப்களிலும், மோட்டோ3 மற்றும் மோட்டோ2 பந்தயங்கள் முறையே 16 மற்றும் 18 லேப்கள் உடனும் நடைபெறும். இறுதி பந்தயமான மோட்டோஜிபி 21 லேப்களில் நடைபெறவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொலைக்காட்சி வாயிலாகவும், மொபைல் செயலி வாயிலாகவும் மோட்டோஜிபி பந்தயங்களை இந்தியாவில் பல இலட்சம் பேர் பார்வையிட்டு வருகின்றனர். குறிப்பாக, ஜியோ சினிமா மொபைல் செயலியில் கோடிக் கணக்கிலான பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர். இவை இல்லாமல், நேரலையாக ரேஸ் டிராக்கில் ஆயிரக்கணக்கிலானோர் பார்க்கின்றனர். ஆனால், எல்லாவற்றையும் முக்கிய பந்தயம் நாளை தான் நடைபெறவுள்ளது என்பதால், இந்த எண்ணிக்கை செப்.24இல் இன்னும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









