நாடே காத்து கிடக்கும் பாரத் மோட்டோஜிபி-க்கு எல்லாம் தயார்!! நடைபெறும் இடம், தேதி... இறுதிப்போட்டி எப்போது?
மோட்டோஜிபி பாரத் 2023 மோட்டார்சைக்கிள் பந்தயம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை (செப் 22) டெல்லிக்கு அருகே கிரேட்டர் நொய்டாவில் துவங்கவுள்ளது. மோட்டோஜிபி பாரத் பந்தயங்கள் நடைபெறும் தேதிகள், போட்டி நடைபெறும் இடத்திற்கு எவ்வாறு செல்வது என்பது உள்பட இந்த மோட்டார்சைக்கிள் பந்தயத்தை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
உலகளவில் மிகவும் பிரபலமான மோட்டார்சைக்கிள் பந்தயம் என்றால், அது மோட்டோஜிபி ஆகும். வருடாவருடம் பல்வேறு நாடுகளில் நடைபெறும் மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயங்கள் இந்த வருடம் இந்தியாவிலும் நடைபெறவுள்ளது. இன்னும் சொல்லப் போனால், இந்தியாவில் மோட்டோஜிபி நடைபெற உள்ளது இதுவே முதல்முறை ஆகும்.

இதன் காரணமாகவே, இந்தியாவில் நடைபெறும் மோட்டோஜிபி பந்தயத்திற்கு நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள் மட்டுமின்றி, பொது மக்களும் மோட்டோஜிபியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். செப்டம்பர் 22ஆம் தேதி துவங்கி, 24ஆம் தேதி வரையில் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த பந்தயங்கள் அனைத்தும், உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவிற்கு அருகே அமைந்துள்ள புத் சர்வதேச பந்தய களத்தில் நடைபெறவுள்ளன.
வழக்கமாக மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயங்கள் பல மாதங்களுக்கு பல்வேறு நாடுகளில் நடத்தப்படுவது வழக்கம். இந்த 2023ஆம் ஆண்டிற்கான பந்தயங்களும் கடந்த மார்ச் மாதத்தில் துவங்கி, 6 மாதங்களாக பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இன்னும் சொல்லப்போனால், இந்த வருடத்தில் மோட்டோஜிபி பந்தயம் நடைபெறவுள்ள 13வது நாடு இந்தியா ஆகும்.

11 அணிகளை சேர்ந்த மொத்தம் 22 ரைடர்கள் இந்த போட்டிகளில் கலந்துக் கொள்கின்றனர். ஃபாபியோ குவார்டாராரோ, அலெக்ஸ் எஸ்பார்காரோ மற்றும் ஃப்ரான்செஸ்கோ பகானையா போன்ற உலகின் முன்னணி பைக் ரேஸர்கள் மோட்டோஜிபி பாரத் 2023 பந்தயங்களில் கலந்துக் கொள்ளவுள்ளனர் என்பதால், செப்.22- 24 ஆகிய 3 நாட்களில் சுமார் 1 இலட்சத்திற்கும் அதிகமானோர் கிரேட்டர் நொய்டாவுக்கு வருகை தருவர் என கணிக்கப்பட்டு உள்ளது.
முதல் நாளான செப்.22ஆம் தேதி பயிற்சி பந்தயங்கள் நடைபெறும். இந்த பயிற்சி பந்தயங்கள் மூலமாக ரைடர்கள் புத் பந்தய களம் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்துக் கொள்ள முடியும். அதன்பின், செப்.23ஆம் தேதி தகுதி சுற்று பந்தயங்கள் நடைபெறும். இதில், சிறப்பாக செயல்படும் ரேஸர்கள் மற்றும் அவர்களது அணி செப்.24ஆம் தேதி நடைபெறும் இறுதிச் சுற்று பந்தயங்களுக்கு தகுதிப் பெறுவர்.

இதனால், மற்ற இரு நாட்களை காட்டிலும் இறுதி பந்தயங்கள் நடைபெறும் செப்.24ஆம் தேதியில் ஆயிரக்கணக்கிலான பார்வையாளர்கள் முன் அனல் பறக்க பந்தயங்கள் நடைபெறும். கிரேட்டர் நொய்டாவின் யமுனா விரைவுச்சாலைக்கு அருகே அமைந்துள்ள புத் சர்வதேச பந்தய களத்தில் ஒரே நேரத்தில் சுமார் 1,10,000 பேர் பந்தயங்களை காணலாம் என்பதை மறந்துவிட வேண்டாம். புத் பந்தய களத்தின் வளாகத்திற்குள் பிஸ்னஸ் செண்டர்கள், உணவு விடுதிகள், பார்க்கிங் பகுதிகள் என ஏகப்பட்ட இடவசதிகள் உள்ளன.
பந்தய களத்தில் அனைத்து இடங்களிலும் வை-பை வசதி மற்றும் பாதுகாப்பு கேமராக்கள் உள்ளன. இவற்றின் பயன்பாடுகளை பெறும் அதேநேரத்தில், இவற்றின் மூலமாக விதிகளை மீறும் பார்வையாளர்கள் உடனடியாக அடையாளம் காணப்படுவர். ஏனெனில், ரேஸ் டிராக் அமைந்துள்ள சுற்றுப்பாதைக்கு கேமரா, பைனாகுலர் போன்ற சில குறிப்பிட்ட பொருட்களை பார்வையாளர்கள் கொண்டுவர கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சந்திரயான்-3 நிலவு பயணம் வெற்றி அடைந்தது, ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது, கிரேட்டர் நொய்டாவில் இன்று (செப்.21) துவங்கியுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி என சமீப காலமாக உலகின் பார்வை நம் இந்தியாவை நோக்கி உள்ளது. இந்த வரிசையில், நாளை முதல் மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயங்களும் இந்தியாவில் துவங்கவுள்ளன.


Click it and Unblock the Notifications









