மோட்டோஜிபி என்றதும் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியல!! பைக் ரைடர்களின் கட்டுக்கடங்காத கூட்டம்!!
மோட்டோஜிபி பாரத் பந்தயங்கள் வருகிற செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், இதற்கு முன்னதாக நாட்டில் உள்ள பைக் ஆர்வலர்களின் கவனத்தை பெறும் நோக்கில், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இதுதொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், இந்தியாவின் பழம்பெரும் நகரமான அகமதாபாத்தில் மோட்டோஜிபி பாரத் நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.
உலகின் மிக பிரம்மாண்டமான மற்றும் பிரபலமான பைக் பந்தயம், மோட்டோஜிபி ஆகும். ஒரு வருடம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மோட்டோஜிபி பந்தயங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோன்று, இந்த 2023ஆம் ஆண்டிற்காகவும் கடந்த மார்ச் மாதத்தில் துவங்கிய மோட்டோஜிபி பந்தயங்கள் வருகிற நவம்பர் மாதம் வரையில் நடத்தப்பட உள்ளன.

இதில், வருகிற செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிலும் மோட்டோஜிபி பந்தயங்கள் நடத்தப்பட உள்ளன. இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படும் மோட்டோஜிபி பந்தயங்கள் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் டெல்லிக்கு அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் சர்வதேச பந்தய களத்தில் நடைபெறவுள்ளன. இந்தியாவில் நடைபெறவுள்ள மோட்டோஜிபி பந்தயங்களுக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக மோட்டோஜிபி பாரத் என்ற பெயரில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மோட்டோஜிபி பந்தயங்கள் இந்தியாவில் முதல்முறையாக நடைபெறவுள்ளதை எந்த அளவிற்கு விளம்பரப்படுத்த முடியுமோ, அந்த அளவிற்கு விளம்பரம் படுத்துவதோடு, இந்தியாவில் உள்ள பைக் ஆர்வலர்களை கவரும் முயற்சிகளிலும் இந்த குழு தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறது. இதன்படி, மோட்டோஜிபி பாரத்தின் சுற்றுப்பயணம் நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் மோட்டோஜிபி பாரத் நகர சுற்றுப்பயணம் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, அகமதாபாத்தில் உள்ள இன்ஸ்டீயூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) வளாகத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களுடன் சுமார் 500 பைக் ரைடர்கள் தங்களது பைக்குகளுடன் கலந்துக்கொண்டு பைக் ஓட்டுவதில் உள்ள தங்களது ஆர்வத்தையும், மோட்டோஜிபி முதல்முறையாக இந்தியாவிற்கு வரவுள்ளதை வரவேற்கும் உணர்வையும் வெளிப்படுத்தினர்.
அகமதாபாத் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரண்டு வந்த இந்த 500 பைக் ரைடர்களுள் சிலர் ஐஐஎம் வளாகத்தில் சில பல பைக் ஸ்டண்ட்களையும் செய்து காட்டினர். அதன்பின், ஐஐஎம் சார்பில் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில், மோட்டோஜிபி-இன் இந்திய விளம்பரத்தாரர்களுள் ஒருவரான ஃபையர் ஸ்ட்ரீட் ஸ்போர்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், மோட்டோஜிபி பாரத் நகர சுற்றுப்பயணங்களை முன்னிருந்து நடத்துபவர்களுள் ஒருவருமான சுசாந்த் ஸ்ரீவஸ்தாவா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய சுசாந்த் ஸ்ரீவஸ்தாவா, "மோட்டோஜிபி பாரத்தின் நகர சுற்றுப்பயணத்தை அகமதாபாத்திற்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நகரம் சின்னச் சின்ன விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதில் வளமான வரலாற்றை கொண்டுள்ளது. மேலும், ஆர்வமுள்ள விளையாட்டு ஆர்வலர்களுக்கான மையமான ஐஐஎம் வளாகத்தில் இருப்பதை நாங்கள் பாக்கியமாக உணர்கிறோம்" என்றார்.
500 பைக் ரைடர்கள் பங்கேற்ற இந்த பயணம் அகமதாபாத் பைக்கிங் சமூகத்தின் உற்சாகத்தையும், ஆற்றலையும் வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல், புத் சர்வதேச சர்க்யூட்டில் பந்தயங்களின் இந்திய பதிப்பை நேரலையில் காணும் வாய்ப்பை பெறும் அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுப்பதற்கான பிரஷ்ஃபேஸ் மற்றும் மோட்டோ ஃப்ளூயன்சர் போன்ற போட்டிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது.
மேலும், அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு ஆனது மோட்டோஜிபி பாரத்தின் "சாலைகள், சவாரி செய்வதற்கானது & டிராக்குகள் பந்தயத்திற்கானது" என்ற ரேஸ் தத்துவத்தை ஹைலைட்டாக தூக்கி பிடிப்பதாக விளங்கியது. அகமதாபாத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மோட்டோஜிபி பாரத்தின் குழுவுடன் இணைந்து மற்ற நகரங்களுக்கு அழைத்து செல்லப்படுவர். இவ்வாறு தேர்வு செய்யப்படும் பைக் ரைடர்களுக்கான இறுதிப் போட்டி டெல்லியில் அடுத்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: அகமதாபாத்தின் பைக் சமூகத்திற்குள் வலுவான பிணைப்புகளை வளர்க்கும் அதேவேளையில், இளம் பைக் ரைடர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த நிகழ்வு அமைந்தது. அதுமட்டுமின்றி, பைக் ரைடர்களுக்கும் புது புது நண்பர்கள் மற்றும் பைக் ரைடர் சமூகத்தின் அறிமுகம் கிடைக்க மோட்டோஜிபி பாரத்தின் இந்த நகர சுற்றுப்பயணம் ஓர் உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








