மோட்டோஜிபி போட்டியை நேரில் காண ஆசையா? வெளிநாட்டுக்குலாம் போக வேண்டாம்.. இந்தியாலையே நிகழபோகுது!
உலகின் மிக உயர் வகை மோட்டார்சைக்கிள் ஓட்ட பந்தயங்களில் மோட்டோ-ஜிபி வேர்ல்டு சேம்பியன்ஷிப் (MotoGP World Championship)-பும் ஒன்று. உலகின் மிகவும் தலை சிறந்த ரைடர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெற இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக 18-க்கும் அதிகமான நாடுகளில் இந்த போட்டி நடைபெற இருக்கின்றது.
21 பந்தயங்களாக இது நடைபெறும். இதில் 14 வது ரவுண்டே இந்தியாவில் நடைபெற இருக்கின்றது. இந்தியாவில் இந்த போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். ஆகையால், இது மோட்டோஜிபி ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கும். மேலும், ரேஸ் டிராக்கை கிழித்துக் கொண்டு செல்லக் கூடிய மோட்டார்சைக்கிள்களை நேரடியாக காணும் வாய்ப்பு இந்த முறை இந்தியர்களுக்கு கிடைத்திருக்கின்றது.

உலக தரம் வாய்ந்த, உயர் திறன் கொண்ட மற்றும் அதிக வேகத்தில் செல்லக் கூடிய மோட்டார்சைக்கிள்களே மோட்டோஜிபி உலக சாம்பியன்ஷிப்பில் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதில், உலகின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட முன்மாதிரி மோட்டார்சைக்கிள்களே பயன்படுத்தப்பட உள்ளன. ஆகையால், 2023 சீசன் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அனைவரின் மத்தியிலும் எகிற தொடங்கியிருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க, நேரடி ஒளிபரப்பும் இந்தியாவில் நடைபெற இருக்கின்றது. இதற்கான உரிமத்தை வையாகாம் தனியார் நிறுவனம் பெற்றிருக்கின்றது. ஆகையால், நேரில் சென்று காண முடியாதவர்கள் இதனை டிவி-யில் லைவாக காணலாம். ஸ்போர்ட்ஸ் 18 சேனலிலேயே 2023 மோட்டோ ஜிபி சாம்பியன் ஷிப் போட்டியின் ஒட்டுமொத்த சீசனும் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கின்றது. இதுதவிர ஜியோ சினமா செயலி வாயிலாகவும் இதைக் கண்டுகளிக்க முடியும்.

ஜியோ சினிமா ஓர் இலவச செயலி ஆகும். ஆகையால், இதை பயன்படுத்த ஜியோ சிம் கார்டு அவசியம் கிடையாது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இந்த செயலி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், குறிப்பிட்ட ஓஎஸ் வெர்சன்களுக்கு மட்டுமே இந்த செயலி கிடைக்கும்.
அதேவேளையில் டெஸ்க்டாக் அல்லது மடிக் கணினி வாயிலாகவும் ஜியோ சினிமா தளத்தை பயன்படுத்தி மோட்டோஜிபி பந்தயங்களைக் காண முடியும் என வையாகாம் தெரிவித்து இருக்கின்றது. புத்தா சர்வதேச சர்க்யூட்டே போட்டி நடைபெறும் தளமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. இங்கு வரும் செப்டம்பர் 22 தொடங்கி 24 வரையில் என மொத்தம் மூன்று நாட்களுக்கு போட்டிகள் நடைபெற உள்ளன.

முதல் நாளில் மோட்டோ 3, மோட்டோ 2 மற்றும் மோட்டோ ஜிபி ஆகியவற்றின் முதல் நிலை பிராக்டீஸ்கள்கள் நடைபெற இருக்கின்றன. இதைத்தொடர்ந்து, இரண்டாம் நாளான செப்டம்பர் 23 அன்று மூன்றாம் பாக பயிற்சியும், தேர்வு மற்றும் ஸ்பிரிண்ட் ரேஸும் நடைபெற இருக்கின்றது. கடைசி நாளான செப்டம்பர் 24 இல் மோட்டோ 3, மோட்டோ 2 மற்றும் மோட்டோ ஜிபி பந்தயங்கள் நடைபெறும்.
பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை இந்த போட்டிகள் நடைபெற இருக்கின்றது. டுகாட்டி, கேடிஎம், அப்ரில்லா, பிரைமா பிரமக் ரேசிங், யமஹா, க்ரெஸினி ரேசிங், மூனி விஆர்46, எல்சிஆர் ஹோண்டா, ஆர்என்எஃப் மோட்டோஜிபி மற்றும் கேஸ்கேஸ் டெக்3 உள்ளிட்ட குழுக்கள் 2023 மோட்டோ ஜிபி-யில் கலந்துக் கொள்ள இருக்கின்றன.

இந்தியாவில் மோட்டோ ஜிபி பந்தயங்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பதை உணர்ந்தே இந்தியாவில் குறிப்பிட்ட சீசனை நடத்த முடிவு செய்திருப்பதாக மோட்டோஜிபி ஒருங்கிணைப்பாளர் கார்மேலோ எஸ்பெலடே கூறியிருக்கின்றார். மேலும், இதனை இந்தியாவில் நடத்துவதில் தங்களுக்கு மட்டற்று மகிழ்ச்சி என்றும் அவர் கூறி இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
உலக அளவில் மிக பெரிய வாகனங்களுக்கான சந்தையாக இந்தியா உள்ளது. இந்த நிலையில், இதுபோன்ற உலக புகழ்பெற்ற போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருப்பது நாட்டின் மதிப்பை மேலும் கூட்டும் வகையில் அமைந்துள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற இன்னும் பல உலக புகழ்பெற்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு இதுவே (மோட்டோஜிபி) ஆரம்பப் புள்ளியாக அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









