டிவிஎஸ் எக்ஸ்எல்-லையே தூக்கி சாப்பிட்ரும் போல... மைலேஜ் தருவதில் செம்ம கில்லாடி!
ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனமான மோட்டோவோல்ட் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டிற்கே டஃப் கொடுக்கும் ஸ்டைலில் அர்பன் எனும் இ-பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் மோட்டோவோல்ட் (Motovolt Mobility Private Limited). இது ஓர் ஸ்டார்ட் அப் மின்வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே இந்தியர்களின் பிரியமான இருசக்கர வாகன மாடல்களில் ஒன்றான டிவிஎஸ் எக்ஸ்எல்-லுக்கே டஃப் கொடுக்கும் வகையிலான ஓர் புது முக வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. நிறுவனம் அர்பன் (URBN) எனும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தையே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஃபுல் சார்ஜில் பயணிக்கும் தூரம்
இந்த இருசக்கர வாகனத்தில் பிஐஎஸ் சான்று பெற்ற பேட்டரி பேக்கை நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் கூடுதல் சிறப்பு என்ன என்றால், இந்த பேட்டரி பேக்கை தனியாக கழட்டி மாட்டிக் கொள்ள முடியும். ஆகையால், பேட்டரியை எங்கு வைத்து வேண்டுமானாலும் சார்ஜ் செய்து, மீண்டும் இருசக்கர வாகனத்தில் பொருத்தி பயன்படுத்திக் கொள்ள முடியும்.
டிவிஎஸ் எக்ஸ்எல்-லைவிட கொஞ்சம்தான் விலை அதிகம்
இத்தகைய சூப்பரான வசதிக் கொண்ட பேட்டரியையே மோட்டோவோல்ட் நிறுவனம் அதன் அர்பன் எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கி இருக்கின்றது. இந்த இ-பைக்கின் தோற்றம் டிவிஎஸ் எக்ஸ்எல் மற்றும் சைக்கிள் ஆகிய இரண்டையும் ஒத்ததாக இருக்கின்றது. இதுவே இந்த மின்சார வாகனத்திற்கு தனித்துவமான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்து இருக்கின்றது. அறிமுகமாக மோட்டோவோல்ட் அர்பன் இ-பைக்கிற்கு 49 ஆயிரத்து 999 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இது டிவிஎஸ்எல் 100 மாடலைக் காட்டிலும் ரூ. 4 ஆயிரம் மட்டுமே விலை அதிகம் ஆகும். ஆனால், இது நல்ல ரேஞ்ஜ் தரக் கூடிய வாகனமாக இருக்கின்றது. ஓர் டிவிஎஸ் எக்ஸ்எல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 50 கிமீ முதல் 60 கிமீ வரை மட்டுமே மைலேஜ் தரும். ஆனால் புதிய மோட்டோவோல்ட் அர்பன் எலெக்ட்ரிக் இ-பைக்கோ ஓர் ஃபுல் சார்ஜில் 120 கிமீ தூரம் வரை பயணிக்கும்.
ஆன்லைன்-ஆஃப்லைன் ரெண்டிலுமே விற்பனைக்குக் கிடைக்கும்
இத்தகைய அதிக ரேஞ்ஜ் தரும் வாகனத்தையே மோட்டோவோல்ட் இந்தியர்களுக்காக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஆன்லைன் மற்றும் நிறுவனத்தின் ஸ்டோர்கள் வாயிலாக இது விற்பனைக்குக் கிடைக்கும். நிறுவனத்தின்கீழ் தற்போது சுமார் 100 டச்பாயிண்டுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் வாயிலாக புதிய இ-பைக்கை எளிதில் வாங்கிக் கொள்ள முடியும். இந்தியாவில் மைக்ரோ மொபிலிட்டிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டே மோட்டோவோல்ட் நிறுவனம் இந்த இ-மொபட்டை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

சீனாவில் இருந்து பிறந்த ஞானம்
நிறுவனத்தின் உரிமையாளரான துஷார் சவுத்ரி, அவ்வப்போது சீனாவிற்கு சென்று வரும்போது, அந்த நாட்டிற்கும், நம் நாட்டிற்கும் மிகப் பெரிய அளவு இடைவெளி மைக்ரோ மொபிலிட்டி விஷயத்தில் இருப்பதை உணர்ந்திருக்கின்றார். இதுவே, அவரை மின் வாகன உற்பத்தியில் களமிறங்கி செய்து, தற்போது மின் வாகனங்களையும் விற்பனைக்குக் கொண்டு வர செய்திருக்கின்றது. தற்போது நிறுவனத்தின் முக்கிய இலக்கு இ-சைக்கிள் மற்றும் இ-பைக்குகளை விற்பனைக்குக் களமிறக்குவதே ஆகும்.
புக்கிங் இப்பவே குவியுது
தற்போது நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் இ-பைக்கிற்கு தனிநபர்கள் இடத்தில் இருந்து மட்டுமின்றி சில தனியார் நிறுவனங்களிடம் இருந்து நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போதே 5 ஆயிரம் புக்கிங்குகளை அது குவித்திருக்கின்றது. டெலிவரி மற்றும் ஆன்லைன் வர்த்த நிறுவனங்களான ஸ்விக்கி, சொமேட்டோ, ஜைவ் எலெக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்தே புக்கிங் குவிந்துக் கொண்டிருக்கின்றது. மோட்டோவோல்ட் நிறுவனம் 2020 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது.
கொல்கத்தாவிலேயே நிறுவனத்தின் உற்பத்தி ஆலை அமைந்திருக்கின்றது. இந்த ஆலை மாதத்திற்கு 40 ஆயிரம் யூனிட்டுகளைத் தயாரிக்கும் தனித்திறன் கொண்டது. இந்த உற்பத்தி திறனை நிறுவனம் மேலும் அதிகரிக்கச் செய்ய திட்டமிட்டு உள்ளது. இத்துடன், நாடு முழுவதும் கூடுதலாக புதிய விற்பனையகங்களைத் திறக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக நிறுவனத்தின் தயாரிப்புகளின் பக்கம் கூடுதலாக வாடிக்கையாளர்களை கவர முடியும் என அது நம்புகின்றது.


Click it and Unblock the Notifications








