உங்க வண்டிய பெட்ரோல்-எலெக்ட்ரிக் ரெண்டுலையும் ஓட வைக்க முடியும்! ஒரு நிறுவனம் இத செய்து தர தயாரா இருக்கு!
தலைப்பை பார்த்துவிட்டு இது ஏதோ தனியார் நிறுவனத்திற்கான புரமோசன் (விளம்பர) பதிவு என நினைத்துக் கொள்ள வேண்டாம். பெட்ரோல் விலை உயர்வால் கடும் சிரமமங்களுக்கு ஆளாகி வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்பெற வேண்டியே இந்த பதிவை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் வெளியிடுகின்றது.
இன்றைய கால கட்டத்தில் நம்முடைய வருமானம் உயர்கிறதோ இல்லையோ, ஆனால், நம்முடைய செலவுகள் மட்டும் தவறாமல் தினந்தோறும் உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு பக்கம் நிறுவனங்கள் வேலையாட்களை பணியை விட்டு நீக்குதல் மற்றும் சம்பளத்தை குறைத்தல் போன்ற அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வரும்நிலையில், மறுபக்கம் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்குக் உயர்ந்துக் கொண்டிருக்கின்றது.

மிக முக்கியமாக பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துக் கொண்டிருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100-ஐக் கடந்து விற்பனைச் செய்யப்படுகின்றது. இந்த நிலை தினசரி இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவோருக்கு கூடுதல் பாரத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தங்களின் சம்பாத்யத்தின் பெரும் பகுதியை எரிபொருளுக்காகவே அவர்கள் செலவிட வேண்டிய சூழலே தற்போது தென்படுகின்றது. இந்த பெரும் சுமையில் இருந்து லேசாக பாரத்தை குறைக்கும் வழியையே பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் கிரீன் டைகர் மொபிலிட்டி (Green Tiger Mobility) நிறுவனம் தற்போது மக்களுக்கு காண்பித்திருக்கின்றது.

இந்நிறுவனம் பெட்ரோல் டூவீலர்களை, பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் ஓடும் வாகனமாக மாற்றி தரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதுவே நாட்டின் நம்பர் 1 ஆர்டிஓ (RTO) மற்றும் அராய் (ARAI) சான்று பெற்ற டூ-வீலரை ஹைபிரிட் வாகனமாக மாற்றி தரும் நிறுவனம் ஆகும்.
எந்த பிராண்ட் ஸ்கூட்டராக இருந்தாலும் இந்த நிறுவனம் மின்சாரம் மற்றும் பெட்ரோலில் இயங்கும் வாகனமாக மாற்றி தரும். 125 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர்களையும் ஹைபிரிட் வாகனங்களாக மாற்றி தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க மோட்டார்சைக்கிள் சிலவற்றையும் தங்கள் நிறுவனம் பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வாகனமாக மாற்றி தரும் என கிரீன் டைகர் தெரிவித்து இருக்கின்றது.

இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்டாக் எஞ்ஜின் மாற்றப்படாமலே இந்த வசதியை கிரீன் டைகர் செய்து தருகின்றது. ஹைபிரிட் கன்வெர்ஷனுக்காக மின்சார மோட்டாரையும், அதற்கு தேவையான பேட்டரியை மட்டுமே இருசக்கர வாகனத்தில் கிரீன் டைகர் மொபிலிட்டி கூடுதலாக சேர்க்கின்றது. இதுதவிர, ஆக்சலரசேஷனிலும் லேசான மாற்றத்தை நிறுவனம் செய்யும்.
ஒரே ஆக்சலரேஷனிலேயே இரு (பெட்ரோல் - எலெக்ட்ரிக்) மோட்டார்களை கட்டுப்படுத்தவே இந்த மாற்றத்தை கிரீன் டைகர் செய்கின்றது. இந்த பேட்டரி ஓர் ஃபுல் சார்ஜில் 60 கிமீ ரேஞ்ஜை தரும். இதேபோல், இதில் பொருத்தப்படும் மின்சார மோட்டார் டூ-வீலரை மணிக்கு 60 கிமீ இயங்கச் செய்யும்.

இத்தகைய திறன் கொண்ட வசதியை ஹைபிரிட் கன்வெர்ஷன் கீழ் கிரீன் டைகர் மொபிலிட்டி செய்துக் கொடுக்க இருக்கின்றது. ஓர் தனித்துவமான ஸ்விட்சையும் கிரீன் டைகர் டூ-வீலரில் பொருத்தி தரும். பெட்ரோல் அல்லது எலெக்ட்ரிக் மோட்களை தேர்வு செய்து கொள்ள இந்த ஸ்விட்ச் உதவும்.
கிரீன் டைகர் பயன்படுத்தும் மின்சார மோட்டார் ஐபி67 தர சான்று பெற்றது. நீர் மற்றும் தூசி ஆகியவற்றால் அது பாதிக்கப்படாது என்பதற்கான சான்றே இதுவாகும். பேட்டரியும் இத்தகைய சான்றையே பெற்றிருக்கின்றது. பேட்டரியை நம்மால் தனியாக கழட்டிக் கொள்ள முடியும். ஆகையால், எந்த இடத்தில் வேண்டுமானலும் வைத்து பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இதுதவிர, இருசக்கர வாகனத்தை ஸ்மார்ட் மற்றும் பாதுகாப்பானதாக மாற்றும் விதமாக விசியூ டிவைஸையும் சேர்த்து தருகின்றது கிரீன் டைகர் நிறுவனம். இப்போதைய நிலவரப்படி நிறுவனம் 7 முன்னணி பிராண்டுகளின் ஸ்கூட்டர்களையே ஹைபிரிட் வாகனமாக மாற்றி வருகின்றது. ஹோண்டா ஆக்டிவா, டியோ, ஹீரோ மேஸ்ட்ரோ, பிளஸ்ஸர், டிவிஎஸ் வீகோ, ஜுபிடர் மற்றும் சுஸுகி அக்செஸ் ஆகிய மாடல்களை நிறுவனம் மின்சாரம் மற்றும் பெட்ரோலில் ஓடும் வாகனமாக மாற்றிக் கொண்டிருக்கின்றது.
தற்போது பைக்குகளை ஹைபிரிட் வாகனமாக மாற்றும் பணிகள் சோதனையோட்டமாக செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் அதையும் வர்த்தகத்திற்கு கொண்டு வர இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கன்வெர்ட் செய்து டூ-வீலர்களை பயன்படுத்தினால் அதிக லாபத்தைப் பெற முடியும் என கிரீன் டைகர் தெரிவித்து இருக்கின்றது.
ஒரு நாளுக்கு 35 கிமீ வரை இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர் எனில் ஆண்டுக்கு ரூ. 65 ஆயிரம் வரை மிச்சப்படுத்த முடியும் என நிறுவனம் கூறுகின்றது. டூ-வீலர்களை ஹைபிரிட்டாக மாற்ற நிறுவனம் ரூ. 65 ஆயிரத்தை கட்டணமாக பெறுகின்றது. இதில் வரியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
முன்னதாக கூறியதைப் போல் இந்த அம்சத்துடன் விசியூ எனும் நவீன கருவியையும் வழங்குகின்றது. இந்த கருவியைக் கொண்டு செல்போனுடன் டூ-வீலரை இணைத்துக் கொள்ள முடியும். இதன் வாயிலாக இருசக்கர வாகன எப்போது வேண்டுமானாலும் கண்கானிக்க முடியும். குறிப்பாக, வாகனத்தை திருட்டுப் போகாமல் தடுக்க முடியும். ஒருவேளை வாகனம் திருட்டுப் போனாலும் அதை சுலபமாக செல்போன் ஆப் வாயிலாக டிராக் செய்து கண்டுபிடித்து விட முடியும்.


Click it and Unblock the Notifications









