ஓலா, ஏத்தர்னு எல்லாத்துக்கும் தலைவனாக மாறிய ஒகாயா! சூப்பரான சான்றை இந்தியாவிலேயே முதல் நிறுவனமா வாங்கியாச்சு!
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒகாயா இவி. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளே ஐகாட் (ICAT) சான்றைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டில் இதுவரை எப்போதும் அரங்கேறிராத வகையில் வாகன தீ விபத்துகள் அதிகளவில் நாட்டில் அரங்கேறின.
குறிப்பாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் தீ விபத்து நிகழ்வுகள் தொடர் கதையாகின. சார்ஜ் போட்டு கொண்டிருந்தபோது தீ விபத்தில் சிக்கியது, சும்மா நிறுத்தி வைத்திருந்த எலெக்ட்ரிக் வாகனம் தீ பிடித்தது, ஓடிக் கொண்டிருந்த இ-ஸ்கூட்டர் திடீரென தீ விபத்தில் சிக்கியது இவ்வாறு விநோதமான தீ விபத்து சம்பவங்கள் பற்றிய செய்திகள் நாள்தோறும் வெளியாகிய வண்ணம் இருந்தன.

இந்த நிலை நாட்டு மக்களையும், மின் வாகன பயன்பாட்டாளர்களையும் பெருத்த அதிர்ச்சியில் உறைய வைத்தன. ஒட்டுமொத்த நாடே மின் வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கி இருந்த நிலையில், இந்த அதிர்ச்சியான சம்பவங்கள் அரங்கேறின. இதன் விளைவாக மின்சார வாகனங்களை வாங்குவோர் தயக்கம் காட்டத் தொடங்கினர்.
இந்த நிலையிலேயே அரசு தாமாக முன் வந்து தீ விபத்துகளுக்கான காரணம்குறித்து ஆராய ஓர் தனிக் குழுவை அமைத்தது. இந்த குழு மின் வாகனங்களின் தீ விபத்துகளுக்கான காரணத்தை கண்டறியும் என்றும், மேலும், இது வழங்கும் தரவுகளின் அடிப்படையில் மின் வாகன உற்பத்திக்கான வழிக்காட்டுதல்கள் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.

இந்த நிலையிலேயே 'ஏஐஎஸ் 156 திருத்தம் III கட்டம் 2'-இன் கீழ் புதிய விதிகள் அமலுக்குக் கொண்டு வரப்பட்டன. இதன் கீழே ஒகாயா மின்சார வாகனங்களுக்கு ஐகாட் சான்று வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த சான்றை பெறும் முதல் மின்வாகன உற்பத்தி நிறுவனம் இதுவாகும்.
புதிய விதி, ஓர் மின்சார வாகனத்தின் பேட்டரி பேக், அதன் கூறுகள் மற்றும் கட்டுமானம் உள்ளிட்டவை அதிக பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. இவை அனைத்திற்கும் இணங்க ஒகாயாவின் மின்சார வாகனங்கள் இருப்பதை உறுதி செய்த பின்னரே ஐகாட் சான்று அதற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

குறிப்பாக நிறுவனத்தின் மின்சார வாகனத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பேட்டரி பேக்கின் பாதுகாப்பு திறன் பல மடங்கு மேம்படுத்தப்பட்டு இருக்கின்றது. உயர் தர வயர்கள், அதிகம் சார்ஜாகமல் இருப்பதற்கான பாதுகாப்பு சிஸ்டம், வெப்பத்தை தவிர்க்கும் தொழில்நுட்பம், பேட்டரியில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதை ஆடியோ மற்றும் வீடியோவாக எச்சரிக்கை செய்யும் கருவி என பல்வேறு அம்சங்கள் ஒகாயா எலெக்ட்ரிக் வாகனங்களில் வழங்கப்பட்டு உள்ளன.
இதுதவிர அதிக பாதுகாப்பான சார்ஜர்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனம் தயாரிக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஐகாட் சான்றை மட்டுமில்லைங்க, ஐபி67 சான்றையும் பெற்றிருக்கின்றது. இது தூசி மற்றும் தண்ணீரால் எந்த பாதிப்பையும் மின்சார வாகனம் சந்திக்காது என்பதற்கான சான்றாகும்.
இதுமாதிரியான சூப்பரான சான்றுகளையே ஒகாயா எலெக்ட்ரிக் வாகனங்கள் பெற்றிருக்கின்றன. ஆகையால், எதிர்காலத்தில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் அதிகம் தரம்மிக்க வாகனங்களுக்கு எப்போதும் டிமாண்ட் அதிகம் அதன் அடிப்படையில் இந்தியர்கள் ஒகாயா எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
பல நிறுவனங்கள் தங்களுடைய மின்சார வாகனங்களில் தீ விபத்தை தவிர்க்கக் கூடிய பேட்டரி பேக்குகளை பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றன. ஆகையால், இந்த ஆண்டு பெருமளவில் மின்சார வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் தீ விபத்துகள் குறைந்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








