ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உயர்வு... இதுக்கு காரணம் வேற யாரும் இல்ல நம்ம மோடி அரசாங்கம்தான்!
பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா (Ola Electric), இந்தியாவில் விற்பனையில் உள்ள அதன் அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையையும் உயர்த்திவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எவ்வளவு விலை உயர்த்தப்பட்டு இருக்கின்றது?, ஏன் திடீரென விலை உயர்வு செய்யப்பட்டு இருக்கின்றது என்பதுகுறித்த விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) உருவெடுத்திருக்கின்றது. ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) மற்றும் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) உள்ளிட்ட நிறுவனங்களைக் காட்டிலும் ஓலா மின்சார இருசக்கர வாகனங்களே நாட்டில் மிக அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

ஆகையால், இந்திய மின்சார இருசக்கர வாகன உலகின் முடிசூடா மன்னனாக ஓலா எலெக்ட்ரிக் விளங்குகின்றது. இத்தகைய அமோக வரவேற்பு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு கிடைப்பதற்கு, அதன் தயாரிப்புகளின் விலை மலிவானதாக இருப்பதே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது.
விலை குறைவு மட்டுமல்ல, அதிக தொழில்நுட்ப வசதிகளை தாங்கியதாகவும் ஓலா எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கின்றன. எனவேதான் போட்டி பலமடங்கு சந்தையில் அதிகரித்துக் காணப்படுகின்ற போதிலும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக் கணக்கில் ஓலா எலெக்ட்ரிக் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையாகிக் கொண்டு இருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் அனைத்து மின்சார இருசக்கர வாகனங்களின் விலையையும் உயர்த்திவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூ. 15 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த திடீர் விலை உயர்விற்கு நம்முடைய மத்திய அரசாங்கமே முழு காரணமாகும்.
இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக ஃபேம்-2 திட்டத்தின்கீழ் அரசு மானியம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக ஓர் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் 3 kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் எனில், ஒவ்வொரு kWh-க்கும் ரூ. 15 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

ஆகையால், 3 kWh பேட்டரி பேக் கொண்ட எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தின் விலையில் ரூ. 45 ஆயிரம் குறையும். இத்தகைய சூப்பரான திட்டத்திலேயே மத்திய அரசாங்கம் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றது. அதாவது மானியத் தொகையை குறைத்து அது நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றது.
இதன் விளைவாகவே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்கள் விலை உயர்ந்திருக்கின்றன. இந்த நிறுவனத்தின் இ-வாகனங்களின் விலைகள் மட்டுமல்ல இன்னும் பல நிறுவனங்களின் மின்சார டூ-வீலர்களின் விலையும் விரைவில் உயர இருக்கின்றது. அரசு முன்னதாக 1 kWh பேட்டரி பேக்கிற்கு ரூ. 15 ஆயிரம் வரை மானியம் வழங்கி வந்தது.
இந்த நிலையில், அதை தற்போது 1 kWh பேட்டரி பேக்கிற்கு 10 ஆயிரம் ரூபாயாக குறைத்துவிட்டது. இதனால்தான் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 3 kWh பேட்டரி பேக் கொண்ட மின்சார ஸ்கூட்டரின் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர்ந்து இருக்கின்றது.
தற்போது ஓலா நிறுவனம் இந்திய சந்தையில் ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையில் விரைவில் எஸ்1 ஏர் எனும் புதுமுக மாடல் இணைய இருக்கின்றது. இருப்பதிலேயே மிக விலைக் குறைவான எலெக்ட்ரிக் வாகனமாக இது விற்பனைக்கு வர இருக்கின்றது.
ரூ. 1,09,999-க்கு விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகின்றது. இப்போது இந்த வாகனத்திற்கு புக்கிங்குகள் மட்டுமே ஏற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. ஓலா எஸ் 1 ப்ரோவின் தற்போதைய விலை ரூ. 1,39,999 ஆகும். ஓலா எஸ்1 மாடலின் விலை ரூ. 1,29,999 ஆகும். இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபேம் 2 திட்டத்தில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றம் காரணமாக விரைவில் பிற நிறுவனங்களும் தங்களின் மின்சார இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்த இருக்கின்றன. இதன் விளைவு நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை லேசாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், வாகன உற்பத்தியாளர்கள் விற்பனையில் எந்த மாற்றமும் இருக்காது என நம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications









