கார்களுக்கு பதிலா இந்த ஆட்டோக்களையே வாங்கிடலாம் போல... விலையோ கம்மி, வசதியோ மிக அதிகம்!
"கார்களுக்கு பதிலாக இந்த ஆட்டோக்களையே வாங்கிடலாம் போல" என கூறும் அளவிற்கு மிக அதிக சிறப்பு வசதிகளுடன் ஓஎஸ்எம் மூன்று சக்கர வாகனங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவைகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஒஎஸ்எம் எனப்படும் ஒமெகா செய்கி மொபிலிட்டி நிறுவனம் இந்தியா ஆட்டோ எக்ஸ்போவை 2023-ஐப் பயன்படுத்தி அதன் புதுமுக தயாரிப்புகள் சிலவற்றைக் காட்சிப்படுத்தியது. அந்தவகையில், நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவை மிரள வைக்கும் வகையில் தனது அழகிய தயாரிப்புகளான ஆட்டோ ரிக்ஷாக்கள் சிலவற்றையும் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த ஆட்டோக்கள் கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இரண்டு ஆட்டோக்கள்
அழகிலும் சரி, சிறப்பு வசதிகளிலும் சரி இந்த ஆட்டோ வேற லெவலில் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஒஎஸ்எம் ம்யூஸ் (OSM Muse) மற்றும் ஒஎஸ்எம் க்ரேஸ் (OSM Kraze) எனும் ஆட்டோக்களையே நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது. இரண்டையும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் விதமாக அவற்றிற்கான புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கப்பட்டுவிட்டன. இவற்றுடன் சொகுசு வசதிகள் கொண்ட ஆட்டோக்களின் விலையும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இவ்ளோ கம்மி விலையா!!
ஒஎஸ்எம் ம்யூஸ் மாடலுக்கு 4 லட்ச ரூபாயும், ஒஎஸ்எம் க்ரேஸ் மாடலுக்கு 4.20 லட்சம் ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை கார்களுக்கு இணையான விலை ஆகும். இந்த அதிகபட்ச விலைக்கு ஆட்டோக்களில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. இதுமட்டுமின்றி, இரண்டும் எலெக்ட்ரிக் ஆட்டோ என்பதும் அவற்றின் அதிக விலைக்கு காரணமாக இருக்கின்றன.

ஆமாங்க, இரண்டும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய பேட்டரி வாகனங்கள் ஆகும். இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 9 லட்சம் ரூபாயையாவது வைத்தாக வேண்டும். டாடாவின் டியாகோ இவி-யே இந்த குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதைக்காட்டிலும் பல மடங்கு கம்மியான விலையிலேயே ஒஎஸ்எம்-இன் இ-ஆட்டோக்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இரண்டிலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஜிபிஎஸ் மற்றும் மொபைல் ஆப் வாயிலாக கன்ட்ரோல் செய்யும் வசதி மற்றும் மானிட்டரிங் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், இரண்டிலும் ஓர் முழுமையான சார்ஜில் 80 கிமீ முதல் 100 கிமீ வரையில் பயணிக்க முடியும். இதை சார்ஜ் செய்ய 15A சாக்கெட்டே போதும்.
ம்யூஸ்
இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவில் அதிகபட்சமாக இரண்டு பேர் மிக தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். 950 கிலோ வரையில் இது ஏற்றி செல்லும் திறன் கொண்டது. 8 kWh பேட்டரி பேக்கே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஃபுல் சார்ஜில் 150 கிமீ ரேஞ்ஜ் தரும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 50 கிமீ ஆகும். 4 மணி நேரத்தில் இதை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

ஏசி, மிக தாராளமான லெக் ரூம் வசதி, இரவில் வானம் இருப்பதைப் போன்ற உட்பக்க மேற்கூரை என எக்கசக்க அம்சங்கள் ம்யூஸில் வழங்கப்பட்டிருக்கும். ஐஓடி சிஸ்டம், டிஜிட்டல் க்ரூஸர், டூயல் எல்இடி ஹெட்லைட், 200 லிட்டர் பூட் ஸ்பேஸ், கட்டிங் எட்ஜ், மாடர்ன் ஏரோ டைனமிக் என எக்கசக்க அம்சங்கள் ம்யூஸில் வழங்கப்பட்டுள்ளன.
க்ரேஸ்
இதன் ஃபுல் சார்ஜ் ரேஞ்ஜ் திறன் 150 கிமீ ஆகும். மேலும், இது அதிகபட்சமாக 46 கிமீ வேகத்தில் பயணிக்கும். நகரம் மற்றும் நடுத்தர கிராமங்களுக்கு ஏற்ற வாகனம் இது ஆகும். மிகவும் அட்டகாசமான ஸ்டைலில் இந்த வாகனத்தை ஒஎஸ்எம் உருவாக்கி இருக்கின்றது. கட்டிங் எட்ஜ், ஏரோடைனமிக் டிசைன் என தோற்றத்தில் இந்த வாகனம் கலக்கலாக இருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் ஓர் வசதியான கார் மாடலைக் காட்டிலும் இது மிகவும் அழகானதாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
தற்போது ஓஎஸ்எம் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஃபரிதாபாத்தில் உள்ளது. இங்கு வைத்தே நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோக்களைத் தயாரிக்க இருக்கின்றது. இந்தியா மட்டுமின்று உலக நாடுகளுக்கும் இந்த மின்சார ஆட்டோக்கள் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஆண்டுக்கு 4 ஆயிரம் யூனிட்டுகள் வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இன்னும் சில வாரங்களில் இரு ஆட்டோக்களும் விற்பனைக்கு வர இருக்கின்றன. மேலும், அவற்றின் டெலிவரி பணிகள் மே 2023 இல் தொடங்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









