புதிய வாகனங்கள் மைலேஜ் குறைவாக கொடுக்கும்... இதற்கு காரணம் என்ன தெரியுமா? இதை சரி செய்ய வழி உண்டா?
புதிதாக வாங்கப்படும் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் பெரும்பாலும் குறைவான மைலேஜையே வழங்கும். உதாரணமாக, இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் எங்களின் மோட்டார்சைக்கிள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 50 கிமீட்டருக்கு அதிகமான தூரம் பயணிக்கும், எங்களின் ஸ்கூட்டர் ஒரு லிட்டருக்கு 60 கி.மீட்டருக்கும்., அதிகமான மைலேஜை தரும் என வாக்குறுதியை அளிப்பார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையிலோ புதிதாக வாங்கப்பட்ட அந்த பைக் அல்லது ஸ்கூட்டர் அவர்கள் சொன்னதைவிட மிகக் குறைவான மைலேஜையே வழங்கும்.
இதன் காரணத்தினால் சில இடங்களில் கஷ்டமருக்கும் - ஷோரூம் விற்பனையாளர்களுக்கும் இடையே மோதல்கள் கூட ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், உண்மை என்ன என்றால் புதிதாக வாங்கப்படும் எந்தவொரு வாகனமும் ஆரம்பத்தில் குறைவான மைலேஜையே வழங்கும். குறிப்பிட்ட சில கிலோ மீட்டர் தூரம் அந்த வாகனங்கள் பயணிக்கின்ற வரையில் குறைவான மைலேஜையே வழங்கும். இந்த நிலை "அட ச்சே... ஏன்தான் இந்த வண்டிய வாங்கினோமோ" என நினைக்க வைத்துவிடும்.

இந்த சிக்கல் ஏன் புதிய வாகனங்களில் இருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம். வாகனத்தின் இதயம் என அழைக்கப்படும் எஞ்ஜின் புதிதாக இருப்பதே இந்த சிக்கலுக்கான மிக முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆமாங்க, எஞ்ஜினுள் இருக்கும் உதிரிபாகங்கள் கணிசமான அளவு தேய்மானம் கண்டால் மட்டுமே அதனால் மிக சிறப்பாக இயங்க முடியும். அதாவது, நல்ல மைலேஜ் தரும் அளவிற்கு அதனால் இயங்க முடியும்.
பிஸ்டன், கேம்ஷாஃப்ட், கிராங்க்ஷாஃப்ட் போன்ற பல்வேறு பாகங்களால் ஆனதே எஞ்ஜின். இந்த பாகங்களின் மேற்பரப்பில் அசுத்தமான படிமங்கள் இருக்கும். இவை வழு வழுப்பாக இயங்குவதை தவிர்க்கக் கூடிய பிசிறுகள் ஆகும். இவை எஞ்ஜின் இயங்க இயங்கவே தேயும். அவ்வாறு முழுமையாக ஓரளவு தேயும்பட்சத்திலேயே வாகனத்தின் உண்மையான மைலேஜ் திறன் வெளிப்படும். உதாரணமாக ஓர் புதிய வாகனம் 800 கிமீ முதல் 1,200 கிமீட்டர் தூர பயணத்திற்கு பின்னரே அதன் உண்மையான மைலேஜ் திறனை வழங்கத் தொடங்கும்.
ஓர் புதிய வாகனத்தின் எஞ்ஜினில் உள்ள தேவையற்ற மேற்பரப்புகள் தேய்மானம் அடைய குறைந்தபட்சம் இத்தனை கிமீ பயணம் என்பது கட்டாய தேவையாக இருக்கின்றது. இதனால்தான் ஒரு புதிய வாகனம் வாங்கிய பின்னர் அதில் ஓர் லாங் டிரைவ் செய்துவிடுகின்றனர். இது விரைவில் எஞ்ஜினின் மேற்பரப்பில் இருக்கும் தேவையற்ற பிசிறுகள் போன்றவற்றை தேய செய்யும். இதற்கு பின்னர் நீங்களே உங்களுடைய புதிய வாகனம் அதிகம் மைலேஜ் தருவதை உணர்வீர்கள்.
அதேநேரத்தில், புதிய வாகனங்களை எந்த காரணம் கொண்டு அடி அடியென வெளுத்து வாங்கிவிட கூடாது. இது வாகனத்தின் ஆயுட்காலத்திற்கு உகந்தது அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எஞ்ஜினின் பாகத்தில் தேவையற்ற மேற்பரப்புகள், எஞ்ஜினின் இயக்கத்தைக் கடினமாக்குகின்றன. இதன் காரணத்தினாலேயே வழக்கமானதைக் காட்டிலும் அதிக எரிபொருள் உட் கொள்ளுதல் ஏற்படுகின்றது. முதல் சர்வீஸின்போது ஆயிலை மாற்றுகிறீர்கள் என்றால் அந்த ஆயிலிலேயே நீங்கள் செக் செய்யலாம்.
அதிக கசடுகள் வெளியேறி இருப்பதை உங்களால் காண முடியும். குறிப்பாக, எஞ்ஜினின் கூறுகளில் படிந்திருந்த தேவையற்ற கசடுகள் மற்றும் அதிகளவு உலோக படிமங்கள் வெளியேறி இருக்கும். இந்த காரணத்திற்காகவே இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் முதல் 1000 கிமீ பயன்பாட்டிற்கு பின்னர் அந்த வாகனத்தைக் கட்டாயம் சர்வீஸ் விட வேண்டும் என பரிந்துறைக்கின்றனர். முதல் சர்வீஸின்போது எஞ்ஜின் ஆயிலை மாற்றுவதே மிக முக்கியமான பணி ஆகும்.
இவ்வாறு செய்யும்போது எஞ்ஜினுக்குள் தேங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகள் ஆயில் வெளியேற்றத்தின் வாயிலாக வெளியேற்றப்படும். மேலும், முதல் சர்வீஸுக்கு பின்னர் உங்கள் புதிய டூ-வீலர் அதிகம் மைலேஜ் தருவதையும் உங்களால் உணர முடியும். இதற்கு பின்னரும் மைலேஜ் தரவில்லை என்றால் உங்கள் வாகனத்தில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் பற்றிய புகாரை சர்வீஸ் மையத்திற்கு தெரிவிப்பதே நல்லது. அதேநேரத்தில், புதிய இருசக்கர வாகனத்தின் முதல் மற்றும் இரண்டு சர்வீஸ் வரை அதிக வேகத்தில் இயக்கக் கூடாது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்வது அவசியம். கடுமையான பயன்பாட்டினால் தேவைக்கு அதிகமாக எஞ்ஜின் பாகங்கள் தேய்மானத்திற்கு ஆளாக நேரிடலாம். ஆகையால், சிறிது நாட்களுக்கு வாகனத்தை பூஜை போட வாங்கியதைப் போலவே பயன்படுத்த வேண்டும். முதல் இரண்டு சர்வீஸுக்கு பின்னர் நீங்கள் நினைத்த வேகத்திற்கு, குறிப்பாக, சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் பயணிக்கலாம்.


Click it and Unblock the Notifications








