பலரோட நெடுநாள் எதிர்பார்ப்பு! இப்பதான் டெலிவரி தொடங்கியே இருக்கு! குஷியாக வந்து வாங்கிய கஷ்டமர்கள்!
இந்தியர்கள் பலரின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது என்ன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? அதன் சிறப்புகள் என்ன? என்பது குறித்த தகவலை பார்க்கலாம், வாங்க.
இந்தியர்கள் மத்தியில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு தொடர்ச்சியாக வரவேற்பு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த சூழலை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் மின்சார வாகன உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை நாட்டில் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், ரிவர் எனும் நிறுவனத்தினால் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக இன்டீ இருக்கின்றது.

இது ஓர் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டராக இன்டீ-யே இருக்கின்றது. இதன் டெலிவரி பணிகளே தற்போது தொடங்கி இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக வாடிக்கையாளர்கள் ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவரி பெறும் படங்கள் வெளியாகி உள்ளன.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கிவிட்ட நிலையில், உற்பத்தி ஆகஸ்டு மாதத்திலேயே தொடங்கின. இந்த நிலையிலேயே, இப்போதே அதன் டெலிவரி பணிகள் தொடங்கி இருக்கின்றன. அதாவது, இந்த ஆண்டே முடிவடைய இருக்கின்ற நிலையில் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

ரிவர் நிறுவனத்தின் இந்த செயல் அதன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, விரைவில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை அவர்கள் புதிய வாகனத்துடன் கொண்டாடக் கூடிய சூழலை ரிவர் உருவாக்கிக் கொடுத்து இருக்கின்றது. ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1.25 லட்சம் ஆகும்.
இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேநேரத்தில் இப்போது கர்நாடகா மாநிலத்தில் மட்டுமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கி இருக்கின்றன. கார்களில் எஸ்யூவி ரகம் இருப்பதைப் போல, இது ஸ்கூட்டர்களின் எஸ்யூவி ரகம் என நிறுவனம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு நிறுவனம் குறிப்பிட அதிக இட வசதியை ரிவர் இன்டீ கொண்டிருப்பதே காரணமாக இருக்கின்றது.
இருக்கைக்கு அடியிலும், முன் பக்கம் கால் வைக்கும் பகுதியிலும் மிகப் பெரிய இட வசதிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதன் இருக்கைக்கு அடியில் இரண்டு ஹெல்மெட்டுகளைகூட வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹெல்மெட்டை மட்டுமில்லைங்க ஒரு வாரத்துக்கு வீட்டுக்கு தேவையான காய்கறிகளைக்கூட இந்த ஸ்கூட்டரின் ஸ்டோரேஜில் வைத்துக் கொள்ள முடியும்.
20 அங்குல நீளமுடைய ஃபூட்போர்டையே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கின்றது. 43 லிட்டர் பூட் ஸ்பேஸ், 12 லிட்டர் குளோவ் பாக்ஸ் ஸ்டோரேஜையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கின்றது. தோற்றத்திலும் தனித்துவமாக இந்த ஸ்கூட்டர் தனித்துவமானதாகக் காட்சியளிக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 120 கிமீ தூரம் ரேஞ்ஜ் தரும்.
இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 4 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மின்சார மோட்டாரை பொருத்த வரை 6.7 kWh எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 26 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆகும்.
மேலும், இதனால் 3.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்ட முடியும். பிரேக்கிங் அம்சத்தைப் பொருத்த வரை 240 மிமீ டிஸ்க் பிரேக் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் 200 மிமீ டிஸ்க்கும் கொடுக்கப்ப்டடு இருக்கின்றது. மிக சிறந்த சஸ்பென்ஷன் செட்-அப்பிற்காக இந்த வாகனத்தின் முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக்கும், பின் பக்கத்தில் ட்வின் ஹைட்ராலிக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. அதற்கேற்ப வாகன உற்பத்தியாளர்களுக்கும் ஒருத்தருக்கு போட்டிப் போட்டுக் கொண்டு புதிய எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்குக் கொண்டு வந்துக் கொண்டிருக்கின்றனர். ஆகையால், வரும் நாட்களில் இந்த பிரிவு இன்னும் பல மடங்கு சூடுபிடித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








