பைக்குகள் விற்பனையில் அசூர வளர்ச்சியில் ராயல் என்பீல்டு - ஒரு வருடத்தில் இவ்வளவு வித்தியாசமா!!
இந்திய இருசக்கர வாகன சந்தையை பொறுத்தவரையில் கடந்த சில வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவிலான வளர்ச்சியை தொடர்ச்சியாக கண்டுவரும் நிறுவனம் என்று பார்த்தால், அது ராயல் என்பீல்டு தான். 2027ஆம் ஆண்டு வரையில் ஒவ்வொரு 3 மாத கால இடைவெளியிலும் ஒரு புதிய மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்படும் என கடந்த 2021ஆம் ஆண்டில் அறிவித்தது.
அப்போதில் இருந்து அறிவித்தப்படி ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வகையில் முற்றிலும் புதிய பைக்குகள் மட்டுமின்றி ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மோட்டார்சைக்கிள்களும் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த யுக்தி ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு நல்ல இலாபத்தை கொடுத்துள்ளதா என்பது தெரியவில்லை, ஆனால் பைக்குகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

இதனை கடந்த 2023 ஜனவரி மாத விற்பனை நிலவரமும் வெளிக்காட்டுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரியில் 49,726 ராயல் என்பீல்டு பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 67,702 ராயல் என்பீல்டு பைக்குகள் விற்கப்பட்டுள்ளன. இந்த இரு விற்பனை எண்ணிக்கைகளுக்கும் இடையில் 17,976 வித்தியாசம் உள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், புதிய ஹண்டர் 350 பைக் ஆகும்.
கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்ட ஹண்டர் 350 பைக் கடந்த ஜனவரியில் மொத்தம் 16,574 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை 2022 ஜனவரியில் இல்லை. எடை குறைவான ராயல் என்பீல்டு பைக்காக, குறைவான விலையில் கொண்டுவரப்பட்டுள்ள ஹண்டர் 350 தான் வருங்காலத்தில் ராயல் என்பீல்டின் பிரதான விற்பனை மாடலாக விளங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இப்போதைக்கு கிளாசிக் 350 தான் எப்போதும்போல் அதிகம் விற்பனையாகும் ராயல் என்பீல்டு பைக்காகும். கடந்த 2023 ஜனவரி மாதத்தில் மொத்தம் 26,134 கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2022 ஜனவரியிலும் (26,775) ஏறக்குறைய இதே எண்ணிக்கையிலான ராயல் என்பீல்டு பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கிளாசிக் 350 மற்றும் ஹண்டர் 350 பைக்குகள் ராயல் என்பீல்டின் கடந்த மாத விற்பனையில் முதல் 2 இடங்களை பிடிக்க, 3வது இடத்தில் புல்லட் 350 உள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் 350சிசி பைக்குகளை புதிய ஜே பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்க ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் புல்லட் 350 மற்றும் அதன் எலக்ட்ரிக் ஸ்டார்ட் வெர்சனாக பார்க்கப்படும் எலக்ட்ரா 350 பைக்குகள் மட்டும் இன்னமும் பழைய வெர்சனிலேயே உள்ளன. இதில் புல்லட் 350 விரைவில் புதிய தோற்றத்திற்கு அப்டேட் செய்யப்பட உள்ளது. இருப்பினும் தற்போதும் புல்லட் 350 பைக்குகளின் விற்பனையில் பெரிய அளவில் குறை இல்லை.

கடந்த ஜனவரியில் 9,685 புல்லட் 350 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் இந்த எண்ணிக்கை 31.70% அதிகம் ஆகும். 4வது இடத்தில் மீட்டியோர் 350 பைக் 7,622 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. புதிய ஜே-பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மோட்டார்சைக்கிளான மீட்டியோர் 350 கடந்த 2020இன் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது.
அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் விற்பனை சூடுப்பிடித்தாலும், தற்சமயம் இந்த பைக்கின் விற்பனை தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கிறது. 2022 ஜனவரியில் 8,460 யூனிட்கள் இந்த பைக் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த ஜனவரியில் 7,622 மீட்டியோர் 350 பைக்குகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. இதற்கடுத்து எலக்ட்ரா 350 பைக் 7,622 யூனிட்களின் விற்பனை உடனும், ஹிமாலயன் 2,499 யூனிட்களின் விற்பனை உடனும், 650 ட்வின்ஸ் பைக்குகள் 980 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டும் உள்ளன.


Click it and Unblock the Notifications








