இதுக்காக தான் இத்தனை நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தோம்! ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியை சொன்ன ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பொருளாதார அறிக்கையை வெளியிடும் போது அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எலெக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்கும் திட்டம் குறித்துப் பேசியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக தனக்கென ஒரு இடத்தை பிடித்துச் சிறப்பான விற்பனையைப் பெற்று வரும் நிறுவனம் ஆகும். கிட்டத்தட்ட இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் போட்டியே இல்லை எனச் சொல்லி விடலாம். விலை மற்றும் அளவுகளில் இந்நிறுவனத்தின் தயாரிப்பிற்குப் போட்டியிருக்கலாம். ஆனால் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மார்கெட்டில் தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில் இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக எலெக்ட்ரிக் பைக்கை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறித்து செய்திகள் வெளியாகியிருந்தது. குறிப்பாக புல்லட் பைக்கின் எலெட்ரிக் வெர்ஷனை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகப் பேச்சுகள் எல்லாம் கூட இருந்தன. இது குறித்த அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது. இதனால் பலர் இதைப் புரளி என்று கூட பேசி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்தார்த்தா லால் ராயல் என்ஃபீல்டின் பொருளாதார நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டார். அப்பொழுது அவர் ஸ்டார் ஃப்யூச்சர் என்ற நிறுவனத்துடன் இணைந்து ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கி வருவதை உறுதி செய்தார். இந்த இரு நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இணைந்துள்ளதாகவும் ஸ்டார் ஃப்யூச்சர் நிறுவனம் 50 மில்லியன் யூரோ பணத்தை இதற்காக முதலீடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ராயல் என்ஃபீல்டு பைக்குகளை மட்டுமல்ல சொந்தமாக பேட்டரி மற்றும் மோட்டாரையும் சொந்தமாகத் தயாரிக்கவுள்ளதாகவும், பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டத்தையும் சொந்தமாக உருவாக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கான சப்ளை பார்ட்னர்களுடனான ஒப்பந்தம் மற்றும் தயாரிப்பு லைன்களை கட்டமைத்தால் ஆகிய பணிகளைத் தீவிரமாக்க முடிவு செய்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் நியோ-ரெட்ரோ டிசைனில் சில மார்டனான டச்களை கொண்டு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ கோவிந்தராஜன் பேசிய போது: "தற்போது எங்கள் சப்ளை பார்ட்னர்களுடனான ஒப்பந்தத்தில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறோம். அதன் பின் தான் எங்கு இந்த பைக்கை தயாரிக்கப்போகிறோம் என்பதை முடிவு செய்வோம்.
இவி தயாரிப்பு ஆலையைப் பொருத்தவரை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் கூட தயாரிக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். அதன் தேவை ஏற்படும் போது வேகமாக மற்றொரு ஆலையையும் திறக்க தயாராக இருக்க இப்பவே திட்டமிடுகிறோம். இது போக பேட்டரி மற்றும் மோட்டார் தயாரிப்பையும் நாங்களே செய்யவுள்ளோம். இன்னும் 6-8 மாதங்களில் இது குறித்த தெளிவான தகவல் நமக்குக் கிடைக்கும்" எனக் கூறினார்.
இந்த ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக்குகள் எப்பொழுது விற்பனைக்கு வரும் என்ற விபரத்தை அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் நமக்கு கிடைத்த தகவலின் படி இந்த எலெக்ட்ரிக் பைக்குகள் விற்பனைக்கு வரக் குறைந்த பட்சம் 2 ஆண்டுகளாவது ஆகும் எனத் தெரிகிறது.
இது போக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்தாண்டு ஹன்டர் 350 என்ற புதிய பைக்கையும், இந்தாண்டு சூப்பர் மீட்டியோர் 650 என்ற பைக்கையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஹன்டர் 350 இளைஞர்களைக் கவரும் வகையில் சிட்டிக்குள் பயணிப்பவர்கள் அதிகம் விரும்பும் பைக்காகவும், சூப்பர் மீட்டியோர் 650 க்ரூஸ் ரக பைக்காக நீண்ட தூரப் பயணத்திற்கு ஏற்ற பைக்காகவும் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரெண்டிற்கு ஏற்றார் போல மாறவில்லை என்றால் மக்கள் நம்மை மறந்துவிடுவார்கள். இதை நன்றாகப் புரிந்து கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன டிரெண்டில் தன் காலடித் தடத்தைப் பதிக்க முயற்சி செய்கிறது. இது நிச்சயம் சிறந்த முயற்சி தான். இதன் தயாரிப்புகள் வரும் போது மக்கள் வரவேற்பு நிச்சயம் அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








