உலகின் தவிர்க்க முடியாத பைக் நிறுவனமாக மாறிவரும் ராயல் என்பீல்டு!! போட்டிக்கு கூட யாரும் இல்லை...
இந்தியாவின் முன்னணி பைக் நிறுவனங்களுள் ஒன்று ராயல் என்பீல்டு என்றால் அது மிகையில்லை. அத்தகைய நிறுவனம் கடந்த மே மாதத்தில் விற்பனை செய்த பைக்குகள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இங்கிலாந்தில் தோன்றி தற்சமயம் சென்னை பைக் நிறுவனமாக பலரால் அறியப்பட்டு வரும் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் பல்வேறு நாடுகளில் வரவேற்பு உள்ளது. ராயல் என்பீல்டின் உள்நாட்டு விற்பனையில் 350சிசி பைக்குகள் பிரபலமாக உள்ள நிலையில், 650சிசி பைக்குகள் அதிகமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த யுக்தி ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு நல்ல இலாபத்தை கொடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த மே மாதத்தில் 350சிசி-இல் மட்டும் மொத்தம் 69,038 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதுவே 2022 மே மாதத்தில் வெறும் 53,835 பைக்குகளை மட்டுமே ராயல் என்பீல்டால் விற்க முடிந்தது. இந்த வகையில் ராயல் என்பீல்டின் 350சிசி பைக்குகள் விற்பனை 28.24% அதிகரித்துள்ளது.
இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக சமீபத்திய அறிமுகமான ஹண்டர் 350 பைக்கை சொல்ல வேண்டும். ஏனெனில் குறைவான எடையில், குறைவான விலையில் கடந்த 2022ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக்கிற்கு உலகம் முழுவதிலும் இருந்தே வரவேற்பு கிடைத்து வருகிறது. ராயல் என்பீல்டின் மற்ற 350சிசி பைக்குகள் கிளாசிக் 350, புல்லட் 350, மீட்டியோர் 350 மற்றும் எலக்ட்ரா 350 ஆகும்.

350சிசி-க்கு மேல் அதிக சிசி என்ஜின் கொண்ட பைக்குகளை கடந்த மே மாதத்தில் 8,423 யூனிட்கள் ராயல் என்பீல்டு விற்றுள்ளது. ஆனால் இந்த பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை கடந்த ஆண்டு மே மாதத்தில் 9,808 ஆக பதிவாகி இருந்தது. 350சிசி-க்கு மேல் அதிக சிசி என்ஜின் கொண்ட ராயல் என்பீல்டு பைக்குகளாக ஹிமாலயன், ஸ்க்ராம் 411, இண்டர்செப்டர் 650, காண்டினெண்டல் ஜிடி650 மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.
ஏற்கனவே கூறியதுபோல் இவை இந்தியாவில் சில ஆயிரங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன என்றாலும், இவற்றின் முதன்மையான டார்க்கெட் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிநாட்டு சந்தைகளே ஆகும். ஒட்டு மொத்தமாக 77,461 பைக்குகளை இந்தியா உள்பட உலகளவில் கடந்த மே மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் 2022 மே மாதத்தில் 63,643 பைக்குகளை மட்டுமே உலக அளவில் ராயல் என்பீல்டால் விற்க முடிந்திருந்தது.

இதில் உள்நாட்டு விற்பனை, அதாவது இந்தியாவில் விற்கப்பட்ட ராயல் என்பீல்டு பைக்குகள் 70,795 ஆகும். ஒரு மாதத்தில் இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனம் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பைக்குகளை விற்று இருப்பது இதுவே முதல்முறை. 2022 மே மாதத்தில் கூட வெறும் 53,525 பைக்குகளை மட்டுமே விற்று இருந்தது. ஆனால், 2022 மே மாதத்தில் 10,118 ராயல் என்பீல்டு பைக்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மே மாதத்தில் வெறும் 6,666 பைக்குகளை மட்டுமே விற்று இருந்தது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ராயல் என்பீல்டு உலகளவில் ஓர் தவிர்க்க முடியாத மோட்டார்சைக்கிள் நிறுவனமாக மாறி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு 50,000 ராயல் என்பீல்டு பைக்குகள் ஒரு மாதத்தில் விற்பனையாகினாலே பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் இன்று ஒரு மாதத்தில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பைக்குகள் விற்பனையாகுகின்றன. இதற்கு ராயல் என்பீல்டின் புத்திசாலித்தனமான திட்டங்கள் தான் முக்கிய காரணம் என சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









