டாடாவின் இந்த புதிய எலக்ட்ரிக் சைக்கிளை வாங்க போட்டி போட போறாங்க!! விலையும் ரொம்ப குறைவு
டாடாவின் புதிய எலக்ட்ரிக் சைக்கிளாக ஸ்ட்ரைடர் ஸீட்டா பிளஸ் இ-பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விலை உள்பட இந்த எலக்ட்ரிக் சைக்கிளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.
டாடா சன்ஸ் குழுமத்தின் கீழ் பல்வேறு பிராண்ட்கள் செயல்படுகின்றன. இதில் ஒன்று ஸ்ட்ரைடர் (Stryder) ஆகும். ஸ்ட்ரைடரின் முழு உரிமையையும் டாடா குழுமம் கொண்டுள்ளது. ஸ்ட்ரைடர் ஆனது எலக்ட்ரிக் பை-சைக்கிள்களை விற்பனை செய்வதற்காக டாடா குழுமம் பயன்படுத்தும் பிராண்ட் ஆகும். இதன் ஸீட்டா வரிசையில் புதிய ஸீட்டா பிளஸ் என்ற எலக்ட்ரிக் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

நம்பகமான, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையை தேடும் நபர்களுக்கு பொருத்தமான அன்றாட வாகனமாக ஸ்ட்ரைடர் ஸீட்டா பிளஸ் எலக்ட்ரிக் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பை-சைக்கிளின் விலையாக ரூ.26,995 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே.
அதன்பின் ரூ.6,000 அதிகரிக்கப்பட்டு, ரூ.32,995 என்ற விலையிலேயே ஸ்ட்ரைடர் ஸீட்டா பிளஸ் எலக்ட்ரிக் சைக்கிள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ஸீட்டா பிளஸ் எலக்ட்ரிக் சைக்கிளை ஸ்ட்ரைடரின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். ஸ்ட்ரைடர் பிராண்டிற்கு நாடு முழுவதும் 4,000க்கும் அதிகமான சில்லறை விற்பனை மையங்களும் உள்ளன.
இந்த எலக்ட்ரிக் சைக்கிளின் அறிமுகத்தின்போது பேசிய ஸ்ட்ரைடர் நிறுவனத்தின் முதன்மை வணிக அதிகாரி ராகுல் குப்தா, "சைக்கிள் துறையில் முன்னணி நிறுவனமாக, நாட்டில் மாற்று போக்குவரத்தை ஊக்குவிப்பதே எங்கள் முயற்சி. ஸ்டைலான மற்றும் திறமையான போக்குவரத்து முறையை தேடும் நபர்களுக்கு ஸீட்டா பிளஸ் மூலம் ஸ்ட்ரைடர் நிறுவனம் நம்பகமான, செலவு குறைந்த மற்றும் சூற்றுச்சூழலுக்கு ஏற்ற தீர்வை வழங்குகிறது" என்றார்.
ஸ்ட்ரைடர் ஸீட்டா பிளஸ் எலக்ட்ரிக் சைக்கிளில் 36 வோல்ட்/ 6 ஆம்பியர் என்ற அதிதிறன்மிக்க பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி மூலமாக 216 வாட்-ஹவர் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியுமாம். இந்த பேட்டரி எந்தவொரு சாலையிலும் சைக்கிளுக்கு போதுமான இயக்க ஆற்றலை வழங்கும் என கூறும் ஸ்ட்ரைடர் நிறுவனம், ஸீட்டா பிளஸின் பேட்டரி திறன் ஆனது முந்தைய ஸீட்டா இ-பைக்கை விட அதிகம் எனவும் கூறியுள்ளது.

பேட்டரியின் ஆற்றலில் மட்டும் அதிகப்பட்சமாக 30கிமீ தொலைவிற்கு சைக்கிள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 1 கிமீ-க்கு வெறும் 10 பைசா மட்டுமே மின்சாரத்திற்காக செலவாகும். ஸீட்டா பிளஸின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப 3- 4 மணிநேரங்கள் தேவைப்படுமாம். பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துப்போனாலும், பெடலை உபயோகித்து சைக்கிளை இயக்கி செல்ல முடியும்.
இந்த எலக்ட்ரிக் சைக்கிளின் டாப்-ஸ்பீடு 25kmph ஆகும். ஸ்டீல் ஹார்ட்டெயில் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்ட்ரைடர் ஸீட்டா பிளஸ் எலக்ட்ரிக் சைக்கிள் மெல்லியதான & மாடர்ன் டிசைனில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ-கட் பிரேக்குகள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் இந்த எலக்ட்ரிக் சைக்கிளின் இரு சக்கரங்களிலும் வழங்கப்பட்டுள்ளன.
டாடா குழுமத்தில் செயல்படும் ஸ்ட்ரைடர் நிறுவனத்தில் அலாய் இ-சைக்கிள், மவுண்டெயின் சைக்கிள், எஸ்.எல்.ஆர், குழந்தைகளுக்கான சைக்கிள் என ஏகப்பட்ட பை-சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் தற்போது புதியதாக, ஸீட்டா பிளஸ் இணைந்துள்ளது. அதுமட்டுமின்றி, சைக்கிள்களுக்கு தேவையான பைக் ஆக்ஸஸரீகளும் கூட ஸ்ட்ரைடர் ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்கள் பசுமையான போக்குவரத்திற்கு வழிவகுப்பவை என்பதால், எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அவ்வாறான எலக்ட்ரிக் வாகனங்கள், சைக்கிள் வடிவில் பெடல்கள் உடன் விற்பனைக்கு வருவது வாடிக்கையாளர்களின் உடல் நலத்தையும் பேணும்.


Click it and Unblock the Notifications








