சுஸுகியின் இ20 பெட்ரோலில் ஓட கூடிய டூ-வீலர்கள் அறிமுகம்... பழைய விலையிலேயேதான் விற்க போறாங்களா?..
சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle India Pvt. Ltd), நிறுவனம் அதன் இ20 (E20) பெட்ரோலில் ஓடக் கூடிய இருசக்கர வாகன மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த டூ-வீலர்களின் சிறப்புகள் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle India Pvt. Ltd), இ20 (E 20) பெட்ரோலில் ஓடக் கூடிய இருசக்கர வாகன மாடல்கள் சிலவற்றை இந்திய டூ-வீலர் சந்தையில் தற்போது விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

நிறுவனத்தின் புகழ்பெற்ற டூ-வீலர் மாடல்களாக பர்க்மேன் ஸ்ட்ரீட் இஎக்ஸ் (Burgman Street EX), வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் (V-Strom SX), ஜிக்ஸெர் 250 (Gixxer 250) மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 (Gixxer SF 250) ஆகியவை இருக்கின்றன. இந்த மாடல்களின் இ20 பெட்ரோலில் ஓடும் வாகனங்களே தற்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.
சமீபத்திலேயே சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் ஜிக்ஸெர் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் மோட்டார்சைக்கிள், அக்செஸ் 125, பர்க்மேன் ஸ்ட்ரீட் மற்றும் அவெனிஸ் ஆகியவற்றின் இ20 வெர்ஷனை விற்பனைக்குக் களமிறக்கியது. இவற்றின் அறிமுகத்தைத் தொடர்ந்து எஞ்சி இருந்த மற்ற மாடல்களையும் இ20 வெர்ஷனில் அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் அதன் அனைத்து தயாரிப்புகளும் தற்போது இ20 வெர்ஷனாக மாறி இருக்கின்றன. இ20 தர எரிபொருளில் 80 சதவீதம் பெட்ரோல் உடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டு இருக்கும். இதுவே இ20 தர எரிபொருள் ஆகும். இதில் ஓடக் கூடியதாகவே சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த தயாரிப்புகளும் தற்போது மாறி இருக்கின்றன.
இந்தியா கச்சா எண்ணெய்க்காக அதிகம் வெளிநாடுகளையே நம்பிக் கொண்டு இருக்கின்றது. ஆகையால், அதிக அளவில் அவை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இதைக் குறைக்கும் பொருட்டும், காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டே மத்திய அரசு இ20 பெட்ரோலை நாட்டில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இதன் வாயிலாக இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவைக் கணிசமாக குறைய இருக்கின்றது. இத்தகைய செயல்பாட்டில் தங்களுடைய பங்களிப்பை வழங்கும் விதமாகவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களுடைய இ20 எரிபொருளில் ஓடக் கூடிய வாகனங்களை இந்திய சந்தையில் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. இதன்படி, சுஸுகி மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம் தன்னுடைய அனைத்து தயாரிப்புகளையும் இ20 வாகனங்களாக மாற்றி இருக்கின்றது.
தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இ20 தர பர்க்மேன் ஸ்ட்ரீட் இஎக்ஸ், வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ், ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 இருசக்கர வாகனங்கள் இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இவை அனைத்தும் நிறுவனத்தின் பிரீமியம் தர டூ-வீலர்கள் ஆகும். இதில், புதிய மாசு உமிழ்வு விதியை ஆதரிக்கும் விதமாக, மாசு உமிழ்வைக் கண்டறியும் கருவியையும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் சேர்த்து இருக்கின்றது. இதன் விலைகள் பற்றிய விபரம் இப்போது வரை வெளியிடப்படவில்லை.
தற்போது அறிமுகத்தை மட்டுமே சுஸுகி நிறுவனம் செய்திருக்கின்றது. மேலும், விலைகள் பற்றிய எந்த தகவலையும் சுஸுகி வெளியிடாத காரணத்தினால் பழைய விலைகளிலேயே இ20 தர டூ-வீலர்கள் விற்பனைக்குக் கிடைக்குமோ என்கிற எண்ணம் எழும்பியிருக்கின்றது. அதேவேளையில், புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதால் கட்டாயம் இதன் விலையில் மாற்றங்கள் செய்யப்படும் என ஒரு தரப்பு கூறி வருகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் இ20 தர எரிபொருளில் ஓடக் கூடிய வாகனங்களாக மாறி இருக்கின்றன. ஆகையால், வெகுவிரைவில் இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி கணிசமான அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், விரைவில் பெட்ரோல் விலைக் கணிசமாக குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









