இந்தியாவில் இந்த ஜப்பான் நிறுவனத்துக்கு இப்படியொரு நிலைமையா? தொழிற்சாலை அதிரடியாக மூடப்பட்டது!!
சைபர் அட்டாக் எனப்படும் கணினி வாயிலாக ஹேக்கர் மூலம் நடத்தப்படும் திருட்டினால் தனது நிறுவனத்தின் தொழிற்சாலையை 1 வார காலத்திற்கு மூடுவதாக பிரபலமான 2-வீலர் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. எந்த 2-வீலர் நிறுவனம் அது? இதனால் அந்த நிறுவனத்திற்கு எந்த அளவிற்கு நஷ்டம் என்பதை பற்றி இந்த செய்தியில் இனி பார்க்கலாம்.
காலம் மாற, மாற அதற்கேற்ப திருட்டுகளும் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டுதான் வருகின்றன. அந்த வகையில் இந்த காலத்தில் கணினி வாயிலாக நடத்தப்படும் திருட்டுக்கு 'சைபர் அட்டாக்' என பெயர். கணினியில் சேகரிக்கப்படும் தரவுகளை பாதுகாக்க பல்வேறு விதமான ஆண்டி-வைரஸ் சாஃப்ட்வேர்களும், வேறு சில முறைகளும் பின்பற்றப்பட்டாலும், சைபர் அட்டாக் நடப்பது ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இதில் தற்போது பாதிக்கப்பட்டு இருப்பது, பிரபல ஜப்பானிய 2-வீலர் நிறுவனமான சுஸுகி மோட்டார்சைக்கிள் ஆகும். சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் குர்கான் நகரத்தில் தொழிற்சாலை உள்ளது. வருடத்திற்கு 10 இலட்ச 2-வீலர்களை தயாரிக்கும் அளவிற்கு திறன் கொண்டதாக இருக்கும் இந்த தொழிற்சாலையை அடுத்த 1 வார காலத்திற்கு சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் மூடியுள்ளது.
இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், சுஸுகி மோட்டார்சைக்கிளின் தொழிற்சாலை இன்னும் ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். ஏனெனில் கடந்த மே 10ஆம் தேதியில் இருந்தே தங்களது தொழிற்சாலை மூடப்பட்டு இருப்பதாக அங்கு வேலை செய்பவர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தமாக 15 நாட்களுக்கும் அதிகமாக சுஸுகி மோட்டார்சைக்கிளின் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

இதற்கு காரணமாக சைபர் அட்டாக் கூறப்படுகிறது. 15க்கும் அதிகமான நாட்களில் 20,000க்கும் அதிகமான 2-வீலர்களை சுஸுகி நிறுவனத்தால் உற்பத்தி செய்ய முடியும். கடந்த மே 10ஆம் தேதியில் தொழிற்சாலையை மூடிய சுஸுகி மோட்டார்சைக்கிள் அடுத்த மே 21 -27 வாரத்தில் விநியோகஸ்தர்கள் உடன் வருடாந்திர கலந்தாய்வு கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் தொழிற்சாலை மூடப்பட்ட அதே காரணத்திற்காக இந்த கலந்தாய்வு கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதனால் தொழிற்சாலையை சுஸுகி நிறுவனம் இப்போதைக்கு திறப்பதுபோல் தெரியவில்லையே என தொழிற்சாலை பணியாளர்கள் பயந்து கொண்டிருந்த நிலையில், அதற்கேற்றாற் போல் தொழிற்சாலை இன்னும் 1 வார காலத்திற்கு திறக்கப்படாது என்கிற அறிவிப்பு சுஸுகி சார்பில் இருந்து வெளிவந்துள்ளது.

இதுகுறித்து சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு தெரியும், உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு துறைக்கு புகார் அளித்துள்ளோம். இந்த விஷயம் தற்சமயம் விசாரணையில் உள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நேரத்தில் இதுகுறித்த கூடுதல் விவரங்களை எங்களால் வழங்க முடியாது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், சைபர் அட்டாக்கை சுஸுகி மோட்டார்சைக்கிள் மட்டுமல்ல, உலகின் மிக பெரிய நிறுவனங்கள் கூட சந்திந்துள்ளன. இதில் இருந்து மீண்டுவர அரசாங்கத்தை அணுக வேண்டியது அவசியமாகும். அதை தான் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனமும் செய்துள்ளது. சைபர் அட்டாக்கில் இருந்து இந்த ஜப்பானிய 2-வீலர் நிறுவனம் மீண்டு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









